Published : 21 Oct 2015 10:21 AM
Last Updated : 21 Oct 2015 10:21 AM
நவீன இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரத்துக்கு இப்படி ஒரு சாபக்கேடு ஏற்பட்டிருக்க வேண்டாம். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணிக் கட்சியாகிவிட்ட சூழலில், மும்பையைச் சின்னாபின்னாமாக்கிக்கொண்டிருக்கிறது சிவசேனை.
பாகிஸ்தானைச் சேர்ந்த கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மகாராஷ்டிரத்தின் மும்பை, புனே மாநகரங்களில் நடத்த ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு சிவசேனை கடிதம் அனுப்பியது. இந்தியர்களுக்கு எதிராகக் குண்டுகளை அனுப்பும் நாட்டைச் சேர்ந்தவரின் இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று அந்தக் கடிதம் குறிப்பிடப்பட்டது. சேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சந்தித்தனர். அப்போது என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், சேனையின் தலைமையிட ஒப்புதலுடன்தான் அக்கடிதம் எழுதப்பட்டது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி ரத்தானது.
அடுத்து மும்பையில், பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் குர்ஷி முகம்மது கசூரி எழுதிய ஆங்கிலப் புத்தக வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்துவந்த சுதீந்திர குல்கர்னி மீது மையை ஊற்றி அவமானப்படுத்தினர். அவரைக் கடுமையாக எச்சரித்ததோடு, தேச விரோதி என்றும் வசைபாடிச் சென்றுள்ளனர் சிவசேனைத் தொண்டர்கள். இத்தனைக்கும் வாஜ்பாய், அத்வானி கோலோச்சிய காலத்தில் சங்கப் பரிவாரங்களுக்கு நெருக்கமாக இருந்தவர் சுதீந்திர குல்கர்னி. கசூரியின் அந்த நூல் இந்தியாவுடனான உறவைப் பற்றிப் பேசுவது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எவ்விதமான கலாச்சாரப் பரிவர்த்தனையும் நடந்துவிடக் கூடாது என்பதில் சிவசேனை தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது. இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளைக் கூடுமானவரை மகாராஷ்டிரத்தில் தவிர்ப்பது எனும் முடிவை நோக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தைத் தள்ளியதில் சிவசேனைக்காரர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. முன்பெல்லாம் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் அறிவிக்கப்பட்டால், ஆட்டக் களத்தின் மையப் பகுதியைச் சேதப்படுத்துவது, போட்டி நடைபெறும் மைதானத்தை முற்றுகையிட்டுக் கலவரம் செய்வது என்று தங்கள் அழிச்சாட்டியங்களை வெளிப்படுத்துவார்கள். இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற போர்வையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளைத் தடைசெய்யச் சொல்லி மீண்டும் அராஜகப் போக்கில் இறங்கியிருக்கிறது சிவசேனை. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சஷாங்க் மனோகருக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷார்யார் கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, திங்கள்கிழமை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர்கள், சஷாங்க் மனோகரின் அறைக்குள் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஷார்யார் கான், சஷாங்க் மனோகருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ரகளையில் ஈடுபட்டார்கள்.
இந்தக் களேபரங்களைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை டெல்லிக்கு இடம் மாற்றப்பட்டது. “போராட்டம் நடத்தியதன் மூலம் நாங்கள் எந்தக் குற்றமும் செய்துவிடவில்லை. நாங்கள் பாகிஸ்தானை எதிர்க்கிறோம். இந்த தேசத்தின் மக்கள் என்ன கருதுகிறார்களோ அதைத்தான் நாங்கள் செய்தோம். ஏனெனில், மக்களின் உணர்வுகள்தான் எங்களுக்கு முக்கியம்” என்று ‘தன்னிலை விளக்கம்’ அளித்திருக்கிறார் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டியில் பங்கேற்கவிருந்த பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் சிவசேனை மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, அவரைத் திரும்பப் பெறுவது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது. ‘இப்படியான சூழலில், இந்தத் தொடரில் நடுவர் பணியை அலீமால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை’ என்றும் ஐசிசி விளக்கம் அளித்திருக்கிறது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜாகீர் அப்பாஸ், விளையாட்டுடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நம்மில் பலர் இதையெல்லாம் கலாச்சார அச்சுறுத்தலாக மட்டும் அணுகுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் பிரச்சினை பாகிஸ்தானியக் கலைஞரோ எழுத்தாளரோ விளையாட்டு வீரர்களோ இந்தியாவில் நடக்கும் கச்சேரியில் / நிகழ்ச்சியில் பங்கேற்கும் உரிமை உண்டா இல்லையா என்பதாக மட்டும் அல்ல; இரு நாடுகளுக்கு இடையில் உறவு மோசமாக இருக்கும்போது கலை, கலாச்சாரம், விளையாட்டு போன்றவை இரு நாட்டு மக்களையும் மனதளவில் இணைக்குமா, இணைக்காதா என்பதாக மட்டும் அல்ல; மாறாக, இந்தியாவில் உள்ள இந்தியர்கள் யாருடைய கச்சேரியில் / ஆட்டத்தில் / நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பதைத் தீர்மானிக்கும் முடிவை எடுப்பது யார் எனும் உரிமை தொடர்பானதாக மாறியிருக்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.
‘மக்களுடைய உணர்வுகளைப் பாதிக்கும், எனவே நிகழ்ச்சியை ரத்துசெய்துவிடுங்கள்’ என்று சொல்லும்போது, இந்தியாவின் அனைத்து மக்களின் சார்பிலும் பேசுவதற்குத் தனக்கு உரிமை உண்டு என்று சிவசேனை கருதுவதாகத் தெரிகிறது. எல்லையற்ற அதிகாரப் போதை அதற்குத் தரும் மமதையின் வெளிப்பாடே அன்றி, இது வேறு அல்ல. சிவசேனைக்காரர்கள் வீசும் கருப்பு மை தனிநபர்கள் முகத்தின் மீது அல்ல; மாறாக, இந்திய ஜனநாயகத்தின், கலாச்சாரத்தின், கூடவே இந்தியர்களின் சுயஉரிமையின் முகத்தில் அது வழிகிறது. சிவசேனையை பாஜக அடக்கிவைக்காவிட்டால் பெரும் விலையை அதுவும் சேர்த்தே கொடுக்க நேரிடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT