Published : 21 Dec 2015 08:11 AM
Last Updated : 21 Dec 2015 08:11 AM
நிறைவேறாத கனவு என்றே கருதப்பட்ட துருக்மேனிஸ்தான் இயற்கை நிலவாயுக் குழாய்ப் பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடந்திருக்கிறது. மத்திய ஆசிய நாடான துருக்மேனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவை வந்தடைகிறது இக்குழாய்ப் பாதை. இதன் நீளம் 1,814 கி.மீ. இந்தக் குழாயின் விட்டம் 56 அங்குலம். ஆண்டுக்கு 3,300 கோடி கன மீட்டர் இயற்கை நிலவாயுவைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. 2020-ல் இக்குழாய்ப் பாதை அமைத்து முடிக்கப்படும்.
துருக்மேனிஸ்தானில் உள்ள, உலகின் 2-வது பெரிய நிலவாயுச் சுரங்கமான கால்கின்ஷ் என்ற இடத்திலிருந்து ஆப்கானிஸ்தானின் ஹேரத், காந்தஹார், பாகிஸ்தானின் குவெட்டா, மூல்தான் நகரங்கள் வழியாக பஞ்சாப் மாநிலத்தின் ஃபசில்கா என்ற இடத்துக்குக் குழாய்ப் பாதை வருகிறது. இத்திட்டத்தால் 4 நாடுகளிடையே நட்புறவும் பொருளாதார, வர்த்தக உறவும் வலுப்படும். நிலவாயுவைக் குறைந்த விலையில் வாங்கி, குறைந்த செலவில் கொண்டுவர முடியும். போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையும். நிலவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. பாகிஸ்தானின் நிலவாயுத் தேவையில் 25%-ம் இந்தியாவின் தேவையில் 15%-ம் நிறைவேறும். இந்தப் பாதைகளைத் தங்கள் நிலங்கள் வழியாக அனுமதிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு நிலவாயு கிடைப்பதுடன் வாடகையும் பராமரிப்புத் தொகையும் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை ஆசிய வளர்ச்சி வங்கி கடனாகத் தந்து உதவுகிறது.
ஈரானிலிருந்தும் இந்திய நிலவாயு வயல்களிலிருந்தும் நில வாயு கிடைத்தாலும், துருக்மேனிஸ்தான் குழாய்ப் பாதை நம்முடைய தேவையின் கணிசமான அளவைப் பூர்த்திசெய்ய உதவும். எல்லாவற்றையும்விட முக்கியமானது, இந்தத் திட்டத்துக்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மூன்றும் முதல் முறையாக இணைந்து செயல்படப்போகின்றன. இதில் கிடைக்கும் வெற்றி இம்மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் எனும் நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
அதேசமயம், இந்தத் திட்டத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான டூரண்ட் கோட்டு எல்லைக்கு இரு புறத்திலும் தலிபான்கள் ஆயுதங்களுடன் உள்ளனர். அவர்கள் இந்தக் குழாய்ப் பாதை அமைக்கப்படுவதை ஆதரிக்க வேண்டும். பாகிஸ்தானில் பல பயங்கரவாதக் குழுக்கள் இந்திய விரோத மனப்பான்மையுடன் செயல்படுகின்றன. எனவே, அவற்றையும் கடந்து இப்பாதை இந்தியாவுக்கு வர வேண்டும். ஆனால், இப்பாதை அமைப்புக்கான தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி, ‘‘சந்தேகம் - அவநம்பிக்கை என்பதே வரலாறாக இருந்ததிலிருந்து விடுதலைபெற்று முன்னேறிவிட்டோம்” என்று பெருமிதப்பட்டிருக்கிறார். துருக்மேனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்திமுகம்மதோவ் பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறார். இவ்விழாவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்திய நாடுகளின் தலைவர்கள் அவருடன் இணைந்து பங்கேற்றதே பெரிய நிகழ்வு.
ஒரு புறம் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு சரியில்லை, மறுபுறம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உறவு சுமுகமாக இல்லை. இந்நிலையில், பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் இத்திட்டத்தைச் சீர்குலைத்துவிடாமல் நிறைவேற்ற முடியும் என்றால், அதுவே மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படும். தங்கள் நாட்டு மக்களின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை உத்தேசித்து இந்நான்கு நாடுகளின் தலைவர்களும், இவ்விஷயத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். இத்திட்டத்தின் வெற்றிக்கு அதுதான் இன்றியமையாத தேவை. அது இந்நாடுகளை இணைப்பதுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வளமையைக் கூட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT