Published : 08 Jun 2015 08:40 AM
Last Updated : 08 Jun 2015 08:40 AM
இந்திய பாதுகாப்புத் தேவைகள், அதிலும் குறிப்பாக ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான ஆயுதங்கள், சாதனங்கள், வாகனங்கள், கவச ஆடைகள் போன்றவற்றை வாங்குவதற்கு முக்கியத்துவம் தந்து முடிவுகள் எடுக்கப் பட்டுவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கத் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. அதே சமயம், ராணுவத்தின் நீண்டகாலத் தேவை அடிப்படையில் நவீனப்படுத்தவும் ராணுவத்துக்குத் தேவையான தொழில்துறைக் கட்டமைப்பை ஏற்படுத்தவும் பெருந்திட்டம் ஏதும் இன்னமும் உருவாகாமல் இருக்கிறது.
பிரான்ஸிடமிருந்து ‘ரஃபேல்’ ரகப் போர் விமானங்கள் 36-ஐ நேரடியாக வாங்குவது என்ற முடிவு மிகப் பெரியது. நீண்ட காலமாகப் பேசப்பட்டு தாமதமாகிவிட்ட 126 ஜெட் ரகப் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் அடியோடு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ‘கமோவ்’ ரகப் பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், ‘ஆவ்ரோ’ விமானத்துக்கான பதிலிகள், பீரங்கிகள் போன்றவற்றை வாங்குவதற்கும் ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. சியாச்சின் போன்ற பனிப் பிரதேசங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பனிப்பிரதேச பூட்ஸ்கள், குண்டு துளைக்காத மேல்சட்டைகள் போன்றவற்றை வாங்குவதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தாமாகவே தலையிட்டு எடுத்திருக்கிறார்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள முடிவுகளை ராணுவக் கொள்முதல் கவுன்சில் (டி.ஏ.சி.) எடுத்திருக்கிறது. நிதிச் செலவைக் கருத்தில் கொண்டும் நீண்டகால நோக்கிலும், சீன எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் மலைப் பகுதி படைப்பிரிவு வீரர்களின் எண்ணிக்கையை 90 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுகளில் சில இறுதி ஒப்புதல்களாகும். வேறு சிலவோ, கொள்முதலைத் தொடங்குவதற்கான பூர்வாங்க அனுமதிகள். இந்த நடைமுறைகள் வேகமாக நடைபெற வேண்டும் என்றால் ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கொள்முதல் கொள்கை ஒன்றை அரசு வகுத்தாக வேண்டும். இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கைக்கேற்ப ராணுவத்துக்கு, அதிலும் குறிப்பாக விமானப்படைக்குத் தேவைப்படும் சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்தியத் தொழில்துறையைப் பெருமளவு ஈடுபடுத்த வேண்டும். இதனால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள வழியேற்படும். செலவு குறையும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஏற்றுமதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவின் ராணுவத் தேவைகள் இறக்குமதிகள் மூலமே பூர்த்திசெய்யப்படுகின்றன. ராணுவத்துக்கான சாதனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) நவீனமாகத் தயாரித்து நல்ல தரத்தில், குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என்றால், அதன் ஆராய்ச்சிக் கூடங்களைப் பெரும் முதலீட்டின் மூலம் மேம்படுத்த வேண்டும். டி.ஆர்.டி.ஓ. அமைப்புக்கு முழு நேரத் தலைவர் இல்லாமல் அப்பதவி நீண்ட காலமாகவே காலியாக இருந்தது. இது போன்ற நிலை இனி ஏற்படக் கூடாது. ராணுவத்துக்கான ஆள்பலம், ஆயுத பலம், சாதன பலம் போன்றவற்றில் இனியும் அசட்டையாக இருக்கக் கூடாது. இவற்றையெல்லாம் உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை தர வேண்டும். ஏற்கெனவே நிறைய காலத்தை வீணடித்துவிட்டதால் இந்தச் செயல்கள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT