Published : 13 Jul 2015 08:47 AM
Last Updated : 13 Jul 2015 08:47 AM

பேச்சு பயன் தரட்டும்!

பிரதமர் மோடியின் சந்திப்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ‘பிரிக்ஸ்’ மற்றும் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (எஸ்.சி.ஓ.) ஆகியவற்றின் உச்சி மாநாட்டின்போது, ஏனையோருடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோரை மோடி சந்தித்திருப்பது ஆசியாவில் அமைதிக்கான முயற்சிகளைத் தாண்டி, இந்தியாவின் பொருளாதார உறவுகளையும் வலுவாக்கும்.

ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வலுப்பட 10 அம்ச முன்முயற்சியை மோடி வெளியிட்டார். வர்த்தகக் கண்காட்சி நடத்துவது, ரயில்வே, வேளாண்மைத் துறைகளில் ஆய்வு மையங்களை நிறுவுவது போன்றவை அந்த 10 முன்மொழிவுகளில் முக்கியமானவை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இன்னும் உறுப்பினராகவில்லை. இந்தியாவை உறுப்பினராக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் 90 நிமிஷம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள், வர்த்தக உறவு, பாகிஸ்தான் - சீனா இடையிலான பொருளாதாரப் பாதை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரம் வழியாகச் செல்லுவது ஆகியவைகுறித்து இரு தலைவர்களும் பேசினர். ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியை முதல் முறையாகச் சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுகுறித்துப் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடனான சந்திப்பின்போது பேச்சுவார்த்தையில் பயங்கரவாதம் முக்கியமான பொருளாக இருந்ததைக் கூட்டறிக்கை உணர்த்தியது. ‘இந்தியாவும் பாகிஸ்தானும் பயங்கரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் முடிவெடுத்திருக்கின்றன. மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த இந்தியா - பாகிஸ்தான் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது கூட்டறிக்கை. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்தார். மோடியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு காரணமாக ஈரான், ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளுக்கு நில வழியாகவும் கடல் வழியாகவும் இந்தியா தன்னுடைய சரக்குகளைக் கொண்டுசென்று விற்க வழியேற்பட்டுள்ளது. அமெரிக்கத் துருப்புகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு, பாதுகாப்பற்ற நிலை நிலவும் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்க முடியும். பாகிஸ்தானின் நில எல்லையைப் பயன்படுத்தாமலேயே ஆப்கனுக்கு இந்தியா செல்லவும் இந்த அமைப்பு உதவும்.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்துமே இந்திய தொழில், வர்த்தக நலன்களை அடித்தளமாகக்கொண்டே இருக்கின்றன. உலக அரங்கில் ரஷ்யா, சீனா ஒரு புறமும் அமெரிக்காவும் இதர மேற்கத்திய நாடுகள் மறுபுறமும் எதிரெதிராக நிற்கின்றன. இந்நிலையில், இந்த அணிகளுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலம்போல இந்தியாவால் செயல்பட முடியும் என்று தோன்றுகிறது. இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தால் பொருளாதாரப் பலன்களுடன் ராஜீயப் பலன்களும் கணிசமாகக் கிடைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x