Published : 26 Dec 2015 09:01 AM
Last Updated : 26 Dec 2015 09:01 AM

உணர்ச்சிகளுக்கான வடிகால் அல்ல சட்டமியற்றல்!

ஒரு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சிகளில் கடுமையாக விவாதிக்கிறார்கள், வீதிகளில் ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதற்காக நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ வேகவேகமாக விவாதித்து, பெரும்பாலான மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது முறையான செயல் அல்ல. அதேவேளையில், ‘சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அவசர கோலத்தில் நிறைவேற்றியதாகக் கூறிவிட முடியாது. ஏனென்றால், மக்களவையில் இந்த ஆண்டு மே மாதம் இத்திருத்த மசோதா ஏற்கெனவே நிறைவேறியிருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் இதன் வாசகங்களில் பிப்ரவரி மாதம் சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ‘நிர்பயா’ வழக்கில் கைதான சிறு பிராயக் குற்றவாளி 3 ஆண்டுகால தண்டனைக்குப் பிறகு விடுதலையானதால் ஏற்பட்ட பரபரப்பான சூழல் உருவாக்கிய தார்மிக பீதியில் சில உறுப்பினர்கள் பேசினார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த விவாதங்கள் குற்றத்தில் ஈடுபட்டவரையும் குற்றத்தையும் மட்டும் சுற்றிக்கொண்டிருக்காமல், குற்றத்தில் ஈடுபட வழிவகுக்கும் சமூக அமைப்பு, சிறார்களின் குடும்பச் சூழல், அவர்கள் பெறும் கல்வி அல்லது பெறத் தவறும் கல்வி, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பெற்றோரின் அரவணைப்பு, சமூகத்தின் பரிவு என விரிந்தது ஆக்கபூர்வமானது. எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல தரமான, ஒழுக்கமான கல்வி அளிக்கப்பட வேண்டும், சமுதாயம் குழந்தைகளைப் பரிவோடு நடத்த வேண்டும், நல்ல ஒழுக்க நெறிகளைப் பள்ளிக்கூடங்களும் பெற்றோரும் கற்றுத்தர வேண்டும் என்ற அம்சங்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்திருத்தத்தில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருந்தது; ஆதரவற்ற சிறுவர்களுக்கும் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 16 வயதான சிறார்கள் கடுமையான குற்றங்கள் செய்திருந்தால் சிறுபிராயக் குற்றவாளியாகக் கருதாமல் வயது வந்தவர்களுக்குச் சமமாக நடத்த கொண்டுவரப்படும் திருத்தமானது, சிறார் பாதுகாப்பு தொடர்பாக அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை மறுக்கிறது என்ற வாதத்தை அரசு ஏற்கவில்லை. அதேசமயம், 18 வயதில் ஒருவர் செய்யும் குற்றமானது 21 வயதான பிறகு தெரியவந்தால் வயது வந்தோருக்கான சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரிவை நீக்க அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. சிறார் குற்றவாளிகளின் குற்றங்களைப் பக்குவப்படாத சிறாரின் தவறுகளாகக் கருதுவதா அல்லது வயது வந்த ஒருவரின் செயலாகக் கருதுவதா என்பதைத் தீர்மானிக்க ‘சிறார் நீதி ஆய்வுக் குழு’ பயன்படுத்தப்படும். அந்தக் குழு இந்தப் பரிசீலனைக்கு ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளும். அவ்வாறு குழு தெரிவித்த பிறகு, அது மீண்டும் நீதித் துறையின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி சில குற்றங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் கொந்தளிப்பு, தீர்ப்பாளர்களை நெருக்கடியை நோக்கித் தள்ளும் என்பதே உண்மை. சிறார் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சபையின் வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது. ‘18 வயதுக்குக் குறைவானவர்கள் அனைவருமே எந்தக் குற்றப் பின்னணியிலும் சிறார்’ என்பதே அந்த வழிகாட்டல். நமக்கு மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த வழிகாட்டலே துணையாக இருக்கும் என்று தோன்றுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x