Published : 16 Oct 2015 10:50 AM
Last Updated : 16 Oct 2015 10:50 AM
அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான எதிர்வினைகளில் எழுத்தாளர்களின் பங்கு எப்போதும் இருந்துவந்திருக்கிறது. ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது, மத அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது போன்றவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஒரு வார காலமாக 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சாகித்ய அகாடமி விருதுகளையும் ரொக்கப் பரிசையும் திருப்பி அனுப்புவதன் மூலம் தங்கள் தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நேரு குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா சேகல்தான் இதை முதலில் தொடங்கிவைத்தார். 1986-ல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதையும் விருதுடன் வழங்கிய ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து பலரும் விருதுகளையும் ரொக்கப் பரிசையும் திருப்பி அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி கிராமத்தில் அப்பாவி முஸ்லிம் ஒருவர், பசு இறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகப் பரவிய வதந்தி காரணமாக அவருடைய அக்கம் பக்கத்தாராலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாட்டில் உள்ள அனைவருடைய உள்ளங்களையும் வெகுவாகப் புண்படுத்தி விட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிப்பது, மாட்டிறைச்சி உண்பதை மத்திய அமைச்சர்களே கொச்சைப் படுத்திப் பேசுவது போன்றவை, தாத்ரியில் நடந்த படுகொலையை மறைமுகமாக நியாயப்படுத்துகின்றன. அதேபோல், மோடி அரசு இருக்கும் துணிச்சலில் எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களும் மிரட்டல்களும் தொடர்கின்றன என்றும் பரவலான கருத்து உருவாகி இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம் சாதித்துவந்ததையடுத்தே, எழுத்தாளர்கள் இந்தப் போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தார்கள். இந்நிலையில்தான், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகம்மது கசூரி எழுதிய புத்தக அறிமுக நிகழ்ச்சியில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கறுப்பு மை வீசிய சம்பவம் நடந்திருக்கிறது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சிக்கும் சிவசேனை எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இப்படியான சூழலில், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தனது மவுனத்தைக் கலைத்திருக்கும் பிரதமர் மோடி, தாத்ரி, குல்கர்னி மீது மை வீச்சு போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசை எப்படிப் பொறுப்பாக்க முடியும் என்றும், எதிர்க் கட்சிகள் இந்தச் சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு மக்களிடையே பிளவை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுகள் திருப்பி அனுப்பப்படும் விஷயத்தில் அவர் வெளிப்படையான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், எழுத்தாளர்களின் நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்துவதில் மத்திய அமைச்சர்களும், வலதுசாரித் தலைவர்களும் இறங்கியிருப்பதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.
பிரதமரின் மவுனத்தைவிடவும் அவருடைய வார்த்தைகள் மேலும் காயப்படுத்துகின்றன என்ற விமர்சனம் இப்போது எழுந்திருக்கிறது.
எழுத்தாளர்களிடம் வார்த்தைகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. அவர்கள் இப்போது வார்த்தைகளை நம்பாமல், களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றால், அந்தக் கோபத்தின் பின்னுள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும். அது வெறும் கோபம் அல்ல, அறச் சீற்றம். இந்த நாட்டை எது பிணைத்திருக்கிறதோ அந்தச் சங்கிலி அறுபட ஆரம்பித்திருப்பதில் ஏற்பட்டிருக்கும் அறச் சீற்றம். அறத்தை அலட்சியப்படுத்துதல் அரசுக்கு நல்லதல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT