Published : 06 Oct 2015 09:30 AM
Last Updated : 06 Oct 2015 09:30 AM
நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினர் பகுதிகளில் புதிய தார் சாலைகள் - பாலங்கள் அமைப்புப் பணிகள், மின்விநியோகக் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்த செல்பேசிக் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பழங்குடியினத்தவர் வாழ்வில் மேம்பாட்டைக் கொண்டுவரவே இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசு சொன்னாலும், இதன் பின்னணியிலுள்ள சூட்சமங்கள் யாருக்கும் புரியாமல் இல்லை.
நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதுமே மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் செயல்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது பாதுகாப்புப் படையினர் விடுத்த முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது. "மாவோயிஸ்ட்டுகள் இப்போதுள்ள பின்தங்கிய நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டே இந்தப் பழங்குடிப் பகுதிகளில் தங்களுடைய செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். பாதுகாப்புப் படையினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் உத்தியையும் கண்ணிவெடித் தாக்குதல்களையும் கையாள்கின்றனர். பாதுகாப்புப் படையினர் வனப் பகுதியில் மேலும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் முன்னேறுவதற்கு இத்தகைய கட்டமைப்பு அவசியம்" என்று அப்போது வலியுறுத்தப்பட்டது. இப்படியான கட்டமைப்பை உருவாக்கும்போது பாதுகாப்புப் படையினருக்கு அது உதவுவதோடு, காடுகளில் கிடைக்கும் கனிமங்களை வெளிக்கொணரவும் அது பயன்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்கும் இது பலனளிக்கும் என்று திட்டமிடப்பட்டது.
பழங்குடி மக்கள் விரும்புவது அவர்களுடைய பகுதியில் பெரிய கனிமச் சுரங்கங்களையோ, சுற்றுச்சூழலைக் கெடுக்கக்கூடிய ஆலைகளையோ, வனவளங்களை மூழ்கடிக்கக் கூடிய பெரிய நீர்த்தேக்கங்களையோ, நீர்மின் திட்டங்களையோ அல்ல. அதேபோல, பாதுகாப்புப் படைகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் இடையே சிக்கிக்கொண்டு பரிதவிக்கும் இந்தச் சூழல் தொடர்வதையும் அவர்கள் விரும்பவில்லை. அரசு உள்ளபடியே இந்தத் திட்டத்தின் பின்னுள்ள மூன்றாவது நோக்கப்படி, அதாவது இந்தக் கட்டமைப்புகள் யாவும் அங்குள்ள மக்களுக்குப் பயன்படும்படி திட்டமிட்டால், பல பிரச்சினைகளும் இப்பகுதிகளில் தானாகவே போய்விடும்.
இந்த சாலைகள், பாலங்கள், செல்போன் கோபுரங்களை நிறுவுவது மட்டும் வளர்ச்சிக்கு வித்திடாது. மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு கணிசமாக இருக்கும் கிராமங்களில் உள்ளாட்சி மன்றங்கள் போன்ற அமைப்புகள்கூடச் செயல்பட முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் பழங்குடிகள் பகுதியில் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்புவிடுத்து, அதை அமல்படுத்துகிறார்கள் மாவோயிஸ்ட்டுகள். அப்பகுதிகளுக்குத் ‘தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாக’ அவர்கள்தான் செயல்படுகின்றனர். ஆகையால், இந்தச் சூழல் எல்லாம் மாற வேண்டும் என்றால், உண்மையான வளர்ச்சி அங்கு சென்றடைய வேண்டும். அதற்குக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்புகளும் மற்றும் வேலைவாய்ப்புகளும் அங்கு சென்றடைய வேண்டும். முக்கியமாக, இந்தக் கட்டமைப்புகள் காடுகளின் சூழலை மாசுபடுத்தவோ, குலைக்கவோ அனுமதிக்கப்படக் கூடாது. அப்படி நடந்தால் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு சரிவதற்குப் பதிலாக அதிகரிக்கவே அது வழிவகுக்கும். வன வளங்களை ஒட்டச் சுரண்டாமல், மிகுதியை மட்டும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேகரித்து விற்று, அந்த வருவாய் முழுக்கப் பழங்குடிகளையே சென்றடையும் வகையில் அரசு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அப்பகுதியை நிர்வகிப்பதில் உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் அம்மக்களின் வறுமை நீங்கி, நாட்டின் தேசிய நீரோட்டத்தில் அவர்கள் கலக்க முடியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT