Published : 07 Sep 2015 09:12 AM
Last Updated : 07 Sep 2015 09:12 AM
இந்திய ரியல் எஸ்டேட் துறையினருக்கும் வீடு விற்பனையாளர்களுக்கும் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார் நம்முடைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன். சந்தை வளர்ச்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, வீடுகளுக்கான விலையைக் கடுமையாக நிர்ணயித்து, யாருமே வாங்க முடியாத சூழலில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள், அடுக்ககங்கள் பூட்டிக்கிடக்கும் நிலையில், வீட்டின் அநியாய விலை பெரும் பொருளாதாரத் தேக்கத்தை உருவாக்கிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சென்னையில் மட்டுமே சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டி விற்பனையாகாமல் பூட்டிக் கிடக்கின்றன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனால், வீடு விற்பவர்களோ கற்பனையில் வீட்டின் விலையை நிர்ணயித்துக்கொள்கிறார்கள். விளைவு, ஒரு பெரும் தேக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன் அதிர்வுகள் வங்கித் துறையில் எதிரொலிக்கின்றன. “வீட்டுக் கடன் இனத்திலான வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் இப்போது மிகவும் தாழ்நிலையை அடைந்துவிட்டது.
2008-ல் இது போன்ற சூழல் உருவானபோது, வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தை 8% ஆகக் குறைத்தோம். அது நல்ல விளைவை உண்டாக்கியது. ஆகையால், இப்போதும் வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா. இதற்குப் பதில் அளிக்கும்போதுதான், “வீடு வாங்க நினைப்போருக்கு முக்கியமான பிரச்சினை அதீத விலைதானே தவிர, வீட்டுக் கடனுக்கான வட்டி அல்ல. வட்டிக்கு அஞ்சி யாரும் வீடு வாங்கத் தயங்குவதில்லை.
வீட்டின் விலையைக் குறைத்தால் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலம் விற்பனையாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தேங்கியிருக்கும் வீடுகள் விற்றுத்தீரும்” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ராஜன்.
ரகுராம் ராஜன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. வீட்டுக் கடன் இனத்தில் வளர்ச்சி 15.6% ஆக இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வங்கிகள் வீட்டுக் கடனாகக் கொடுத்த தொகை ரூ.88,400 கோடி. இது வங்கிகள் கொடுத்த மொத்தக் கடன் அளவில் 21%. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வங்கிகள் தங்களுடைய கடனில் பெரும் பகுதியை வீட்டுக் கடன் துறைக்குத்தான் ஒதுக்கியிருக்கின்றன. எனவே, கட்டிய வீடுகளும் அடுக்ககங்களும் விற்பனையாகாமல் இருப்பதற்குக் காரணம் வட்டி வீதமோ, வங்கிகள் கடன் தரத் தயங்குவதோ அல்ல, வீடுகளின் விலை அதிகம் என்பதுதான்.
ஆனால் வீடு, வீட்டு மனை, அடுக்ககம் ஆகியவற்றை விற்போர் இந்த யோசனையை ஏற்பதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான விற்பனையிலேயே அதிக லாபம் பார்க்க ஆசைப்படுகின்றனர். விற்காமல் கிடக்கும் வீடுகள் முதலீடுகளைப் பதம் பார்ப்பவை என்பதைக்கூட அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. பேராசை அவர்களை ஆட்டுவிக்கிறது. விளைவு, வீடுகளின் விலை வாங்கும் சக்திக்கும் அப்பாற்பட்டிருப்பதாகப் பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இது பெரிய தேக்கத்துக்கே வழிவகுக்கும்.
மேலும், கட்டுமானத் துறை மற்றும் அதுசார் தொழில்கள், அவற்றிலிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு என்று தொடர் சங்கிலியாகப் பெரும் பொருளாதாரத் தேக்கத்தை உருவாக்கும். ரகுராம் ராஜனின் எச்சரிக்கையைப் பெரும் கவனம் கொடுத்து அணுக வேண்டும் என்றே தோன்றுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT