Published : 01 Sep 2015 08:51 AM
Last Updated : 01 Sep 2015 08:51 AM

வெங்காய விலையேற்றம் சொல்வது என்ன?

வெங்காயம் விலை திடீரென உச்சத்துக்குப் போய் மக்களை வதைப்பதும் திடீரெனச் சரிந்து விவசாயிகளை வதைப்பதும் நம் நாட்டில் தொடர்கதையாகவே மாறிவிட்டது. ஆனால், ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள எளிய பதில் ஒன்று இருக்கிறது: பருவ மழை. 2013-ல் வெங்காயம் விலை உயர்ந்தபோது, மிதமிஞ்சிய மழை என்று சாடினார்கள். 2014-ல் போதிய மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்துவிட்டது என்றார்கள். இப்போதும் அதே கதைதான்.

பருவமழைக் காலம் முடியும்போதுதான் வெங்காய விலை இப்படித் தாறுமாறாக ஏறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். அதாவது, வெங்காயச் சாகுபடியாளர்களுக்கு இதில் சம்பந்தமே இல்லை. வெங்காயத்தை இப்படி விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்கள் இடைத்தரகர்கள். மகாராஷ்டிரத்தின் லசல்காவோன் என்ற வெங்காய மொத்த விற்பனைச் சந்தையில், மே மாதம் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 11-க்கு விற்றது. ஆகஸ்ட் 22-ல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.57 ஆக உயர்ந்தது. டெல்லியில் இன்னமும் மோசம், ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்விலிருந்து காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் சில பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நேர்மையாக, திறமையாகப் பிரச்சினைகளைக் கையாளத் தொடர்ந்து தவறுகிறார்கள். விலை குறைவாக இருக்கும்போது ஏற்றுமதிக்கு அனுமதி தந்தும், விலை உயரும்போது ஏற்றுமதியைத் தடை செய்தும் நடவடிக்கை எடுப்பதைப் போலக் காட்டிக்கொள்கிறார்கள். இது அவர்களுடைய தப்பித்தலுக்கு உதவலாம். மக்களுக்கும் விவசாயிகளுக்கும்? விலை உயர்ந்தாலும் சரிந்தாலும் சாகுபடியாளர்களுக்கு லாபமே கிடையாது. மக்கள் அரிதாகச் சில சமயங்களில் லாபத்தையும் பெரும்பாலான சமயங்களில் நஷ்டத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

நாட்டின் மொத்த வெங்காய தேவை என்ன, சாகுபடிக்கு ஆகும் செலவு என்ன, எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது, எவ்வளவு சரக்கைக் கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியும், இன்னும் கட்ட வேண்டிய கிடங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நிபுணர் குழு அமைத்து ஆராய முடியும். ஆண்டுதோறும் 16 கோடி டன் வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காய உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே உள்ள இடைவெளியை மட்டுமல்ல, நுகர்வுப் பருவத்தையும் மாத, வார வாரியாகக் கணக்கிட்டு அரசே நேரடியாக வாங்கி விநியோகிக்கத் தொடங்கினால் விலை கட்டுக்குள் வரும்.

வெங்காயம் மட்டும் அல்ல; உருளை, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றிலும் இடைத்தரகர்கள் அல்லது பெருந்தரகர்கள் மூக்கை நுழைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் போக்குக்கு முடிவுகட்டினால் பணவீக்க விகிதம், விலைவாசி இரண்டையும் கட்டுக்குள் வைக்கலாம். இதனால் உற்பத்திச் செலவுகளும் கட்டுக்குள் வரும். கருப்புப் பணம் திரள்வது கணிசமாகத் தடுக்கப்படும். ஆனால், பொது விநியோக அமைப்பையே தொலைத்துத் தலை முழுக விரும்பும் ஓர் அரசு இதில் ஆர்வம் காட்டுமா? சந்தேகம்தான். தீப்பிடித்து எரிந்த பிறகு தண்ணீரை எடுத்துக்கொண்டு ஓடுவதைவிட, தீப்பிடிக்க முடியாத நிலையை உருவாக்குவதே புத்திசாலித்தனம். ஆனாலும்கூட, தூங்குபவர்களைத்தானே நாம் எழுப்ப முடியும்? தூங்குவது மாதிரி நடிப்பவர்களை என்ன செய்ய முடியும்? மக்கள்தான் பாடம் கற்(க)பிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x