Published : 29 Aug 2015 08:56 AM
Last Updated : 29 Aug 2015 08:56 AM
அரசுத் துறை வங்கிகளுக்குப் புத்துயிர் ஊட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ‘இந்திரதனுஷ்’7 அம்சத் திட்டம், குன்றியிருக்கும் அவற்றின் உற்சாகத்தை மேலெழச் செய்யலாமே தவிர, புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்று தோன்றவில்லை. பின்னே? இதுவரை வந்த அரசுகள் அத்தனையும் என்ன செய்தனவோ, அதையேதானே இந்த அரசும் செய்கிறது; விளைவு மட்டும் எப்படி மாறுபட்டதாக இருக்கும்?
அரசுத் துறை நிறுவனங்களின் நிர்வாகத்தைச் செழுமைப்படுத்த அவற்றை மாற்றியமைப்பதும், வலுப்படுத்துவதும், தொழில்முறை நிர்வாகக் கலாச்சாரத்தை ஊட்டுவதும், வெளிப்படையான செயல்பாட்டை ஊக்குவிப்பதும், தொழிலாளர்கள் நலன்களை மேம்படுத்துவதும், எல்லா முடிவுகளுக்கும் மேலிடத்தில் இருப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். ஆனால், அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் - ஊழியர்கள் மட்டத்தில் கலந்தாலோசித்து, ஒரு நல்ல முடிவாக எடுப்பதும் அதைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் மிகமிக அவசியம்.
மத்தியில் இதுவரை ஆட்சியிலிருந்த அரசுகள் எதுவும் பேசாத திட்டமில்லை இந்த 7 அம்சத் திட்டம். அரசுத் துறை வங்கிகளில் மறுமுதலீட்டை மேற்கொள்வது, வங்கி நிர்வாகத்தைத் தொழில்முறை நிர்வாகமாக்குவது, வங்கியின் உயர் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய நிர்வாகக் குழு வாரியம் அமைப்பது, அரசுத் துறை வங்கி நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது, தொழில்முறை நிர்வாக முறைமையை ஊக்குவிப்பது, உயர் நிர்வாகக் குழுவின் முடிவுகளுக்கு அதில் இருப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது என்பதெல்லாம் சரி, முக்கியமானது உறுதியான செயல்பாடு அல்லவா?
ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், அரசுத் துறை வங்கிகளின் லாபத்தில் 21% குறைந்திருக்கிறது. பல அரசுத் துறை வங்கிகளில் சுதந்திரமான ஒரு இயக்குநர்கூட இல்லை. ஒரு சில அரசு வங்கிகளுக்குத் தனியார் வங்கி நிர்வாகிகளைப் புது நிர்வாகிகளாக நியமித்த அரசு, எதிர்காலத்தில் அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளாக ‘அரசு வங்கிகளில் பணிபுரிந்தவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்’என்று ஊழியர் சங்கங்களின் எதிர்ப்புக்குப் பிறகு கூறியிருக்கிறது. வங்கித் துறையில் திறமையையும் பொறுப்பேற்பையும் ஊக்குவிக்க, செயல்பாட்டின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்யப்படும் என்று முதலில் அறிவித்த அரசு, அதிலிருந்து இப்போது பின்வாங்கியிருக்கிறது. நன்றாகச் செயல்படும் வங்கிகளுக்குத்தான் மறுமுதலீடு வழங்கப்படும் என்று முதலில் அறிவித்த அரசு, இப்போது அதிலிருந்தும் பின்வாங்கியிருக்கிறது. வங்கி ஊழியர்களை அவர்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடும் உத்தேசம் எதையும் அரசு முன்வைக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது. அரசுத் துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரித்துவருகிறது, லாபம் குறைந்துவருகிறது என்றபோதிலும் இதையெல்லாம் கையாள்வதற்கான என்ன நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது?
மத்தியில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் அரசுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதே லட்சியம் என்று அறிவிக்கின்றன, அதைச் செயல்படுத்த வேண்டிய நேரத்தில் பின்வாங்கிவிடுகின்றன. நம்முடைய அரசுத் துறை வங்கிகளுக்கு என்று ஒரு தனித்துவமும் பல சிறப்பம்சங்களும் உண்டு; போலவே குறைகளும் பலவீனங்களும். மீண்டும் அவை ராஜநடை போட வேண்டும் என்றால், ஒரு எழுச்சி தரும் மறுமலர்ச்சித் திட்டமும் அதை உறுதியாகச் செயல்படுத்தும் செயல்பாடுகளும் வேண்டும். அறிவிப்புகளாலேயே வண்டி ஓட்ட முடியாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT