Published : 12 Sep 2015 09:26 AM
Last Updated : 12 Sep 2015 09:26 AM
உணவு தொடர்பாக மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது மகாராஷ்டிரத்தில். கடந்த மார்ச் மாதம், மாட்டுக் கறி விற்பனையைத் தடைசெய்தது மகாராஷ்டிர அரசு. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டமும் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக, நாடு முழுவதும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ஜெயின் சமூகத்தினர் கடைப்பிடிக்கும் ‘பர்யூஷண் பர்வ’ பண்டிகையையொட்டி, மிரா பயாந்தர் நகராட்சியில் 8 நாட்களுக்கும், பிருகண் மும்பை மாநகராட்சியில் நான்கு நாட்களுக்கும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகிய அசைவ உணவுகளுக்குத் தடை விதித்திருக்கிறது பாஜக தலைமையிலான உள்ளாட்சி நிர்வாகங்கள்.
இப்போது மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மூன்று நாட்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளுக்குத் தடை விதித்திருக்கிறது. அதேபோல், குஜராத்தின் அகமதாபாத் நகரிலும் மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கப் பட்டிருக்கிறது.
இப்படி ‘பர்யூஷண் பர்வ’ பண்டிகைக்காக, இறைச்சிக்குத் தடைவிதிக்கப் படுவது புதிதல்ல. அக்பர் காலத்தில் தொடங்கி, அதற்கென நீண்ட வரலாறு இருக்கிறது. இரு தசாப்தங்களுக்கு முன்பு குஜராத் அரசு இப்படி விதித்த தடையை எதிர்த்து, அகமதாபாத்தைச் சேர்ந்த இறைச்சி விற்பனையாளர்கள் வழக்கு தொடர்ந்தபோது, அதன் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, நீதிமன்றம் ‘அக்பர் ஆட்சியின்போது, ஜெயின் சமூகத்தவரின் பண்டிகையையொட்டி, குஜராத்தில் ஆறு மாதங்களுக்கு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்காலத்தில் ஆண்டுக்கு 9 நாட்களுக்கு இறைச்சியைக் கைவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாததா என்ன?’ என்று கேள்வி எழுப்பியதுடன், அகமதாபாத் நகராட்சியின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
ஆக, தடை புதிதல்ல. எனினும், தடைக்குப் பின் உள்ள உள்நோக்கங் களைச் சந்தேகத்துக்குள்ளாக்குவதைத் தவறென்று சொல்ல முடியாது. ஒரு இஸ்லாமிய மன்னரான அக்பர், தன் ஆட்சிக் காலத்தில் இந்து மதத்தோடு நெருக்கமான உறவு உடைய ஜெயின் சமூகத்தினரின் பண்டிகைக்காகத் தடை விதித்தது சமூக நல்லிணக்கத்தின் வெளிப்பாடு என்பது வெளிப்படை. ஆனால், இந்து மதப் பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தும் பாஜக, இந்து மதத்தோடு நெருக்கமான உறவு உடைய ஜெயின் சமூகத்தினரின் பண்டிகைக்காக இறைச்சிக்குத் தடைவிதித்திருப்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியின் பின்னணியில் நியாயங்கள் இருக்கின்றன. ஏனென்றால், மத அரசியல் சார்ந்து மக்களின் உணவுப் பழக்கத்தோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் கட்சி இது. பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதைத் தடுக்கும் அளவுக்கு பாஜகவைச் செல்ல வைப்பது எது?
இது தேவையற்ற நடவடிக்கை என்று எதிர்க் கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனிடையே, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் ‘எங்கள் பண்டிகைக்காக மற்றவர்கள் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் இதைக் கடுமையாக எதிர்த்துப் போராட்டங்களில் இறங்கியிருக்கிறது. ‘இந்தியாவிலேயே மும்பையில்தான் ஜெயின் சமூகத்தினர் அதிகமாக (கிட்டத்தட்ட 4%) வசிக்கிறார்கள். பாஜக மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டது’ என்று எதிர்க் கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு விபரீத ஆட்டம் ஆடுகிறது பாஜக. மக்களின் உணவோடு விளையாடுவது அவர்கள் உணர்வுகளோடு விளையாடுவதேயாகும். உண்மையில், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கு கிறோம் என்ற இதெல்லாம் சமூகப் பிளவுக்கே வழிவகுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT