Published : 03 Jun 2015 10:11 AM
Last Updated : 03 Jun 2015 10:11 AM
நீண்ட காலம் நிலவுடைமைச் சாதியக் கட்டமைப்பின் பிடியில் நெரிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இடஒதுக்கீட்டின் தேவை மறுக்கப்பட முடியாதது. ஆனால், ராஜஸ்தான் அரசு குஜ்ஜார்களுக்கு அறிவித்திருக்கும் சமீபத்திய 5% இடஒதுக்கீட்டை ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக குஜ்ஜார்களுக்கு 5% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது ராஜஸ்தான் அரசு. குஜ்ஜார்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்போம் என்று 2003 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநில பாஜக வாக்குறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக, குஜ்ஜார் சமூகத்தினர் தங்களுடைய இடஒதுக்கீட்டு உரிமைக்காகப் போராட ஒன்றுதிரண்டனர்.
2006 முதல் ஆண்டுதோறும் குஜ்ஜார்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதும் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் சடங்காகிவிட்டது. ஆனால், “அவர்களுக்கு இடஒதுக்கீட்டுச் சலுகை அளிப்பதை எங்களால் ஏற்க முடியாது” என்று எண்ணிக்கையில் கணிசமாக இருக்கும் மற்றொரு பெரிய சமுதாயமான மீனாக்கள் கிளர்ந்தெழுந்தவுடன் அரசு செய்வதறியாது திகைத்து நின்றது.
குஜ்ஜார்களோ தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ஜாட் இனத்தவரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகச் சேர்க்க வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவுசெய்தபோது, அவர்கள் தங்கள் கோரிக்கையை எப்படி வென்றெடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டனர். அவர்களுடைய அழுத்தத்தால், முன்பே ராஜஸ்தான் அரசு 5% இடங்களை வேலைவாய்ப்பில் ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால், 2010-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
இதை குஜ்ஜார்கள் ஏற்க மறுத்தனர். என்ன ஆனாலும் சரி, தங்களுக்கு 5% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சமீபத்திய அவர்களுடைய போராட்டத்தில் ரயில்வே துறைக்கு மட்டும் ரூ. 200 கோடி இழப்பு என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கிறது ராஜஸ்தான் அரசு.
ராஜஸ்தானில் இப்போதே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் ஆகியோருக்கான மொத்த ஒதுக்கீட்டு இடங்கள் 50% ஆக இருக்கிறது. மொத்த இடஒதுக்கீட்டு இடங்கள் 50%-ஐத் தாண்டக் கூடாது என்று மண்டல் வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ராஜஸ்தான் அரசு இப்போது அந்தத் தீர்ப்பைக் கடந்திருக்கிறது. மேலும், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இந்த 5% இடஒதுக்கீட்டைச் சேர்த்துவிடுவதாகவும் வாக்குறுதி தந்திருக்கிறது.
இப்படிச் செய்துவிட்டால் இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காட முடியாது. இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய இப்படியான நடவடிக்கைகளைக் கையாள்வது சரிதான்; ஆனால், குஜ்ஜார்களுக்கான இந்த இடஒதுக்கீடு சரிதானா? ஏனென்றால், கல்வி, பொருளாதார பலத்தில் நல்ல வலுவான நிலையில் இருப்பவர்கள் குஜ்ஜார்கள்.
அரசியல் லாபத்துக்காக குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் ஏனையோருக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது ராஜஸ்தான் அரசு. நாளைக்கு இதே போன்ற கோரிக்கையுடன் ஒவ்வொரு சமூகமும் கிளர்ச்சியைக் கையில் எடுத்தால் நிலைமை என்னவாகும்? உண்மையில், ராஜஸ்தான் பாஜக அரசு பிரச்சினையைத் தீர்க்கவில்லை; ஆரம்பித்துவைத்திருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT