Published : 05 Sep 2015 08:33 AM
Last Updated : 05 Sep 2015 08:33 AM
புது டெல்லியில் 1997-ல் நடைபெற்ற தீ விபத்தில் 59 பேரின் உயிரைப் பறித்தும் நூற்றுக்கும் மேற்பட்டவரைக் காயப்படுத்தியும் இந்தியாவின் விபத்து வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ‘உபகார்’ திரையரங்க வழங்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு மிகுந்த வேதனையைத் தருகிறது. திரையரங்க உரிமையாளர்கள் சுசீல் அன்சல் (77), கோபால் அன்சல் (67) இருவரும் தலா ரூ.30 கோடியை டெல்லி அரசுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும், அந்தத் தொகையைக் கொண்டு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அனில் ஆர் தேவ், குரியன் ஜோசப், ஏ.கே. கோயல் அடங்கிய அமர்வு, அவர்கள் சிறையில் கழித்த 5 மாதங்களைச் சிறைத்தண்டனையாகக் கருத உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அவர்கள் இந்த அபராதத்தைச் செலுத்த அவர்களுக்கு 3 மாதம் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும் கோடீஸ்வரர்களான அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தண்டனை என்பது மிகமிகக் குறைவு என்றே கருத இடமிருக்கிறது. 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கெல்லாம் வீண்தானோ என்ற உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் வேதனையை நாம் புறந்தள்ளிவிட முடியாது என்றே தோன்றுகிறது.
அந்த விபத்து ‘பார்டர்’ இந்தி திரைப்படம் திரையிடப்பட்டபோது நடந்தது. ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், வழக்கமான இருக்கை களுடன் கூடுதலாக இருக்கைகள் போடப்பட்டு, யாரும் எளிதில் வெளியேற முடியாதபடிக்கு வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. வெளியேறுவதற்கான வழிகளும் அதிகமில்லை. அத்துடன் திரையரங்கின் உள்ளரங்க வேலைப் பாடுகளும் எளிதில் தீப்பிடிக்கும் விதத்திலும் விஷப்புகை அதிகமாகும் விதத்திலும் இருந்தன. இதனால் நெருப்பில் சிக்கி இறந்ததைவிட நச்சுப் புகையைச் சுவாசித்ததாலும் நெரிசலில் சிக்கியுமே பெரும்பாலானவர்கள் இறக்க நேர்ந்தது. தீப்பிடித்த உடனேயே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் திரையரங்கில் இருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமல் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திரையரங்க உரிமையாளர்களின் பணத்தாசையே எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தது.
பத்தாண்டு கால விசாரணைக்குப் பிறகு, 2007-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த விபத்துக்குக் காரணமானவர்களுக்கு அவரவர் பொறுப்பு, பதவிக்கேற்பத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் மேல் முறையீடு செய்தனர். திரையரங்க உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்படாமல், உயிரிழப்பு நேரிடுவதற்கு அலட்சியம் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கக் கோரி திரையரங்க உரிமையாளர்களும், தண்டனையை அதிகப்படுத்த வேண்டும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வு அமைப்பும் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பும் மேல் முறையீடு செய்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தாக்கூர், மிஸ்ரா அமர்வு ரூ.100 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பு கூறியிருந்தது. இந்நிலையில், 3 நீதிபதிகள் அமர்வு அபராதத்தைக் குறைத்ததல்லாமல் சிறைவாசத்தையும் முடித்துவைத்திருக்கிறது.
இந்திய மக்கள் இன்னமும் நீதிமன்றங்களிடமும் நீதிபதிகளிடமும்தான் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகளைக்கூட அவர்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லை. பொதுமக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியமாக இருந்தவர்களுக்கு வழங்கும் கடும் தண்டனைதான் மற்றவர்களுக்கு நல்ல எச்சரிக்கையாக அமைய முடியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT