Published : 23 Sep 2015 10:06 AM
Last Updated : 23 Sep 2015 10:06 AM
மோடி ஒரு சிறந்த நிர்வாகி; தன் சகாக்கள் / அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் வல்லவர் என்ற பேச்சும்கூட ரொம்ப சீக்கிரம் அடிவாங்கிவிடும்போல் இருக்கிறது. கல்வி/கலாச்சார நிறுவனங்களுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் போக, அவருடைய அமைச்சரவை சகாக்களும் வரிசையாக இதை நிரூபிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. வாயைத் திறந்தாலே சர்ச்சைகள்தான்!
டெல்லியில் ஒரு சாலைக்கு மொகலாயச் சக்ரவர்த்தி ஒளரங்கசீப்பின் பெயரை நீக்கிவிட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரைச் சூட்டியதை நியாயப்படுத்திய சர்மா, கலாமைப் பாராட்டுவதைப் போல முஸ்லிம்களைக் காயப்படுத்தியிருக்கிறார்: “ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் மனிதாபிமானம் மிக்கவராகவும் தேசியவாதியாகவும் திகழ்ந்தவர் கலாம்.” இதற்கு என்ன அர்த்தம்? முஸ்லிம்கள் என்றால் மனிதாபிமானம் அற்றவர்கள், தேசப் பற்றற்றவர்கள் என்பதுதானே? அடுத்து, “பைபிள், திருக்குரான் மீதும் எனக்கு மரியாதை உண்டு.
ஆனால், இந்தியாவின் ஆன்மாவுக்கு கீதையும் ராமாயணமும் இருப்பதைப் போல அவை மையமானவை அல்ல” என்றார். நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்துமே இதைக் கண்டித்தன. “பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களைப் பிரித்தாண்டதைப் போல பாஜகவும் செயல்படுகிறது” என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியது. இதையடுத்து, தான் சொன்னதைப் பத்திரிகைகள் திரித்துவிட்டதாகக் கூறி விளக்கம் அளித்தார் மகேஷ் சர்மா.
அந்த சர்ச்சை அடங்கவில்லை; அடுத்த சர்ச்சையைத் தொடங்கி விட்டார். “இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே போய் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது பிற நாடுகளில் சரியாக இருக்கலாம்; பெண்கள் வீட்டைவிட்டு இரவில் வெளியே வருவதும், வேறிடத்தில் தங்குவதும் இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகேஷ் சர்மா கூறியிருக்கிறார். “ஒரு பெண் என்றைக்கு நள்ளிரவில் தைரியமாக வெளியே சென்றுவரும் சூழல் வருகிறதோ, அன்றைக்குத்தான் அந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்று கூறிய காந்தியின் நாட்டை ஆளத்தான் எப்படிப்பட்ட அமைச்சர் பெருமக்கள்!
டெல்லியை அடுத்த நொய்டா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா, தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர். மிகச் சமீபத்தில்கூட பாஜக அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலைப் பெறுவது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தபோது, “தேசியக் கொள்கை குறித்து ஆர்எஸ்எஸ்ஸுடன் அமைச்சர்கள் விவாதிப்பதில் என்ன தவறு?” என்று சீறியவர். மகேஷ் சர்மாவின் கருத்துக்கள் பிற்போக்குத்தனமாகவும் இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்துக்கு எதிராகவும் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
ஆனால், அவரோ தொடர்ந்து தன் போக்கில் பேசுகிறார். அன்னாருடைய அடுத்த அதிரடி, “கலாச்சாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அமைப்புகளையும் திருத்தியமைக்க வேண்டியிருக்கிறது” என்பது. மாற்றி அமைக்கப்பட வேண்டிய பட்டியலில் தேசிய நாடகப் பள்ளியையும் அவர் சேர்த்திருக்கிறார். “இந்தியக் கலாச்சாரத்தைச் சரியான முறையில் பிரதிபலிக்க நாம் தவறிவிட்டோம்; விரிவான திட்டங்களைத் தயாரித்த பிறகு இவற்றையெல்லாம் மாற்றுவோம்” என்கிறார்.
பிரதமர் மோடி இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்? மகேஷ் சர்மாவின் கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரத் துறையின் கலாச்சாரமாகவும் நம் கலாச்சார அமைப்புகளின் கலாச்சாரமாகவும் நாட்டின் கலாச்சாரமாகவும் மாறும் என்றால், எதிர்கால இந்தியா என்னவாகும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT