Published : 15 Aug 2015 09:37 AM
Last Updated : 15 Aug 2015 09:37 AM
சுதந்திரத்தின் அருமைபெருமைகள் ஆண்டுதோறும் நினைவு கூரப்படுகின்றன. சுதந்திர இந்தியா 68 ஆண்டுகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் சாதனைகள் ஒருபுறம் இருக்க, சமூக தளத்தில் பல முற்போக்கான அம்சங்கள் சுதந்திரத்தால் சாத்தியமாகியிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எல்லோருக்கும் வாக்குரிமை போன்ற முற்போக்கான அம்சங்கள் இந்தியாவில் எந்தப் போராட்டமும் இன்றி அமலாக்கப்பட்டன என்பதை மறந்துவிட முடியாது. மேற்கு உலகில் பெண்களுக்கான வாக்குரிமையை வென்றெடுக்கப் பல போராட்டங்கள் தேவைப்பட்டன என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் உள்ள அருமை புரியும். அனைவருக்குமான சம உரிமை, வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டதால் ஒடுக்கப்பட்டவர்களைக் கைதூக்கிவிட இடஒதுக்கீடு, சொத்துரிமையில் பெண்களுக்கும் பங்கு முதலான பல முற்போக்கான அம்சங்கள் இந்திய சுதந்திரத்தின் பெருமையைப் பறைசாற்றுபவை.
எனினும், பிரச்சினைக்குரிய அம்சங்கள் பெருமைக்குரிய அம்சங் களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்குப் போட்டியிடுகின்றன என்பதுதான் ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் நாம் எதிர்கொள்ளும் சவால். இன்னமும் இந்நாட்டில் கல்வியறிவற்றோர், சிறார் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள், பிச்சைக்காரர்கள், புற்றுநோய், காசநோய், தொழுநோய் போன்ற நோயாளிகள், பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக இருப்பது நாம் இன்னமும் முன்னேறிவிடவில்லை என்பதையே காட்டுகிறது.
மின்சார வசதி இல்லாத கிராமங்களும் வீடுகளும் கோடிக்கணக்கில் இருக்கும்போது, மேற்கொண்டு புனல்மின் திட்டங்களை நிறைவேற்ற இடம் இல்லாதபடிக்குக் காடுகளை அழித்து நதிகளை நாசப்படுத்திவிட்டோம். அனல் மின் நிலையங்களை அமைப்பதிலும் பின்தங்கியிருந்தாலும் அமைத்த அனல் மின் நிலையங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் வழி தெரியாமல் திண்டாடுகிறோம்.
கழிவு நீரைச் சுத்தப்படுத்தி மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டிய நாளில், நல்ல நீர் ஓடும் ஆறுகளையே கழிவு நீர் சாக்கடைகளாக்கிவிட்டு, தூய்மைப்படுத்துவதற்கு வழியில்லாமல் திகைத்து நிற்கிறோம். தொழில் உற்பத்தியை விரைவுபடுத்தும் வகை புரியாமல் உலக சமுதாயங்களால் ஒதுக்கப்படும் தோல் பதனத் தொழிற்சாலைகள், கொடூரமான ரசாயன ஆலைகள், சாயமேற்றும் ஆலைகளை அனுமதித்துவிட்டு நிலம், நீர், காற்று மூன்றையும் நாசமாக்கிவிட்டுக் கையைப் பிசைந்தபடி நிற்கிறோம். அணுமின் நிலையங்களை அமைப்பதில் புதிய போட்டியை நாமே தொடங்குகிறோம்.
