Published : 15 Oct 2015 08:17 AM
Last Updated : 15 Oct 2015 08:17 AM

இந்த தீபத் திருநாளில் மாசு அரக்கனை ஒழிப்போம்!

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், முக்கியமான அறைகூவல் ஒன்று ஒலிக்கிறது. தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கைக்குழந்தைகள் மூவரின் பெயரில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களேயான அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஒரு வயதான ஜோயா ராவ் பாசின் மூவரும்தான் மனுதாரர்கள். சிறார்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மனுத் தாக்கல் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. இக்குழந்தைகளின் தந்தையர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுபவர்கள். தங்கள் குழந்தைகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இம்மனுவை அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு உறுதியளிக்கும் சுத்தமான காற்று பெறும் உரிமையைக் கோரி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தசரா மற்றும் தீபாவளிப் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கக் கோரி குழந்`தைகள் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு கவனம் ஈர்த்திருக்கிறது.

டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகிலேயே அதிக மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகிலேயே அதிக மாசடைந்த நகரமாக இருக்கிறது டெல்லி. மேலும், காற்றில் நுண்துகள்கள் அதிக மாகக் கலந்திருப்பதும் டெல்லியில்தான். காற்று மாசுபாடு தொடர்பான பாதிப்புகளால் ஆண்டுதோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் உயிரிழக்கிறார்கள். டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் 500 மில்லியன் பயிர் சக்கைகள் எரிக்கப்படுவது; இரவு நேரங்களில் டெல்லி நகரைக் கடந்து செல்லும் டிரக்குகள் வெளிப்படுத்தும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை மற்றும் மாசு போன்றவை டெல்லி நகரின் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.

பண்டிகைக் காலப் பட்டாசுகள் இந்த நச்சை மேலும் அதிகமாக்குகின்றன. 2010 முதல் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, தீபாவளிப் பட்டாசுகளின் காரணமாக சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற மாசுப்பொருட்களின் அளவு அதிகரித்திருக்கிறது. பி.எம்.2.5 என்ற துகள்தான் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம். 2.5 மைக்ரோ மீட்டரைவிடச் சிறிய அளவில் உள்ள இத்துகள்கள், நுரையீரலில் தங்கிவிடுவதுடன் ரத்த ஓட்டத்திலும் கலக்கக் கூடியவை. பல ஆண்டுகளாக, டெல்லியின் காற்று மண்டலத்தில் இத்துகள்கள் சராசரியைக் காட்டிலும் 7 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கின்றன. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி உட்பட பல்வேறு பாதிப்புகளை இத்துகள்கள் ஏற்படுத்துகின்றன. இதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன், அரசுப் பிரதிநிதிகளிடம் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை மிகவும் குறைவு என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நாளைய தலைமுறைக்கு எப்படிப்பட்ட விஷச் சூழலை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் மிகப் பெரிய எச்சரிக்கை அல்லவா இது! உச்ச நீதிமன்றம் இந்த மனுவை எப்படிக் கையாளப்போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பொதுச் சமூகம் நாம் எப்படிக் கையாளப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x