Published : 13 Feb 2016 08:41 AM
Last Updated : 13 Feb 2016 08:41 AM
கருணைக் கொலை குறித்த நிலைப்பாட்டையும் சட்டத் தீர்மானங் களையும் கையிலெடுக்கும் காலம் வந்துவிட்டது. சட்ட ஆணையம் 241-வது அறிக்கையில் அளித்த வரைவு மசோதாவை அமல்படுத்துவது சாத்தியமா என மத்திய அரசு தற்போது பரிசீலித்துவருகிறது. ஆனால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மிகவும் நுட்பமான ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்துவதில், பல அடுக்குகளில் சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும் என்பதையும் சட்ட அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருணைக் கொலை என்னும் சொல்லை மருத்துவர்கள் உச்சரிப்பதே மருத்துவத் துறையின் நீதியான ‘ஹிப்போகிரடிக் உறுதிமொழி’க்குப் புறம்பானது எனப் பத்தாண்டுகளுக்கு முன்னால் அரசாங்கம் நம்பியது. அதிலும் மன அழுத்தம் காரணமாகத் தங்களை மாய்த்துக்கொள்ளும் மனநிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுவதை ஆமோதிக்கும் செயலுக்குப் பெயர்தான் கருணைக் கொலை என்றது. ஆனால், இத்தகைய கோட்பாடுகளைத் தாண்டி, படுத்தபடுக்கையில் நோய்வாய்ப்பட்டவர்களும் மீண்டு எழ முடியாத நிலையில் நோயுற்றுக் கிடப்பவர்களும் கண்ணியமாக மரணத்தை தழுவ சட்டபூர்வமான உதவிகள் அளிக்க வேண்டும் என மிகச் சமீபத்தில் இந்திய அரசு சிந்திக்கக் தொடங்கியது. இத்தகைய மாற்றுச் சிந்தனை உதிக்கக் காரணமாக அமைந்தது 2011-ல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்புதான்.
கண்ணியமான மரணத்துக்கும் சமூக நீதிக்கும் இடையில் இழையோடும் பல சிக்கல்களை மனிதாபிமான அடிப்படையிலும் தொலைநோக்குப் பார்வையிலும் அது விவாதித்தது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியவர் 42 ஆண்டுகளாக அசைவற்றுக் கிடந்த அருணா ஷன்பாக். பலாத்காரம் செய்யப்பட்டு 1973-லிருந்து 2015 வரை கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா ஷன்பாக்கின் வாழ்வும் துயரமான மரணமும் ‘ஏன் கருணைக் கொலை கூடாது?’ எனும் கேள்வியை வலுவாக எழுப்பியது. அதே சமயம், 2011 தீர்ப்பு சுட்டிக்காட்டும் புள்ளிகள் கவனத்துக்குரியது. நெடுங்காலமாக செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற உயிர் வாழத் தேவையான மருத்துவ உதவிகளால் மட்டுமே உயிர்நீட்டிக்கப்படும் ஒரு நபருக்கு, அத்தகைய உதவிகளை நிறுத்தி அவர் மரணத்தைத் தழுவ அனுமதிப்பதைக் கருணைக் கொலையாக ஏற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து, தீராத நோயால் துடிதுடிக்கிறார் என்பதற்காக ஒருவருக்கு எதிர்மறையான மருந்துகளை செலுத்திக் கொல்வதை ஒருபோதும் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது என்றது இந்தத் தீர்ப்பு.
கருணைக் கொலை கோரப்படும் பட்சத்தில், உரிய மருத்துவ நிபுணர்களின் ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் மிக நுட்பமான இழைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ‘காமன் காஸ்’ தொண்டு நிறுவனம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி அனைவருக்கும் கவுரவமாக வாழும் உரிமை இருக்கும்போது, கண்ணியமாக மரணத்தைத் தேடிக்கொள்ளும் உரிமையும் இதற்குள் அடக்கம்தானே என்றது ‘காமன் காஸ்’. அடுத்து, தான் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டால் செயற்கை முறைகள் மூலமாக காய்கறிப் பிண்டம்போல இருக்க விரும்பவில்லை என நிதானமான மனநிலையில் இருக்கும்போதே ஒருவர் உயில் எழுத அனுமதிக்கலாமே என்றது. ஆனால், இது தவறான முறையில் கையாளப்படும் அபாயத்தை உள்ளடக்கியது என்பதால், அரசு மருத்துவ நிபுணர் குழு அதை மறுக்கிறது என அரசாங்கம் பதிலளித்தது. இப்படிப் பல கோணங்களை உள்ளடக்கி எப்படியாவது வலிக்கும் மரணத்துக்கும் இடையில் ஊசலாடும் உயிர்களுக்கு சமூக நோக்கில் நியாயமான தீர்வைக் காண சட்டம் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. என்றாலும் அந்தப் பயணம் இன்னும் தன் வேகத்தைக் கூட்ட வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT