Published : 29 Sep 2015 09:20 AM
Last Updated : 29 Sep 2015 09:20 AM
மோடி மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருப்பது இயல்பானது. அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதையும் முதலீடுகளை ஈர்ப்பதையுமே முக்கிய நோக்கங்களாகக் கொண்டு மோடி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசும் தொழிலதிபர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்குக்கு 300 கோடி டாலர் மதிப்புள்ள விமானக் கொள்முதல் ஆணையுடன் சென்றார். பதவியேற்றது முதற்கொண்டே நாட்டுக்குள் முதலீடுகளைக் கொண்டுவர மோடி எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்கத்தான் வேண்டும். அதேசமயம், முதலீடுகளை ஈர்க்க அழைப்புகளும் வாக்குறுதிகளும் மட்டுமே போதுமானவையா என்பதையும் அரசு சிந்திக்க வேண்டும். இந்தியாவில் அடிப்படைக் கட்டுமானத்தில் இருக்கும் பெரும் இடைவெளியை நாம் எந்த அளவுக்குத் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.
பிரதமர் நாட்டின் எந்தப் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினாலும் இரு விதமான வேலைகளை அரசு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 1. நிலம், மின்சாரம், சாலை வசதி எனத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கித் தருவது. 2. ஒரு புதிய ஆலை உருவாகும்போது சூழலியலும் அங்குள்ள மக்களுடைய வாழ்விலும் அது ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கங்களையும் கணக்கிட்டு அதற்கேற்ற மக்கள் நலன்சார் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கித் தருவது. நம்முடைய அரசாங்கங்கள் முதலாவது கட்டமைப்பையாவது போட்டு அடித்து உருவாக்கிவிடுகின்றன. இரண்டாவது கட்டமைப்பைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஆனால், தொழில் வளர்ச்சிக்கு நாடு கொடுக்கும் விலை அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில், இனியும் இதே பாதையில் நாம் செல்ல முடியாது என்பதை அரசு உணர வேண்டும். இந்த இரு விதமான கட்டமைப்புகளையும் உருவாக்குவதே ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும் எனில், அதற்கு இந்த ஒன்றேகால் ஆண்டில் மோடி அரசு இது தொடர்பாக எத்தனை அடிகளை எடுத்து வைத்திருக்கிறது என்று சூழலியலாளர்கள் எழுப்பும் கேள்வி முக்கியமானது.
ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது அதன் பாதுகாப்பு மன்றத்தைச் சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். இதே நோக்கத்துடன் கூடிய ‘குரூப்-4’ நாடுகள் (இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில்) கூட்டத்தையும் முன்னின்று நடத்தினார். இந்த விவகாரத்தில் இது ஒரு முக்கியமான நகர்வு எனினும், ராஜதந்திரரீதியாக நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. முக்கியமாக, அமெரிக்காவையே இன்னும் முழுமையாக நம் பக்கம் இழுக்க முடியவில்லை. இந்தியா அமெரிக்கா இடையிலான உறவானது தொழில் துறையில் நெருக்கம் அதிகரித்திருந்தாலும் பாதுகாப்பு வியூக அடிப்படையிலான உறவு இன்னமும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. பாதுகாப்பு மன்றத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையைக்கூட அமெரிக்கா ஏற்கத் தயங்கும் பின்னணியைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒருபுறம் பாகிஸ்தானுடன் அதற்குள்ள நெருக்கம்; மறுபுறம் இந்தியா எங்கே சீனா, ரஷ்யாவுடன் எல்லாம் கைகோத்துவிடுமோ என்ற சந்தேகம். எல்லாவற்றையும் கடந்துதான் நாம் செல்ல வேண்டியுள்ளது. பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்பதுதான் சமிக்ஞை சொல்லும் செய்தி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT