Published : 26 Nov 2015 08:18 AM
Last Updated : 26 Nov 2015 08:18 AM
கோலாலம்பூருக்கு ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வழக்கம்போல அன்னிய முதலீட்டை ஈர்க்க உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.
“கிழக்கு ஆசிய நாடுகள் முதலீடுசெய்ய இந்தியா உகந்த நாடு, பொருளாதாரம் வளர்ந்துவருகிறது, அரசின் நடைமுறைகள் முதலீட்டை எளிதாக்கிவிட்டன” என்றெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். தன்னுடைய தலைமையில் அரசு பதவிக்கு வந்த 18 மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தைச் சுணக்க நிலையிலிருந்து தட்டி எழுப்பி செயல்பட வைத்துவிட்டதாகப் பெருமிதப்பட்டிருக்கிறார். இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளவிருக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்தும் விவரித்திருக்கிறார். மெட்ரோ ரயில் போக்குவரத்து, வீடமைப்பு, சாலைகள், ரயில் பாதைகள், நீர்வழிப் பாதைகள் போன்ற அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்று ‘ஆசியான்’ அமைப்பில் உள்ள நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மோடி என்னவோ நன்றாகத்தான் பேசுகிறார். கடந்த ஆண்டு அவருடைய பேச்சை ஆர்வமாகக் கேட்ட முதலீட்டாளர்கள் இந்த ஆண்டும் அதே ஆர்வத்துடன் இருந்தால் வியப்படையத்தான் வேண்டும். விஷயம் என்னவென்றால், ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் மோடி அளித்துள்ள வாக்குறுதிகள் யாவும் ஓராண்டுக்கு முன்னால் அளித்த அதே வாக்குறுதிகளின் மறுபதிப்பு என்பதுதான். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பொது சரக்கு, சேவை வரி கொண்டுவரப்படும் என்று ஓராண்டாகக் கூறிவருகிறார். எதிர்க்கட்சிகளுடன் ஆளும் கூட்டணிக்குள்ள உறவைப் பார்க்கும்போது இனி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலாவது அது நிறைவேறுமா என்ற சந்தேகமே நீடிக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்துவதைப்போல இந்தியக் காப்புரிமைச் சட்ட விதிகள் தளர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். இது எந்த அளவுக்கு இந்திய நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று தெரியவில்லை. புதுப்பிக்கத் தக்க இயற்கை வளம் மூலம் 175 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். சூரிய ஒளி, காற்றாலைகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதற்கு மட்டுமே சுமார் ரூ. 13 லட்சம் கோடியிலிருந்து ரூ. 19.5 லட்சம் கோடி வரை தேவைப்படும். இந்த முதலீடு எங்கிருந்து வரும் என்று புலனாகவில்லை.
மோடியின் திட்டங்கள் பல யதார்த்தமான பொருளாதார நிலைக்குப் பொருத்தமாக இல்லை என்பதுதான் கவலை அடையச் செய்கிறது. கடந்த 10 மாதங்களில் ஏற்றுமதி சரிந்துவருகிறது, உள்நாட்டிலும் பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டது, கிராமப்புறங்களில் பொருளாதாரச் சுணக்கம் தெரிகிறது. ஆசியான் நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள இந்தியா விரும்பும் அதே வேளையில் அந்த நாடுகள் தங்களுக்கும் கிழக்கில் உள்ள நாடுகளுடன் பொருளாதார வர்த்தக உடன்பாடுகளை ‘பசிபிக் கடலோர நாடுகள் அமைப்பு’ என்ற வட்டத்தில் மேற்கொண்டுவிட்டதையும் கவனிக்க வேண்டும். இதில் இந்தியா உறுப்பு நாடு இல்லை. ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ (ஒஇசிடி) நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைக் கணிக்க புதிய முறையைக் கடைப்பிடிக்கிறது. எனவே இந்தியா இனியும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் மட்டும் ஈடுபடுவதை விடுத்து உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டை மையமாக வைத்து பெரிய அளவில் நாம் திட்டங்களை வகுக்க வேண்டிய நேரம் இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT