Published : 03 Nov 2015 07:42 AM
Last Updated : 03 Nov 2015 07:42 AM

அமெரிக்காவின் நாட்டாமைத்தனத்துக்கு நமது பதில் என்ன?

தடையற்ற (சுதந்திர) வர்த்தகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உலகின் பிற நாடுகளுக்கெல்லாம் வகுப்பு எடுப்பதில் அமெரிக்காவுக்கு இணையே இல்லை எனலாம். மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்கச் சந்தையும் பிற நாடுகளால் எளிதில் அடையக் கூடியதுதான். ஆனால், அரசியல் ரீதியாக தன்னைப் புரட்டிபோட்டுவிடும் துறைகள் என்றால் குறிப்பாக விவசாயத்துக்குப் போட்டி என்றால் ‘வர்த்தகம் அற்ற தடைகள்’ பலவற்றை உருவாக்கிவிடுவது அமெரிக்காவின் வழக்கம்.

உலகிலேயே அதிக அளவுக்கு மானியச் சலுகையை அனுபவிப்பது அமெரிக்க விவசாயிகள்தான். உலக வர்த்தக உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இறக்குமதி வரியல்லாத பிற தடைகள் மூலம் பிற நாடுகளின் வேளாண் பொருட்கள் தங்களுடைய சந்தைக்கு வரவிடாமல் தடுப்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கிறது.

அமெரிக்க உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மற்றொரு திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ‘அமெரிக்க உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்’ என்று பெயர். கடந்த 70 ஆண்டுகளில் கொண்டுவரப்படாத சீர்திருத்த மசோதா என்று பாராட்டப்பட்ட இது 2011-ல் சட்டமானது. அது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அமெரிக்காவுக்கு அதிக அளவில் வேளாண்பொருட்களை ஏற்றுமதி செய்கிறவர்கள் ‘அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக’ துறையின் ஆய்வுகளுக்கும் தணிக்கைக்கும் தங்களுடைய பொருட்களை 2017 முதல் உட்படுத்த வேண்டும்; நடுத்தர, சிறு ஏற்றுமதியாளர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த நடைமுறைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன. இப்படிச் செய்வதால் ஏற்றுமதியாளர்களுக்குச் செலவு அதிகரிக்கும், இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகி சந்தையை இழக்க நேரும் என்று இந்தியா சரியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது.

இதிலிருந்து இந்தியப் பொருட்களுக்கு விலக்கு தர வேண்டும் அல்லது இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் முகமையின் சான்றையோ அல்லது ஏற்றுமதி ஆய்வு ஒன்றியத்தின் சான்றையோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் இதை அமெரிக்கா ஏற்பதற்கான சாத்தியமே இல்லை. வெறும் சான்றளிப்பு கூடாது என்று அமெரிக்கா ஏற்கெனவே கூறிவிட்டது.

அமெரிக்க விதிகள் நோய்த் தடுப்பு வழிமுறைகளை வலியுறுத்துகிறது. தூய்மையைக் கடைப்பிடிப்பது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் சாகுபடிக்குப் பிறகும் வேளாண் பொருட்கள் மீதான செலவுகள் கூடிக்கொண்டே போகும். இறுதியில், இந்திய வேளாண் விளைபொருட்கள் அதிக விலையுள்ளதாக நிராகரிக்கப்படும்.

வலிமையான நாடு எதுவோ அதுதான் வர்த்தக நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெற்றதாக இப்போதைய உலக வர்த்தக நடைமுறைகள் இருக்கின்றன. இந்தியச் சந்தையையும் உலக நாடுகள் வெவ்வேறு காரணங்களுக்காக அணுகுகின்றன. இந்தியாவும் இதிலிருந்து பாடம் கற்று, தங்கள் நாட்டில் பொருட்களை விற்க இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டும். உலகத் தரத்திலும் நல்ல சுகாதார நிலையிலும் விலை குறைவாகவும் நமக்கும் பொருட்கள் கிட்ட இத்தகைய எதிர் நிபந்தனைகள் அவசியம். இந்திய வேளாண் பொருட்களையும் நல்ல நிலையில் சாகுபடி செய்து, அறுவடை செய்து, பாதுகாப்பான நிலையில் உள்நாட்டு நுகர்வோர்களுக்கும் கிடைக்குமாறு செய்வது அவசியம். இதை வழக்கமாக்கிக்கொண்டுவிட்டால் வெளிநாடுகள் இப்படிப்பட்ட நிபந்தனைகளை விதித்தாலும் நம்முடைய பொருட்களை விற்பதும், பதிலுக்கு நாமும் பேரம் பேசுவதும் எளிதாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x