Published : 19 Sep 2015 08:23 AM
Last Updated : 19 Sep 2015 08:23 AM
இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும்; இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் அன்றாடம் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. பெங்களூருவில் மட்டுமல்ல; மாநிலத்தின் இதர நகரங்களிலும் சிறு நகரங்களிலும்கூட இதே கதைதான். அதிர்ச்சி தரும் வகையில், மாநிலத்தின் அனல் மின் நிலையங்கள் தங்களுடைய மின்உற்பத்தித் திறனில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவாகத்தான் மின்சாரத்தை உற்பத்திசெய்கின்றன. இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நிலக்கரி கிடைக்காமல் அல்ல; நிலக்கரி கிடைத்தும் மாநில மின்வாரியமும் விநியோக அமைப்பும் மின் தேவைக்கு ஏற்ப, மின்உற்பத்தியை அதிகரிக்க விருப்பமில்லாமல் இருக்கின்றன என்பதுதான். முதல் முறையாக, மத்திய அரசின் நிறுவனமான ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்திவிட்டு, ‘சுரங்க வாயிலில் நிலக்கரி மலைபோலக் குவிந்துவிட்டது, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஒவ்வொரு வாடிக்கையாளராகக் கூவிக்கூவி அழைக்கும் சூழலில்கூட இப்படியெல்லாம் நடக்கும் கூத்துகளை என்னவென்று சொல்வது!
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் மூத்த அதிகாரி களும் ஓராண்டுக்கு முன்னால், நிலைமை இப்படி மாறும் என்று கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார்கள். நிலக்கரித் துறையைச் சீரமைப்பதில் பியூஷ் கோயல் காட்டிவரும் உத்வேகத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். நிலக்கரி உற்பத்தி சீராகத் தொடரவும் அதிகரிக்கவும் முனைப் பான நடவடிக்கைகளை அவர் எடுக்கிறார். 5 ஆண்டுகளில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை அவர் நிர்ணயித்திருக்கிறார். விளைவாக, இப்போது உள் நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அனல் மின்நிலையங்களின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், மின்உற்பத்திக்கு 25 அல்லது 26 நாட்களுக்கும் மேல் தேவைப் படும் நிலக்கரியை வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ள மின்வாரி யங்கள் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. கையிருப்பில் நிலக்கரி வாங்கி வைத்துக்கொண்டால், அது நிதிச் சுமையாகிவிடும் என்பதுதான் ஒரே காரணம். எல்லா மின்வாரியங்களும் சேர்ந்து ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்துக்கும், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளன. இதனால், நிலக்கரியையோ மின்சாரத்தையோ வாங்கும் நிலையில் அவை இல்லை.
மோசமான மின் கொள்கைகளால் மின்சாரத்துக்கான நிதிச் சுமை அதிகரித்துள்ளது. மேலும், மின்சாரத்தைக் கொண்டுசெல்லும்போதும், மின் விநியோகத்தின்போதும் ஏற்படும் ‘இழப்பு’ என்று மாநில அரசுகள் பூசி மெழுகும் மின் திருட்டை எப்போது தடுத்து நிறுத்தப்போகின்றன என்றும் தெரியவில்லை. ஊழல், முறைகேடு, நிர்வாகச் சீர்குலைவு போன்றவற் றால் பல மின்வாரியங்கள் தடுமாறுகின்றன. மேலும், தொழில்துறைக்கு வாரியிறைக்கப்படும் சலுகைகள், முன்னுரிமைத் துறைகளுக்குத் தரும் மானியம் போன்றவற்றாலும் வருவாய் இழப்புக்கு ஆளாகின்றன. 2000-க்குப் பின் மின்வாரியங்களை நஷ்டத்திலிருந்து மீட்க இரு முறை பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், மின்வாரியங்கள் தங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் பழைய வழியிலேயே நடைபோடுவதால் மீண்டும் நிதியிழப்புகளைச் சந்திக்கின்றன.
மின்சாரக் கொள்கைகளைச் சீர்திருத்திக்கொள்ளாமல், நுகர்வோர் மீது மின்வெட்டைத் திணிப்பதில் நியாயமே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT