Published : 07 May 2015 08:21 AM
Last Updated : 07 May 2015 08:21 AM
நிலுவையில் இருக்கும் வழக்குகளால் இந்திய நீதிமன்றங்கள் திக்குமுக்காடிக்கொண்டிருப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஆனால், பிரச்சினையின் தீவிரம் மேலும் மேலும் அதிகரிப்பது பெருந்துயரம். இந்தியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள்குறித்த அதிர்ச்சியூட்டும் தரவுகள் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கின்றன. இதில் 10% வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கொன்று 1957-ல் தொடரப்பட்டது என்பது, நம் நீதித் துறையின் துரிதத்தையும் பொறுப்புணர்வையும் பரிகசிக்கிறது.
இப்படியான வழக்குகளில் நான்கில் ஒரு பங்கு வழக்குகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களின் நிலை இன்னும் மோசம். கீழமை நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
நீதிமன்றங்களை நாடக் கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டது நம் தேசம். அதே நேரத்தில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையைக் கையாளும் திறனோ, அதை ஈடுசெய்யும் நீதித் துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையோ இல்லாதது காலம்காலமாகத் தொடர்கிறது. இந்தத் தரவுகள் நம்மை மலைக்க வைத்தாலும், இவை முழுமையானவை அல்ல. தரவுகளையெல்லாம் நீதித் துறை முறைப்படி தொகுக்கவோ பராமரிக்கவோ இல்லை. தரவுகளைப் பராமரிப்பதில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு விதம் எனும்போது உயர் நீதிமன்றங்களுக்கு இடையில் முறையான ஒப்பீட்டை நாம் செய்யவே முடியாது. இது ஏதோ தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினை அல்ல. இந்திய நீதித் துறையின் உள்ளடுக்குகளில் உறைந்திருக்கும் தாமதம், அதன் நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் படிந்திருப்பதே பிரச்சினையின் அடிநாதம்.
நம் நீதித் துறை அமைப்பு அடிப்படையிலான மாற்றங்களோடு தொழில்நுட்பத்தையும் கையில் எடுக்க வேண்டும். நிர்வாகரீதியில் செய்யப்படக்கூடிய மாற்றங்களையும் சீர்திருத்தச் சிந்தனையுள்ள நீதிபதிகள் பல தடவை முன்வைத்திருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா இதுபோன்ற மாற்றங்களுக்கு முன்னுதாரணமாக ஒரு காரியத்தைச் செய்தார். போக்குவரத்து தொடர்பான வழக்குகளுக்காக மாலை நேர நீதிமன்றங்களை அவர் தொடங்கிவைத்தார். கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் இது தொடர்பானதுதான் என்பதால் இந்த முயற்சி மிகவும் வரவேற்புக்குரியதாக அமைந்தது. வழக்கமான நீதிமன்றங்களிலிருந்து இதுபோன்ற வழக்குகள் மொத்தமாக அகற்றப்படுவது மிகவும் அவசியமாகிறது.
சமரச முறையில் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான முறையீட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கும் நடைமுறை மேல்நாடுகளில் திறம்படச் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய நீதித் துறை சீர்திருத்தங்களில் இந்த சாத்தியத்தின் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. அதேபோல், நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த ஆட்சியின்போது நீதிபதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுமென்று முந்தைய சட்டத் துறை மற்றும் நீதித் துறை அமைச்சகம் உறுதியளித் திருந்தது. அந்த வாக்குறுதியைப் பாதியளவாவது நிறைவேற்றியிருந்தால் பிரச்சினை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது.
இந்தியாவின் எத்தனையோ கோடி ஏழை எளிய மக்கள் இன்னும் சிறிதளவாவது நம்பிக்கை வைத்திருப்பது இந்திய நீதித் துறையின் மீதுதான். அதில் இவ்வளவு தாமதமும் உதாசீனமும் நிர்வாகக் குழப்பங்களும் நிலவுவது அந்த மக்களுக்குச் செய்யும் அநீதியே. புதிய தொழில்நுட்பங்கள், போதுமான பணியிடங்கள் போன்றவற்றோடு ஏழை எளிய மக்கள் மீதான பரிவும் சேர்ந்தால், இந்த அநீதியைக் களைவது ஒன்றும் அவ்வளவு கடினமான செயலாக இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT