Published : 12 Feb 2016 09:25 AM
Last Updated : 12 Feb 2016 09:25 AM

ஐரோப்பிய ஒன்றியத்தின் அராஜகம்

ஐரோப்பியத் துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாகப் பிற நாடுகளுக்குச் செல்லும் இந்திய மருந்து - மாத்திரைச் சரக்குகளை மறித்து, கைப்பற்றும் வகையில் வணிக இலச்சினைச் சட்டத்தை மாற்றியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்தியாவில் தயாரிக்கப்படும் ரசாயனப் பெயரிலான பொது மருந்து - மாத்திரை (ஜெனரிக்) விற்பனையை வளரவிடாமல் தடுக்கும் ஐரோப்பிய மருந்து நிறுவனங்களின் முயற்சிதான் இந்தச் சட்டத் திருத்தம்.

உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் வணிக லாபத்தைக் காப்பாற்றுவதற்காக, தீர்வைகள் அல்லாத பிற வழிகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் முயல்வது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு இந்தியாவின் ஜி.வி.கே. பயோசயின்சஸ் என்ற நிறுவனம் தயாரித்த 700-க்கும் மேற்பட்ட மருந்து-மாத்திரைகளை, ஆய்வுக்கூடத்தில் சோதித்தபோது சில குறைகள் இருந்ததாகக் கூறி விற்பதற்குத் தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா நடத்தவிருந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. வணிக இலச்சினை விதிகளை மாற்றுவதால், இந்திய நிறுவனங்களின் மருந்து-மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட மாட்டாது என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். உண்மை அதுவல்ல. ஐரோப்பிய நாடுகளின் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை மீறும் வகையில் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறி, 2009 - 2011 காலகட்டங்களில் பிரேசில் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகளின் துறைமுகங்கள் வழியாகக் கப்பலில் சென்றுகொண்டிருந்த மருந்து - மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஐரோப்பிய அறிவுசார் சொத்துரிமைச் சட்ட வரம்பின் கீழ் வராத நாடுகளான இந்தியாவிலிருந்து, பிரேசிலுக்குத்தான் அவை சென்றுகொண்டிருந்தன என்று இந்தியா சுட்டிக்காட்டியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், தங்கள் நாட்டுக்குள் விற்கப்படாமல் வேறு நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டால் மறிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தது.

இந்தியாவில் தயாராகும் மருந்து-மாத்திரைகள் ஐரோப்பிய நாடுகளில் தயாராகும் மருந்துகளைவிடப் பல மடங்கு மலிவானவை. எனவே, அந்நாடுகளின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இந்திய மருந்துகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 2014-15-ல் சுமார் ரூ.1,05,000 கோடியாக இருந்த இந்தியாவின் ரசாயனப் பெயரிலான மருந்துகள் ஏற்றுமதி 2020-ல் ரூ.2,80,000 கோடியாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்து- மாத்திரைகளைத் தயாரிக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பெறப்பட்ட வாணிபக் காப்புரிமை வெகு விரைவில் காலாவதியாகிறது. எனவே, அத்தகைய மருந்துகளை இந்தியா தயாரிக்கக் கூடாது என்று சட்டபூர்வமாக அவற்றால் தடுக்க முடியாது. எனவே, ஏற்கெனவே காப்புரிமை பெற்ற மருந்துகளின் கலவையில் பெயருக்கு ஏதாவது மாற்றத்தைச் செய்துவிட்டுப் புதிதுபோலக் காப்புரிமை பெறலாமா என்று அவை சிந்தித்து வருகின்றன.

இந்தியக் காப்புரிமைச் சட்டம், பழைய தயாரிப்பு முறையைச் சிறிதளவே மாற்றிவிட்டு புதிதாகக் காப்புரிமை பெறுவதை ஏற்க முடியாது என்கிறது. இது பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்குப் பெரும் எரிச்சலை ஊட்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணி இதுதான். தோஹா உலக வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், பல்வேறு நாடுகள், குழுக்கள் குழுக்களாகத் தங்களுக்குள் பலதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துகொள்கின்றன. இந்திய மருந்துகளுக்குச் சந்தையை மறுக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள் மீது இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x