Published : 20 Oct 2015 08:02 AM
Last Updated : 20 Oct 2015 08:02 AM
உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை தொடர்பான வழக்கில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான தகுதிகளை வரையறுத்தாலும், நியமனங்களுக்கான விதிகளை அறுதியிட்டு வகுக்கவில்லை. ஆட்சியாளர்களின் தலையீடு நீதித் துறை நியமனங்களில் வரம்பு மீறத் தொடங்கியபோது, இதற்கென ஒரு புதிய முறையைக் கொண்டுவரும் தேவை உருவானது. இப்படி 1993-ல் கொண்டுவரப்பட்டதே நீதிபதிகள் குழு நியமன முறை (கொலிஜியம்). எனினும், இந்த முறையும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. முக்கியமாக, நீதித் துறை நியமனத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது சரியானதா எனும் விவாதம் தொடர்ந்துவந்தது. இதன் தொடர்ச்சியாக, முன்மொழியப்பட்டதே ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையம்’ (என்ஜேஏசி). இந்திய அரசியல் சட்டத்தின் 99-வது திருத்தம் மூலம் 2014-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, இரு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், மத்திய அரசு நியமிக்கும் 2 பிரமுகர்கள் ஆகியோரைக் கொண்டதாகத் திட்டமிடப்பட்ட நியமன அமைப்பு இது.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே ஒரு சந்தேகத்தை உருவாக்கிவிட்டது இந்த அமைப்பின் கட்டுமானத்தன்மை. நேரடியாகப் பார்க்கும்போது ஜனநாயகத்தன்மை வெளிப்பட்டாலும், மத்திய சட்ட அமைச்சரையும், அரசின் பரிந்துரையில் 2 பிரமுகர்களையும் இந்தக் குழுவில் இணைப்பது எனும் முடிவும் குழு உறுப்பினர்களில் இருவர் நினைத்தால், எந்த முடிவையும் நிராகரிக்கலாம் என்ற ‘ரத்து விதி’யும் மறைமுகமாகப் பெரும்பான்மை அதிகாரத்தை அரசு எடுத்துக்கொள்ள வழிவகுக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. இதையெல்லாம்விட எழுந்த முக்கியமான கேள்வி, இப்படிப்பட்ட நியமன ஆணையத்தை நியமிப்பதால் நீதித் துறையின் சுதந்திரம் நெருக்குதலுக்கு உள்ளாகிறதா என்பது. இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கில்தான் அரசு கொண்டுவந்த சட்டமும் அது உருவாக்க முற்பட்ட புதிய நியமன அமைப்பும் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அமர்வு.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் ஏற்கப்பட்டு, சுமார் 20 சட்டப்பேரவைகளால் ஒப்புதல் தரப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பால் ரத்துசெய்திருப்பது மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக நடப்பதாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது. எனினும், நம்முடைய கடந்த மற்றும் நிகழ்கால அரசியல் அனுபவங்கள் சிலவற்றைப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.
ஏனென்றால், இந்திய நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், அரசு முன்மொழியும் நியமன ஆணையம் மூலம் நீதித் துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்கிறது உச்ச நீதிமன்றம். ஐவர் அமர்வின் சார்பில் மூலத் தீர்ப்பை எழுதிய நீதிபதி ஜே.எஸ்.கேஹர், “நீதித் துறை நியமன ஆணைய சட்டத்துக்குக் கொண்டுவந்த திருத்தங்கள் நீதித் துறையின் தனித்தன்மையைக் காக்க தவறிவிட்டன” என்று கூறியிருக்கிறார். மேலும், “சட்ட அமைச்சரை இதற்கான குழுவில் சேர்த்ததால் நீதித் துறையின் சுதந்திரத்துக்கும் பங்கம் ஏற்பட்டுவிட்டது. நீதித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் இடையில் தனித்தனி அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற பிரிவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அரசியல் தலையீடுகள் இல்லாமல் நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தில்லை. நீதிபதிகள் நியமனத்தில் நீதித் துறைக்கு மட்டுமே முக்கியப் பொறுப்பு இருக்க வேண்டுமா அல்லது நிர்வாகத்துறைக்கும் பங்கு தந்து அதன் மீதான நம்பகத்தன்மைக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாமா என்பதே கேள்வி. அரசியல் நிர்வாகமானது தனக்குச் சாதகமானவர்களுக்குப் பதவி அளிக்கும் போக்கு கொண்டது என்பது பல்வேறு துறைகளின் நியமனங்களிலிருந்து தெரியவருகிறது. வேண்டியவர்களுக்குப் பதவியைப் பங்கிட்டுத் தரும் நிர்வாகப் போக்கிலிருந்து நீதித் துறையைக் காப்பதற்கு வழி எதுவென்றால் நீதிபதிகள் நியமனத்தை நீதித் துறை மட்டுமே தொடர்ந்து மேற்கொள்வதுதான் என்று நீதிபதி கேஹர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் மேல், ஒரு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் அடித்தளத்தையே பாதிக்கிறதா, இல்லையா என்று ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் பெரும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம்தான் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
அதேசமயம், நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவே நியமனம் செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்த ஐவர் அமர்வில் ஒரு உறுப்பினரான நீதிபதி ஜே. சலமேஸ்வர் சுட்டிக்காட்டியிருப்பதையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் “பழைய நியமன முறையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு நியமன முறை மேம்படுத்தப்பட வேண்டும்” என்றும் ஐவருமே குறிப்பிட்டிருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, நீதிபதிகள் நியமனத்தில் எந்தவித சார்புக்கும் அதிகாரத் தவறுக்கும் இடம் கொடுக்காத, வெளிப்படையான நியமன முறையை உருவாக்க நாடு இன்னமும் திணறுகிறது என்பதையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
நாடு எதிர்பார்ப்பது ஒன்றுதான், இந்நாட்டு குடிமக்களின் கடைசி நம்பிக்கை நம் நீதித் துறை; அது களங்கங்ளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நியமனப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டதன் மூலம் அதிகாரத்தை மட்டும் அல்ல; பொறுப்பையும் தன் கையிலேயே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதிகாரத்தை நிலைநாட்டிக்கொண்டதில் இருந்த உறுதி, பொறுப்பை நிலைநாட்டுவதிலும் தொடரட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT