Published : 28 Sep 2015 09:05 AM
Last Updated : 28 Sep 2015 09:05 AM

பாதுகாப்பு அவையை ஜனநாயகப்படுத்துங்கள்!

பாதுகாப்பு அவையைச் சீர்திருத்த முடிவுசெய்யப்பட்டிருப்பது காலதாமதமான முடிவு என்றாலும், வரவேற்கத் தக்கது. பாதுகாப்பு அவையில் புதிய உறுப்பினர்களுக்கு நிரந்தர இடமளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முதல் முறையாக முடிவெடுத்திருக்கிறது ஐநா. அரசியல், பொருளாதாரம், மக்கள்தொகைப் பெருக்கம், சமூகம் ஆகிய துறைகளிலும் நாடுகளின் எல்லைகளிலும் அரசின் தன்மைகளிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால், பாதுகாப்பு அவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் பெரிய ஜனநாயக நாடுகளுக்கு அதில் பிரதிநிதித்துவம் தரப்படுவதும் அவசியம் என்று மோடியும் வலியுறுத்தியிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சவால்களைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது. எனினும், உலக நாடுகளுக்கு இடையிலும் பல நாடுகளுக்கு உள்ளேயும் ஏற்பட்டுவரும் மாறுதல்களைச் சரியாகக் கணித்து, உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் வழிவகுக்கவல்ல நடவடிக்கை களை எடுக்கத் தவறிவருகிறது ஐ.நா. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலக அளவில் மிகப் பெரிய ராணுவ, அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டின் ஏகாதிபத்தியச் சூழலிலிருந்து, சமீபத்தில் ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சில நாடுகளின் தீவிரப் பங்களிப்பு முறை வரை பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. சர்வதேசப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் முக்கியப் பங்குகளை வகிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த மாறுதல்கள் ஐ.நா. சபையின் அமைப்பிலோ, அதன் உறுப்பு அமைப்புகளின் கட்டமைப்பிலோ, நிர்வாகத்திலோ எந்தவிதத்திலும் பிரதிபலிக்கவில்லை.

இதில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள், ‘ரத்து அதிகாரம்’ (வீட்டோ) என்ற சிறப்பு அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கின்றன அல்லது முடிவுகளை எடுக்கவிடாமல் தள்ளிப்போடுகின்றன. மேலும், ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் புவிசார்அரசியல் தன்மையுள்ள போட்டி - பூசல் காரணமாக உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமலும் செய்துவிடுகின்றன. சமீபத்திய உதாரணம் சிரியா. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூனே, “சிரியா விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவை தவறிவிட்டது” என்று ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஐ.நா. சபையில் நிறைவேறிய தீர்மானம், இது தொடர்பாக நிலவிவந்த முட்டுக் கட்டை நிலையை நீக்கிவிடும் என்று நம்பலாம். எனினும் இது நடப்பது அத்தனை எளிதானதல்ல. பாதுகாப்பு அவையின் சக்திவாய்ந்த உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றுமே தங்களுக்குள் கருத்துவேறு பாடுகள் எவ்வளவு இருந்தாலும், பாதுகாப்பு அவையில் புதிய நாடுகள் இடம்பெற்றுவிடக் கூடாது, அதிகாரமும் செல்வாக்கும் தங்கள் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் கருத்தொற்றுமை அடிப்படையில் பொது முடிவுக்கு வந்தாலும் பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்கள் அவற்றை வெட்டிச் சாய்த்துவிடும் நிலை இன்னும் நீடிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு அவை என்பது உலக நாடுகளை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றால், உலகின் எல்லாக் கண்டங்களையும், எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த நாடுகளுக்கு அங்கே பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ராஜதந்திர வியூகம் ஒன்றை அமைப்பதே ‘மூன்று பெரியண்ணன்’களின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x