Published : 16 Nov 2015 11:15 AM
Last Updated : 16 Nov 2015 11:15 AM

பாரீஸ் பயங்கரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். 352 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டவர். பயங்கரவாதிகள் 3 குழுக்களாகப் பிரிந்து 7 இடங்களில் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். படைகள் மீது பிரெஞ்சு விமானப்படை நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. துருக்கி நாட்டின் அங்காரா நகரில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களையும், பேரூத் நகரில் குண்டுவெடிப்புகள் மூலம் 40 பேரையும் கொன்றுவிட்டு, இப்போது பாரீஸில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர் ஐ.எஸ். பயங்கரவாதிகள். தாங்கள் விரும்பும் எந்த நாட்டிலும் தாக்குதல் நடத்திக் கடும் உயிர்ச் சேதத்தை விளைவிக்க முடியும் என்று இதன் மூலம் நிரூபித்துள்ளனர்.

அப்பாவிகளைக் கொன்றுவிட்டு அந்தக் கொலைக்குக் காரணம் அவர்களுடைய நாட்டின் ராணுவத் தலையீடு என்று பழிபோடுவதையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேசமயம், பிரெஞ்சு அரசை விமர்சிக்காமல் இருக்க முடியாது. சிரியாவில் உள்நாட்டுக் கலகம் தீவிரமடைய பிரெஞ்சு அரசின் கொள்கையும் முக்கியக் காரணம். சிரியாவில் அதிபர் பஷார் அல் - அசாதின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களுக்கு ஆயுத உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்து அசாத் அரசை வலுவிழக்கவைத்தது பிரெஞ்சு அரசு. சிரியாவில் சில குழுக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் அமைதியை பிரெஞ்சு அரசு ஏற்படுத்தியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சிரிய அரசே பலமான நடவடிக்கைகளை எடுத்திருக்கும். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பியாவுக்குப் படையெடுக்கும் அவலமும் தடைபட்டிருக்கும். அப்படிச் செய்யாததன் விளைவு, இந்தக் கொலைவெறித் தாக்குதல்.

பிரான்ஸில் நீண்டகாலமாக இருந்த பல்வேறு கலாச்சாரங்களுக்கான இணக்கமான சூழல் இப்போது மறைந்துவிட்டது. அந்நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பதும் குறுகிக்கொண்டே வருகிறது. இதன் விளைவாகவே அந்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்களில் சேர்வது அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகச் சரியான உதாரணம். அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிரான்ஸிலேயே பிறந்து, வளர்ந்து, பயங்கரவாதத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். எனவே, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை என்பது ஒரு முனையானதாக இல்லாமல் பலமுனைகளைக் கொண்டதாக அமைவது அவசியம். நாட்டின் உளவு அமைப்புகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருத்தியமைக்க வேண்டும். மேற்காசியாவில் வல்லரசு நாடுகள் அரங்கேற்றும் அரசியல் விளையாட்டுகள் யாருக்கும் நன்மை தராமல் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்திவருகின்றன. அதன் விளைவால் உருவான பயங்கரவாதக் குழுக்கள் இப்போது மேற்கத்திய நாடுகளையும் பதம்பார்க்கத் தொடங்கியுள்ளன.

பிரெஞ்சு அரசு தன்னுடைய மதச் சார்பின்மைக் கொள்கையைத் திருத்திக்கொண்டு, பரந்துபட்ட தேசியவாதத்தை மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும். இச்சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டு ‘பிற நாட்டு அகதிகளை பிரெஞ்சு நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது, இஸ்லாமியக் குழுக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலதுசாரிக் கட்சிகள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அந்நாடு இரையாகிவிடக் கூடாது. அது சமூகத்தில் ஏற்கெனவே தோன்றியிருக்கும் பிளவை மேலும் பெரிதுபடுத்திவிடும். பயங்கரவாதிகள் விரும்புவது அதைத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x