Published : 26 May 2015 08:50 AM
Last Updated : 26 May 2015 08:50 AM

வனப் பாதுகாப்பின் பங்காளிகள்

வனப் பாதுகாப்பு என்று வரும்போது அந்தந்த வனங்களில் உள்ள மக்களின் துணையின்றி அதை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. குஜராத்தின் கிர் காட்டில் இருக்கும் சிங்கங்கள் குறித்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு இந்த உண்மைக்கு மேலும் வலுசேர்க்கிறது.

2011-ல் 411 சிங்கங்கள் காணப்பட்ட அந்தக் காட்டில் தற்போது 523 சிங்கங்கள் இருக்கின்றன. அந்தப் பிரதேசத்தின் வனவாழ் மக்களின் துணையின்றி இதைச் சாதித்திருக்க முடியாது என்பதை அங்குள்ள வனத்துறையினரே ஒப்புக்கொள்கின்றனர். அங்கே உள்ள மால்தாரிகள் என்ற வனவாசிகள்தான் இந்தப் பெருமைக்கு உரியவர்கள். கிர் தேசியப் பூங்காவுக்கு அருகே வசிக்கும் விவசாயிகளும் இந்தச் சாதனையில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, 160-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பரப்புக்கு வெளியே திரிந்துகொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும், மனிதர்-சிங்கம் மோதல் என்ற பிரச்சினை அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதுதான் சிறப்பான விஷயம்.

சிங்கங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு அடையாளம். தங்களின் பிரதான இரைகளான நீல்கைகள், விளைநிலங்களில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகள் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அந்தச் சிங்கங்களின் உதவி மகத்தானது. இதற்கெல்லாம் அந்த மக்கள் காட்டும் நன்றிக்கடன்தான் சிங்கங்களைப் பராமரிக்க அவர்கள் உதவுவது.

வேட்டைக்காரர்களிடமிருந்து சிங்கங்களைக் காத்தல், சிங்கங்கள் அந்த மக்களின் கால்நடைகளை வேட்டையாடினால் அதற்காகக் கோபம்கொண்டு அவற்றைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருத்தல், சிங்கங்கள் தவறி விழாமல் காப்பதற்காகக் கிணறுகளைச் சுற்றி சுவர்களை எழுப்புதல் என்று அந்த மக்களின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கிறது.

வன விலங்குகளால் மனித உயிர்கள் பலியாதல், வீடுகளுக்குச் சேதம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களின் ஒரு தரப்பினர், வனங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, வனவாழ் மக்களின் பங்கேற்பு இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் மோசமாகிவிடும் என்று வாதிடுகிறது. இந்தச் சூழலில்தான் கிர் காட்டின் வெற்றி மிகவும் முக்கியமானதாகிறது.

இதற்கிணையான ஒரு சாதனை தமிழகத்தின் வால்பாறையில் நிகழ்ந்திருக்கிறது. பெரும் பிரச்சினையாக இருந்துவந்த யானை-மனிதர் மோதல் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால் அங்குள்ள மக்கள் அனைவருடைய கைபேசிகளுக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்திகள் போய்விடும். அந்தப் பிரதேசத்தில் அபாய ஒலியும் எழுப்பப்படும். வனவாழ் மக்களின் துணைகொண்டு இதைச் சாதித்திருக்கிறார்கள் அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள். இந்த வழிமுறையைக் கண்டுபிடித்துச் செயல்படுத்திய ஆனந்த குமார் என்ற இயற்கை அறிவியலாளருக்கு சமீபத்தில் ‘பசுமை ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘விட்லி விருது’ கிடைத்திருக்கிறது.

வனத்திலிருந்து வன விலங்குகளை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ அதேபோல் வனவாழ் மக்களையும் வனத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்பதைத்தான் கிர் காடும் வால்பாறையும் உணர்த்துகின்றன. வனவாழ் மக்களின் பங்கேற்பு இல்லாமல் வனப் பாதுகாப்பு சாத்தியமே இல்லை என்பதை வறட்டுத்தனமான சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு இதைவிடத் தெளிவாக வேறு எதுவும் சொல்லிவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x