Published : 21 Apr 2015 08:25 AM
Last Updated : 21 Apr 2015 08:25 AM

ஒரு அம்பும் ஆறு வில்லாளிகளும்!

ஜனதா தளத்தின் வழித்தோன்றல்களில் ஆறு கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றன. ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் இந்தச் சம்பவத்துக்கு, அரசியல் அரங்கில் முக்கியத்துவம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கடந்த நாடாளு மன்றப் பொதுத்தேர்தலில் சந்தித்த பெரும் தோல்வியின் விளைவாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தக் கட்சிகளுக்கு ‘வாழ்வா, சாவா?’ போராட்டம் மாதிரிதான்.

சங்கம நிகழ்வின்போது புதிய கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முலாயம் சிங் உற்சாக மிகுதியில் ஒன்றைக் குறிப்பிட்டார். எப்போதெல்லாம் ஜனதா பரிவாரங்கள் ஒன்றாகச் சேர்கின்றனவோ அப்போதெல்லாம் மத்தியில் அவை ஆட்சியமைத்திருக்கின்றன என்றார். வி.பி. சிங் தலைமையில் 1989-ல் ஆட்சியமைத்ததையும் தேவே கவுடா தலைமையில் 1996-ல் ஆட்சியமைத்ததையும்தான் அவர் குறிப்பிடுகிறார்.

வேறெந்த இடத்தில் இல்லாவிட்டாலும், பாஜக அதிக அளவில் இடங்களை வென்ற உத்தரப் பிரதேசத்திலும், கணிசமான வெற்றி பெற்ற பிஹாரிலும் பாஜகவுக்குச் சவாலாக இந்தப் புதிய கட்சி உருவெடுத்திருக்கிறது. இந்தச் சங்கமத்தில் உள்ள கட்சிகள் பிராந்தியக் கட்சிகளாக இருந்தாலும் அவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததால் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் தோற்றத்தையும் பெறக் கூடும். இதுவரை பாஜகவும் காங்கிரஸும், ஓரளவுக்கு இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமே அனுபவித்துவந்த அந்தஸ்து இது.

இன்னும் பெயரிடப்படாத இந்தக் கட்சி, தற்போது பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. இதுதவிர, ஹரியாணா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இந்தக் கட்சிக்குக் குறிப்பிடத் தக்க செல்வாக்கும் இருக்கிறது. 30 உறுப்பினர்களுடன் மாநிலங்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், 15 உறுப்பினர் களோடு மக்களவையில் எட்டாவது பெரிய கட்சியாகவும் தற்போது இந்தக் கட்சி திகழ்கிறது.

ஐந்து மாதங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையிலும், இந்தக் கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்பதுதான் விசித்திரம்! மேலும், கொடி, சின்னம், கொள்கை, அமைப்பு என்று இன்னும் எதுவுமே அறிவிக்கப்படவில்லை!

இந்தச் சங்கமத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களான ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பிஹாரில் மேலும் வலுவடைந்து வரும் பாஜகவை எதிர்த்து மல்லுக்கு நிற்கப்போகிறார்கள். இந்த நிலையில், யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற பிரச்சினையை அந்த இரண்டு கட்சிகளும் எதிர்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் கொடி, சின்னம் ஆகியவை குறித்த பிரச்சினையையும் இந்தக் கட்சி பிஹாரில் எதிர்கொண்டிருக்கிறது.

எல்லாவற்றையும்விடப் பெரிய சவால், இந்தப் புதிய கட்சியின் தலைவர்களிடமிருந்து எழுந்துள்ளது. இவர்களில் பலரும் சந்தர்ப்பவாதம், சுயலாபம், சுயமுக்கியத்துவம் ஆகியவற்றில் மூழ்கித் திளைப் பவர்கள். கடந்த காலத் தவறுகளிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை.

மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் என்ற இலக்கைக் குறிவைத்து இந்தச் சங்கமம் அம்பு விடத் தயாராக இருக்கிறது. குறி தவறினால் அம்பின் திசை தங்களை நோக்கியே திரும்பிவிடும் என்பதை அவர்களுக்கு யார் புரியவைப்பது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x