Published : 05 May 2015 08:36 AM
Last Updated : 05 May 2015 08:36 AM

அதிநவீன நகரங்கள் அல்ல; ஆபத்தில்லா நகரங்களே நாட்டுக்குத் தேவை!

நேபாளப் பேரழிவு நிகழ்ந்து 10 நாட்களாகும் சூழலிலும் வெளி யாகும் செய்திகள் எதுவும் ஆறுதல் அளிப்பதாக இல்லை. மரண எண்ணிக்கை கிட்டத்தட்ட 10,000-ஐத் தாண்டிவிட்டது. படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை, வீடுகளை - உடைமைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தொடும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பூகம்பம் அல்ல; கட்டுமான முறையும் கட்டிடங் களும்தான் பேரிழப்பின் வீச்சுக்குக் காரணம். நேபாளத் துயரத்தைத் தொடர்ந்து இந்தியக் கட்டுமானத் துறை, கட்டிடங்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகளும் அதற்கு நம்முடைய அரசாங்கங்கள் வெளிப்படுத்தும் ‘உணர்வற்ற’ எதிர்வினையும் அச்சமூட்டுகின்றன.

காத்மாண்டுவில் வாழும் ஒருவருக்கு இஸ்லாமாபாதில் வாழும் ஒருவரை விட பூகம்பத்தில் இறந்துபோவதற்கான வாய்ப்புகள் 9 மடங்கு அதிகம்; டோக்கியோவுடன் ஒப்பிட்டால் 60 மடங்கு அதிகம் என்று சில ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. இந்த மதிப்பீடுகள் நேபாளத்தை விட இந்தியாவுக்கு விடுக்கும் எச்சரிக்கை அதிகம். ஆனாலும், இதுபோன்ற எச்சரிக்கைகளுக்குச் செவிமடுப்பதில் இந்தியா காட்டிவரும் அலட்சியம் முன்னுதாரணமற்றது.

நேபாள பூகம்பத்தைப் போலவே இந்தியப் பெருநகரங்களிலும் நகரங்களிலும் ஏற்பட்டால் வரும் பாதிப்புகள் நாம் கற்பனையே செய்துபார்க்க முடியாதவை. இதுபோன்று நிகழக்கூடிய பாதிப்புகளை மதிப்பிட்டுச் சில ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 1905-ல் ஏற்பட்ட பூகம்பத்தில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய பிரதேசங்களில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். அதே, அளவிலான பூகம்பம் தற்போது ஏற்படுமென்றால் 10 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். 1897-ல் 1,500 உயிர்களைப் பறித்த அசாம் பூகம்பம் போன்று இப்போது நிகழ்ந்தால், 8 லட்சம் பேர் அங்கு உயிரிழக்கக் கூடும் என்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் நம்முடைய மத்திய - மாநில அரசாங்கங்களை எந்த அளவுக்கு அசைக்கின்றன?

தலைநகர் டெல்லி பூகம்ப அபாயப் பகுதிகளுக்கான வரையறைகளில், நான்காம் கட்டத்தில், அதாவது அதிஆபத்து மிக்க மண்டலத்தில் இருக்கிறது. ஆனால், நவீன ராஜாக்கள் வாழும் புது டெல்லியின் விசாலமான கட்டிடங்கள் நீங்கலாக, எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை டெல்லியின் மற்ற கட்டிடங்கள்? உதாரணத்துக்குப் பழைய டெல்லி பகுதியை எடுத்துக்கொண்டால், அங்குள்ள பெரும் பாலான கட்டிடங்கள் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு இடையில் இடைவெளியே இல்லாத வகையில் கட்டப்பட்டவை. நேபாளம்போல் ஒரு அதிர்வு ஏற்பட்டால், பாதி டெல்லி தரைமட்டமாகிவிடும் என்கிறார்கள். நம் சென்னை? பூதம்போல இங்கு வளர்ந்துகொண்டிருக்கிறது, ரியல் எஸ்டேட் துறை. ஆனால், கட்டிடங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப் பானவை? பகுதிக்குப் பகுதி உருவாகிக்கொண்டிருக்கும் ‘ரங்கநாதன் தெருக்கள்’ எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை?

நாட்டின் கிட்டத்தட்ட 56% நிலப்பரப்பு பூகம்ப அபாயத்தில் இருக்கிறது. இந்தப் பரப்பில்தான் இந்தியாவின் 75%-க்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் இருக்கிறது. ஆனால், இந்த அபாயம் குறித்து இந்திய அரசுக்குச் சற்றும் உறைக்கவில்லையே ஏன்? சீனாவையும் ஜப்பானையும் பார்த்து அதிநவீன நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) கனவு காணும் அரசாங்கம், ஜப்பானியர்கள் பூகம்பத் தற்காப்புக் கட்டுமான முறையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முனைய வேண்டும். அதிநவீன நகரங்களை விடவும் பாதுகாப்பான நகரங்களே நாட்டுக்குத் தேவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x