மக்களே மக்களை ஆள வேண்டிய ஜனநாயக நாட்டில் மக்களைக் கலந்தாலோசிக்காமல், மக்களுக்கு எதிரான முடிவுகளை, மக்கள் தலைமீதே திணிக்கும் நிலையிலேயே நாட்டின் நிர்வாக அமைப்புகளை மாற்றிவிட்டிருக்கிறோம். சுதேசி மன்னர்களையும் ஜமீன்தார்களையும் ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டு, அரசியல் தலைவர்களின் குடும்ப அரசியல்களையும் ஒவ்வொரு துறையிலும் பல குட்டி ஜமீன்தார்களையும் அனுமதித்துவிட்டு அவர்களுக்கு தாசர்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். சாதியை ஒழிப்போம், மதவாதத்தை மாய்ப்போம் என்று கூறிவிட்டுச் சாதி உணர்வை விசிறிவிட்டு மதப்பூசல்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
தனியார் துறையின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தவும் லாப நோக்கை மட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டவை அரசுத் துறை நிறுவனங்கள். ஆனால், தனியார் துறைக்கு ஒரு போட்டியாகவே இல்லாமல் நஷ்டத்தை உருவாக்கும் நிறுவனங்களாக்கப்பட்டு இன்று கொஞ்சம் கொஞ்சமாகத் தாரைவார்க்கப்படுகின்றன. இந்நாட்டின் இயற்கை வளங்களும் இதர வளங்களும் நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் தனியாரின் லாபத்துக்காகச் சூறையாடப்படுவது அதிகரிப்பது கண்டு மக்கள் துடிக்கிறார்கள். நம் நாட்டுக்கு என்ன தேவை என்று நினைக்காமல், நாம் என்ன செய்ய வேண்டும் என்று உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் வழிநடத்துவதை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
செய்தி ஊடகங்களுக்குள்ள கருத்துச் சுதந்திரம் என்பது தடையற்றது அல்ல; அரசின் கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உள்பட்டதே என்று அடுத்தடுத்து செய்தி ஒலிபரப்புத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமுள்ள இந்தியக் கடற்கரைக்கு ஏற்ற மீனளக் கொள்கை இல்லை. விவசாயத்தை ஊக்குவிக்கவும் பாசன வசதிகளை மேம்படுத்தவும் காரிய சாத்தியமான திட்டங்கள் இல்லை. காய்கறிச் சாகுபடியும் ஏற்றுமதியும் சந்தை விலையைக் கொண்டு தீர்மானிக்கப்படவே அனுமதிக்கப்படுகிறது. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் பலன் தரக்கூடிய ரேஷன் மானியம் குறிவைக்கப்படுகிறது.
நெசவுத் தொழிலுக்கே ஒதுக்கப்பட்ட ரகங்களையும் பணிகளையும் குறைத்து ஆலைவாய் தயாரிப்புக்கு விட்டுக்கொடுத்த பிறகு, நெசவாளர்களுக்கு விருதும் சால்வையும் எந்த மகிழ்ச்சியை அளித்துவிடும்? பாரத நாட்டின் எந்தத் தரப்புக்காக இந்த நிர்வாகம் என்று பெரும்பான்மை மக்கள் வருந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய நாடாளுமன்றம் நிரந்தர மோதல் களமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் படியைத் தொட்டு முதல் நாள் உள்ளே நுழைந்த பிரதமர் அதன் பிறகு தனது மனதைத் தொட்டுப்பார்த்து, எத்தனை முறை இந்த நாடாளுமன்றத்தில் மனம் விட்டுப் பேசினோம் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டால் நல்லது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எந்த வகையிலும் சகித்துக்கொள்ளக் கூடாது என முழங்காத அரசியல் கட்சிகளே இன்று இல்லை. ஆனால் பெண்களுக்கு அரசியலில் 33% உறுதிப்படுத்தும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா 18 ஆண்டுகளாகியும் வந்தபாடில்லை.
சுதந்திர இந்தியாவின் சாதக, பாதகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்தியா வலுவான தேசமாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. சமூக நீதி, சம உரிமை, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய பல்வேறு விழுமியங்களில் உலகுக்கு அது வழிகாட்டுகிறது.
நாம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் நாம் மட்டுமே எதிர்கொள்ளும் சவால்கள் அல்ல. உலகளாவிய போக்குகளும் பிரச்சினைகளும் சிக்கல்களும் சேர்ந்தே நம்மையும் ஆட்டிப்படைக்கின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை நாம் வெளியே தேட வேண்டியதில்லை. நம்முடைய முன்னோர்களிடமிருந்தே அதற்கான ஞான ஒளியை நாம் பெற முடியும். “நீ விரும்பும் மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு” என்கிற நம்முடைய தேசத் தந்தையின் வார்த்தைகள் இந்தச் சவாலான பயணத்தில் என்றைக்கும் நமக்கு வழிகாட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT