Published : 15 Dec 2015 07:53 AM
Last Updated : 15 Dec 2015 07:53 AM
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்று பேசியிருப்பது, பாகிஸ்தான் விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருடன் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். சந்திப்பும் பேச்சும் சுமுகமாக நடந்திருக்கின்றன. உறவைச் சுமுகமாக்கிக்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் வெவ்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்ற நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ள இச்சந்திப்பு அடுத்த கட்ட நகர்வுக்குப் பெரிதும் துணைபுரியக்கூடும்.
முதலாவதாக, இரு நாடுகளுமே இச்சந்திப்பு தொடர்பாக அறிவிப்போ மிகப்பெரிய ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அடக்கி வாசித்திருக்கின்றன. இரண்டாவதாக, பருவநிலை மாறுதல் தொடர்பான பாரிஸ் மாநாட்டின்போது நடைபெற்ற பிரதமர்கள் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃப் சந்திப்பும், பாங்காக் நகரில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சும், பிறகு டெல்லியிலும் இஸ்லாமாபாதிலும் வெளியிடப்பட்ட தகவல்களும் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தியதுடன் எளிமையாகவும் இருந்தன. இறுதியாக, தத்தமது நாட்டுக்குள், அதிலும் தத்தமது அமைப்புக்குள் இருந்து வெளிப்படக்கூடிய ஆட்சேபங்களையும் எதிர்ப்புகளையும் சமாளித்து இச்சந்திப்பை நிகழ்த்தியிருக்கின்றன. இந்தியாவுடன் சுமுகமாகப் பேசுவதை பாகிஸ்தானின் ராணுவத் தலைமை விரும்பாமல் முணுமுணுத்தது என்றால், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனை போன்ற தோழமைக் கட்சியும், கட்சிக்குள் ஒரு பிரிவினரும் ஆட்சேபிக்காமல் இல்லை.
இனி எதிர்காலத்திலும் அதிக விளம்பரம் இல்லாமல், எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் கட்டம் கட்டமாகப் பேச்சை நகர்த்தி உறுதியான, பயனுள்ள முடிவுகளைக் காண வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் வெவ்வேறு நிலைகளில் நடத்த வேண்டிய பேச்சுகளுக்கான கால அட்டவணையைத் தயார் செய்து அதன்படியே பேச வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பாகவும் ‘விசா’ வழங்குவது தொடர்பாகவும் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ‘நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை’ விரைந்து அமல்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளின் மையமாகத் திகழும் காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் ஆகியவை தொடர்பாகவும் பேச உத்தி வகுக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானுடன் சமரசம் காண, தான் வைத்துள்ள தொலைநோக்கு திட்டம் என்ன என்பதைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும். திடீரென பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் விளக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேசுவதாக இருந்தால் அந்த நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகள் தங்கள் மண்ணில் முகாம்களை அமைத்துச் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்றெல்லாம் நிபந்தனை விதித்த மோடி அரசு, அவற்றில் எந்த நிபந்தனையைப் பாகிஸ்தான் இப்போது ஏற்றிருக்கிறது என்பதையாவதுக் குறிப்பிட வேண்டும். பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய பகைமையை ஒரே ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாதுதான். அதே சமயம் இரு நாடுகளின் நட்புறவில் புதிய அத்தியாயத்தை எழுத முடியும்.
இந்தப் பேச்சுகளில் மூடுமந்திரமோ, ரகசியமோ இல்லை என்று கூறியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், முன் எச்சரிக்கையாகத்தான் அதிக விவரங்களை வெளியே தெரிவிக்காமல் இருக்கிறோம் என்று பதில் அளித்திருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க பொறுமையும் கால அவகாசமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT