Published : 02 Dec 2015 09:50 AM
Last Updated : 02 Dec 2015 09:50 AM
தேசியப் பத்திரிகை தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 16 அன்று நாகாலாந்தின் நாளிதழ் வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
‘மூரங் எக்ஸ்பிரஸ்’, ‘நாகாலாந்து பேஜ்’, ‘ஈஸ்டர்ன் மிரர்’ ஆகிய நாளிதழ்கள் தலையங்கத்துக்கான இடத்தில் எதையும் எழுதாமல் வெற்றிடமாக விட்டிருந்தன. தடை செய்யப்பட்ட ‘நாகாலிம் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்’(கப்லாங்) என்ற இயக்கம் தொடர்பாக எதையும் பிரசுரிக்கக் கூடாது. மீறினால், 1967-ல் இயற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று அசாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு விடுத்த அச்சுறுத்தலுக்கு அந்த நாளிதழ்கள் மவுனமாகக் காட்டிய எதிர்ப்பு அது.
சட்டம் - ஒழுங்கை அமல் செய்யும் பொறுப்பில் உள்ள காவல் துறை, வெவ்வேறு நிலைகளில் பத்திரிகைகளைத் தணிக்கை செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாகச் செய்திகள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அது தயங்காது என்பது அடிக்கடி உணர்த்தப்படுகிறது. தாங்கள் சொல்வதை அப்படியே பிரசுரிக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளும் மிரட்டுகின்றன. ஆயுதக் குழுக்களுக்கும் அரசுப் படைகளுக்கும் மோதல் நிகழும் பகுதிகளில் வெளியாகும் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இச்சம்பவம் கோடிட்டுக் காட்டியது.
இவ்விரு தரப்புக்கும் இடையில்தான் பத்திரிகைகள் தங்களுடைய கடமைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் கட்டிக்காக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பத்திரிகைகளும் உட்பட வேண்டும் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் ஒரு பிரிவு குறிப்பிடுவதை அசாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு தனது பதிலில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
‘பல் இல்லாத சிங்கம்’ என்று கேலி செய்யப்படும் இந்தியப் பத்திரிகை கவுன்சில் இம்முறை இந்த விவகாரத்தைத் தானாகவே கவனத்தில் கொண்டு, நாகாலாந்து மாநில அரசுக்கும் அசாம் ரைஃபிள்ஸ் படைக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளிவருவதையும் பத்திரிகைகள் விற்பனையாவதையும் யாராவது தடுத்தால், பொது நலன் கருதி அதில் தலையிடும் அதிகாரம் இந்தியப் பத்திரிகை கவுன்சிலுக்கு உண்டு.
தங்களுடைய செயலைக் கேள்வி கேட்பார்கள் என்பதற்காகவோ விமர்சிக் கிறார்கள் என்பதற்காகவோ அது பற்றிய செய்திகள் வெளிவருவதையே தடுத்துவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் அரசுகளிடம் இப்போது அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற, இறையாண்மையைக் காக்க என்று போலியான காரணங்கள் வேறு கூறப்படுகின்றன. வேறு எந்தெந்த வகைகளில் எல்லாம் பத்திரிகைகளின் சுதந்திரம் நசுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து அவற்றுக்கும் பரிகாரம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய கருத்துகளை ஏற்காத அல்லது தங்களுக்கு ஆதரவாக எழுதாத பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்களைத் தராமல் மறுத்து, பொருளாதார ரீதியாக அவற்றுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
சமீபத்தில், தேச விரோதச் சட்டம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வைத்ததன் மூலம் ‘வயதான கிழட்டுப் புலி’ என்ற கூற்றைப் பொய்யாக்கியது பத்திரிகை கவுன்சில். டெல்லி அரசையும் அதேபோல திரும்பப் பெற வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளுடன், பத்திரிகைகளை எப்படியெல்லாம் அச்சுறுத்துகிறார்கள் என்பதையும் பத்திரிகை கவுன்சில் ஆராய வேண்டும். அரசு மட்டும் அல்ல, அரசுக்கு அப்பாற்பட்ட சக்திகளும் பத்திரிகைகளைத் தணிக்கை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT