Published : 11 Sep 2015 09:04 AM
Last Updated : 11 Sep 2015 09:04 AM
ஒரே மாதிரியான பதவி வகித்தவர்களுக்கு ஒரே விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் அறிவிப்பு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும் பதவியில் இருக்கும் வீரர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்த பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த மோடி அரசு பாராட்டுக்குரியது. அதேசமயம், அரசு இன்னும் நாசூக்காகவும் திறமையாகவும் இப்பிரச்சினையை அணுகியிருக்கலாம். ராணுவ ஓய்வூதியர்கள் நியாயம் வழங்கக் கோரி கடந்த 3 மாதங்களாகவே போராட்டத்தைத் தீவிரப்படுத்திவந்தனர். பிரதமர் அலுவலகம் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டது. பேச்சில் ஈடுபட்ட இருதரப்பும் விட்டுக்கொடுத்துப் போக மனம் இல்லாமல் இழுத்தனர். பிஹார் தேர்தலில் அரசுக்கு எதிராகக் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்றெல்லாம் அறிவிக்கும் எல்லைக்கு ராணுவ ஓய்வூதியர்கள் சென்றார்கள். ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று கிளர்ச்சி செய்த முன்னாள் படை வீரர்களைச் சந்தித்துத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க காங்கிரஸ், ஆம்ஆத்மி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த விஷயத்தில் காங்கிரஸின் போக்கு ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கொள்கையை அரசு நிறைவேற்றும் என்று அறிவித்த பிறகு, அதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டவும் இது தாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட முடிவுதான் என்று காட்டிக்கொள்ளவும் அது வெளியிட்ட அறிக்கை ரசிக்கத்தக்கது அல்ல. இந்தக் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஏற்று ரூ. 500 கோடி ரூபாயை ஒதுக்கியதாகக் கூறும் காங்கிரஸ், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இறுதி முடிவையும் எடுத்து அறிவித்திருந்தால் அதை யாரும் எதிர்த்திருக்கப்போவதில்லை. நிர்வாகம், தொழில்நுட்பம், நிதிப் பற்றாக்குறை ஆகிய காரணங்களைக் காட்டி இறுதித் தீர்வை எட்டாமல் இழுத்தடித்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
பேச்சுவார்த்தையில் அதிகபட்ச வெற்றி தங்களுக்குத்தான் என்று நிலைநாட்ட, மத்திய அரசின் அதிகாரவர்க்கமும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தரப்பும் முயற்சிக்கக் கூடாது. ஓய்வூதியத்தை ஆண்டுதோறும் பரிசீலிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதையும் ஆராய வேண்டும். அதேபோல, ஓய்வு பெற்றவர்களின் நலன்களை ஒற்றை உறுப்பினர் விசாரணையமைப்பு ஆராயும் என்ற அரசின் முடிவு விரும்பத்தக்கதல்ல; அனைத்து அம்சங்களையும் ஆராய எல்லாத் தரப்புக்கும் உரிய பிரதிநிதித்துவம் உள்ள ஆலோசனைக் குழுவை நியமிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
இதனிடையே, ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டதைப் போலத் தங்களுக்கும் ஓய்வூதியம் சீரமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களும் கோர முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தம் வாழ்நாளின் நடுப்பகுதியில் பணியிலிருந்து விலகுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நல்ல மாற்று வேலை கிடைத்துவிடுவதில்லை. இதிலுள்ள நியாயத்துக்காகவே இந்தக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. 58 வயது வரை பாதுகாப்பாகப் பணியாற்றி ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களை ராணுவத்தினருடன் ஒப்பிட்டுக்கொள்ளக் கூடாது. அதேபோல, நாட்டின் பெரும் தொகையான மக்களுக்கு விவசாயம் உள்ளிட்ட அமைப்புசாராக் களங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் பணிக் காலத்திலும் சரி; வயதான காலத்திலும் சரி; எந்தப் பாதுகாப்பும் அரசால் வழங்கப்படவில்லை; இன்னும் அவர்களுடைய குறைந்தபட்ச தேவைகளேகூடப் பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது என்பதை ராணுவ ஓய்வூதியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லோருக்குமே கவனம் தேவைப்படுகிறது இப்போது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT