Published : 27 Nov 2015 08:48 AM
Last Updated : 27 Nov 2015 08:48 AM
வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத் துடன் சேர்ந்துகொண்டு கொடுங்குற்றங்களைச் செய்ததாக, ஜமாத்-இ-இஸ்லமி அமைப்பைச் சேர்ந்த அலி ஆசன் முகம்மது முஜாஹித், வங்கதேச தேசியக் கட்சியைச் சேர்ந்த சலாவுதின் காதர் சவுத்ரி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின் இந்நடவடிக்கைக்கு ஒரு தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்திருந்தாலும், சர்வதேச அளவில் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டிருக்கிறது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை விமர்சித்திருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வங்கதேச அரசிடம் கேட்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த மோதல்களே இன்னமும் ஓயவில்லை. இந்த வழக்குகளே நடைபெறக் கூடாது, யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து எச்சரித்துவந்தனர்.
ஆனால், மதச்சார்பற்ற மக்கள் அமைப்புகளோ, குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தின. ஜமாத்-இ-இஸ்லமி அமைப்பைச் சேர்ந்த அலி ஆசன் முகம்மது முஜாஹித், வங்கதேச தேசியக் கட்சியைச் சேர்ந்த சலாவுதின் காதர் சவுத்ரி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதற்குப் பின்னர், எதிர்பார்த்ததுபோலவே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது அனுதாபமான உணர்வே மக்களில் சிலரிடம் ஏற்படும், அது அரசைப் பலவீனப்படுத்திவிடும். தவறு செய்தவர்களைத்தான் தண்டிக்கிறார்கள் என்ற எண்ணம் வருவதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாகப் பழிவாங்குகிறார்கள் என்ற கருத்துதான் மக்களிடம் உருவாகும். தவறு செய்தவர்களைத் திருத்துவதற்காகத்தான் தண்டிக்க வேண்டுமே தவிர, கொலைக்குக் கொலை தீர்வாகிவிடாது.
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், மதத் தீவிரவாதிகள் தலையெடுத்துவரும் வேளையில், மரண தண்டனைகள் விதிக்கப் படுவது விபரீத விளைவையே ஏற்படுத்தும். மத அடிப்படையிலான அரசியல் வளர்ச்சியை இந்த மரண தண்டனைகள் குறைத்துவிடும் என்று ஷேக் ஹசீனா நினைத்தால் அது மிகவும் தவறானது. தங்கள் தலைவர்களுக்கு எதிராக அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளால் அதிருப்தியடையும் எதிர்க் கட்சித் தொண்டர்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்ட மதத் தீவிரவாதக் குழுக்கள் முயற்சிகளை மேற்கொள்ளும். சமீபத்திய சில சம்பவங்கள், இத்தகைய ஆள் சேர்ப்புகள் தொடங்கிவிட்டன என்பதையே காட்டுகின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்குப் பழிவாங்கப்போவதாகவும் மதச்சார்பற்ற வங்கதேச நாட்டில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவரப்போவதாகவும் ஜமாத்-இ-இஸ்லமி அமைப்பு சூளுரைத்துள்ளது.
போரின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தத் தொடங்கியதும் மதச்சார்பற்ற சில எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது தற்செயலாகக்கூட இருக்கலாம். சுருங்கச் சொன்னால், எப்போதோ நடந்தவற்றுக்குத் தண்டனை வழங்குவது என்பது இப்போதைய நிலைமையைச் சிக்கலாக்குவதற்கே வழிவகுக்கும். வங்கதேச அரசுக்கு எதிரே உள்ள சவால் மிகப் பெரியது.
தவறு செய்தவர்களைத் தண்டித்தும் ஆக வேண்டும், அதை மதத் தீவிரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கவும் வேண்டும். மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை போன்று விதித்தால் மதத் தீவிரவாதிகளின் எதிர்ப்புகள் மக்களிடையே ஆதரவை இழந்துவிடும். அதே சமயம், கடந்தகாலச் சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட திருப்தி ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT