Published : 05 Jun 2015 08:37 AM
Last Updated : 05 Jun 2015 08:37 AM
அதீத பருவநிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ள முடியாத சவால்களில் ஒன்றாகிவிட்டது. எனவே, கடுமையான இந்தப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சமாளிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான விஷயமாகியிருக்கிறது. இந்தியாவில் இந்தக் கோடைக் காலத்தில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டிவிட்டது.
கோடைக் காலத்தில் கடுமையான வெப்ப அலைகள், குளிர் காலத்தில் கடுமையான குளிர், மிதமான மழை பெய்யும் என்று எதிர் பார்க்கும் நேரத்தில் கடுமையான மழைப்பொழிவு என்று அதீதமான பருவநிலை மாற்றம் இப்போது வழக்கமாகிவிட்டது. குளிர்காலத்தின் கால அளவு சுருங்கிவருவது, பருவநிலை மாற்றம் எனும் அபாயத்தை நாம் தவிர்க்க முடியாது என்பதையே காட்டுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். அதேபோல், கடும் வெப்பம் நிறைந்த கோடைக் காலமும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டியதுதான்.
இப்படியான கடுமையான பருவநிலையை முன்கூட்டியே கணிப்பது என்பதே கடினமான விஷயம். பருவநிலையைக் கணக்கிடுவதற்கான மாதிரிகளில் இருக்கும் கோட்பாடுகளின் போதாமைதான் இதற்குக் காரணம் என்று சொல்லலாம். பருவநிலை தொடர்பான ஆய்வுகளில் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கிறது. 1961 முதல் 2010 வரை புனே மற்றும் சென்னையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின்படி, முதல் 40 ஆண்டுகளைவிடவும் 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்ப அலை வீசும் நாட்கள் ஒவ்வொரு கோடைக் காலத்திலும் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக வட மேற்கு இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. எல் நினோ பாதிப்பு ஆண்டுகளைத் தொடர்ந்து வெப்ப அலை மற்றும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் நாட்கள் அடிக்கடி ஏற்படுவது, அது நீடிக்கும் தன்மை மற்றும் அதிகப் பகுதிகளில் ஏற்படுவது ஆகியவை அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இந்த அசம்பாவிதத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மனித குலம் எடுத்திருக்கிறதா என்ற கேள்வி விடையில்லாமல் நிற்கிறது. பருவநிலை மாற்றம் எனும் விஷயத்தையே ஏற்க மறுப்பவர்கள், அலட்சியம் செய்யவே முடியாத அளவில் மிகத் தெளிவான காரணிகள் நம் முன் உள்ளன. வெப்ப அலைகள் வீசுவதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோடைக் கால உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய முறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம். கடும் வெப்பம் நிறைந்த நீண்ட கோடைக் காலம் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில், போதுமான பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலும் இந்தியாவில் இருக்கிறது.
தாங்க முடியாத வெப்பமும் அதைத் தொடர்ந்து வரும் மழைக்காலமும் சிக்கலான முறையில் சமன்செய்தவாறு ஒன்றையொன்று பிணைந்திருக்கின்றன. பருவநிலை மாறுபாட்டை நாம் கட்டுப்படுத்த முடியுமா? தெரியவில்லை. ஆனால், அதை எதிர்கொள்ள, மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம். நம்முடைய அரசாங்கங்கள் வானிலை அறிவிப்பைத் தாண்டி எதையும் யோசிப்பதில்லை என்பது நம் துயரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT