Published : 30 Nov 2015 08:41 AM
Last Updated : 30 Nov 2015 08:41 AM

பாரிஸ் மாநாட்டை பயன்படுத்திக் கொள்வோம்

புவி வெப்பமடைவதால் பருவ நிலைகளில் ஏற்படும் மாறுதல்கள்; வறட்சி மற்றும் அதீத மழை ஏற்படுத்தும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பாரிஸில் இன்று சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நடவடிக்கைகளை எடுப்பதைக் கைவிட்டு ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில் எல்லா நாடுகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்குத் தான் இந்தக் கூட்டம்.

தங்களுடைய நாட்டின் முன்னேற்றத்துக்காகத் தொழில்வள நாடுகள் அழித்த இயற்கை வளங்களால் ஏற்படும் வறட்சியும் சூறாவளிகளும் அதிக மழைப் பொழிவும் ஏழை நாடுகளைத்தான் பதம்பார்த்துவருகின்றன. எனவே, புவியியல் ரீதியான நில எல்லையைச் சுட்டிக்காட்டி, அவையெல்லாம் உங்களுடைய பிரச்சினைகள் என்று வளர்ந்த நாடுகள் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

தொழில்வளர்ச்சி ஏற்படாதபோது இருந்த புவி வெப்ப நிலையைவிட 2 டிகிரி சென்டிகிரேடு மட்டும் அதிகமாக இருக்கும்படியான இலக்கை நிர்ணயிக்க அனைத்து நாடுகளும் உத்தேசித்துள்ளன. அதாவது, இப்போது நிலவும் வெப்ப நிலையைப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குக் குறைப்பது. இதைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது மிகவும் கடினம். தொழில்வளத்தைக் கட்டுப்படுத்துவது, கரிப்புகை வெளியீடில்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்றவை தவிர, வேறு சில நடவடிக்கைகளும் இதற்கு அவசியம். எல்லா நாடுகளும் சேர்ந்து 1,000 பில்லியன் டன்கள் அளவுக்கு மட்டுமே கரிப்புகையை வெளியிட வேண்டும் என்று இப்போதைக்கு இலக்கு நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. கரிப்புகையைக் குறைத்து வெளியிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கையாளாவிட்டால், அதிகபட்சம் இன்னும் 20 ஆண்டுகளுக்குத்தான் இந்த இலக்கு பலன் கொடுக்கும்.

இந்தியா, சீனா, பிரேசில் போன்று சமீபகாலத்தில் வேகமாக வளரும் நாடுகள் கரிப்புகை வெளியீட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. அதாவது மறைமுகமாக, வளர்ந்தது போதும் என்று கூறுகின்றன. இதற்கான இலக்கைச் சட்டரீதியாகவே திணிக்கவும் முயல்கின்றன. இது நியாயமான அணுகுமுறை அல்ல.

சுமக்கும் வலிமைக்கேற்ப வெவ்வேறு தோள்களுக்கு வெவ்வேறு விதமான பாரம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் கியோட்டோ மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். இதில் மீள்பார்வைக்கு அவசியமே இல்லை. இதை எப்படிச் செய்யலாம் என்பதைத்தான் பாரிஸ் மாநாட்டில் விவாதிக்க வேண்டும். ஆண்டுக்கு 10,000 கோடி டாலரை இதற்காக ஒதுக்குவது என்பது பெரிய சாதனை அல்ல, பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது. இது மிகவும் குறைவான தொகை. இந்தத் தொகையும் 2020 முதல்தான் கிடைக்கப்போகிறது. இவை தவிர, 8 திட்டங்களில் கரிப்புகையைக் கட்டுப்படுத்த வெறும் 16.8 கோடி டாலர்கள்தான் ஒதுக்கப்படவிருக்கிறது எனும் தகவல்கள் நம்பிக்கை அளிப்பது அல்ல. எனவே, பாரிஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகள் நல்லதொரு உடன்பாடு ஏற்பட பொறுமையாகவும் புத்திசாலித்தனத்துடனும் பேசுவது அவசியம். பல்வேறு தொழில்வள நாடுகள் கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கத் தங்களுடைய நாட்டுக்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்போவதாகக் கூறுகின்றன. இது போதாது. இதில் தேச எல்லை பாராமல், வளரும் நாடுகளுக்கு நிதி உதவியையும் தொழில்நுட்பத்தையும் வழங்க முன்வர வேண்டும். பாரிஸ் அதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x