Published : 06 Jun 2015 10:09 AM
Last Updated : 06 Jun 2015 10:09 AM

உண்பது விஷம்?

பொதுமக்களைச் சென்றடையும் முக்கியமான விஷயங்களில், குறிப்பாக மக்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டிய தருணங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேறுபாடுகளைக் கடந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை, நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவு தடைசெய்யப்பட்ட விஷயத்தில் உண்டாகியிருக்கிறது.

மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளுடாமேட் (எம்.எஸ்.ஜி.) உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும் விகிதம்குறித்த சோதனைகளைப் பல்வேறு மாநிலங்கள் தொடங்கியிருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம்தான் முதன்முதலில், கடந்த ஆண்டு மேகி நூடுல்ஸ் தொடர்பான சோதனையை நடத்தியது.

அதன் பின்னர், அந்தச் சோதனையின் முடிவை உறுதிசெய்துகொள்வதற்காக கொல்கத்தாவின் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் அனுமதிக்கப்பட்டதைவிட மிக அதிக அளவில் மேகி நூடுல்ஸில் காரீயம் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அத்துடன், உணவைக் கெடாமல் வைத்திருப்பதற்காகச் சேர்க்கப்படும் உப்பான மோனோசோடியம் குளுடாமேட்டும் இருந்தது தெரியவந்தது. ஆனால், இந்த உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் விவரம் மேகி நூடுல்ஸின் உறையில் குறிப்பிடப்படவே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.

இது நிச்சயம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் பரவலான விளம்பரங்கள் மூலம் குழந்தைகளைக் குறிவைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பொறுத்தவரை அதைச் சோதனை செய்வது, கண்காணிப்பது மிக மிக அவசியம். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006, உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுவதுடன், இவ்விஷயத்தில் தவறுசெய்பவர்களுக்கு அபராதம் முதல் ஆயுள் தண்டனை வரை பல்வேறு வகைகளில் தண்டனை விதிக்கவும் வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 2013-14-ல் இச்சட்டத்தின் கீழ் 10,200வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றில், 913 வழக்குகளில்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின்படி நடத்தப்படும் சோதனையின் முடிவுகள் வெளியான பின்னர்தான் இவ்விவகாரத்தின் முழு விவரங்களும் வெளிவரும். இந்தப் பிரச்சினையின் வேர் எது என்பதைக் கண்டறிவது முக்கியமானது.

அத்துடன், மற்ற உணவுப் பொருட்களிலும் இப்படியான பாதிப்புகள் இருப்பதைக் கண்டறிவதும் முக்கியம். மாநில அரசுகள், இவ்விஷயத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை அடையாளம் காட்டுவதில் வெளிப்படையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவது மற்றும் விளம்பரப்படுத்துவது போன்ற விஷயங்களில் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யும் நிறுவனங்கள், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சோதனைகள்

மற்றும் விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சுத்தமான குடிநீர், மாசுக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் அரசு அலட்சியம் காட்டும் வரையில், உணவுப் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சரியான தீர்வு என்பது சாத்தியமில்லை. அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் எல்லாம் ஓரிடத்தில்தான் முடிகின்றன, அது சூழல் மீதான அக்கறை. இங்கே முதல் குற்றவாளி யார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x