Published : 27 Apr 2015 08:05 AM
Last Updated : 27 Apr 2015 08:05 AM

சிறுவர்களும் பெரியவர்களும்!

மத்திய அரசு, 16 வயது முதல் 18 வயது வரையுள்ள சிறார்கள், கொலை அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால், அவர்களைச் சிறாராகக் கருதாமல், வயது முதிர்ந்தவர்களாகக் கருதி பெரியவர்களுக்கான சட்டப்படி தண்டிக்க வகைசெய்யும் சட்டப் பிரிவுகளைச் சேர்க்க முடிவெடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

டெல்லியில் 2012-ல் ஒரு கும்பலால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்கில் ஈடுபட்ட சிறுவனுக்கு, சிறுவர் நீதி சட்டப்படி சாதாரணமான தண்டனை அளிக்கப்பட்டது முதலே, இவ்வளவு கொடிய குற்றத்தில் ஈடுபட்டவனைச் சிறுவனாகப் பார்ப்பதா என்று பொதுமக்களிடையே எழுந்த கோபத்துக்கேற்ப இந்த முடிவு இருக்கிறது. கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல்செய்யப்பட்ட புதிய ‘சிறுவர் நீதி மசோதா’வில் இருந்த சில பிரிவுகளைச் சிறாருக்கான நல உரிமை அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு, அந்த மசோதாவின் அனைத்து அம்சங்களையும் மறுபரிசீலனை செய்து, தேவைக்கேற்பத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. 16 வயது முதல் 18 வயது வரையுள்ள சிறாரின் குற்றங்களைத் தனியே பிரித்துப் பார்த்து பாலியல் வல்லுறவு, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் பெரியவர்களுக்கான சட்டப்படியே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கூறும் பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. ஆனால், திருத்தப்பட்டு மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய மசோதாவின் வரைவு வாசகங்களில், கொலை - பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருந்தால், அந்தத் தவறைச் சிறார் மனோபாவத்தில் செய்தார்களா, வளர்ந்த வாலிபர்களின் மனநிலையிலிருந்து செய்தார்களா என்பதை ‘சிறார் நீதி வாரியம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. வாரியத்தின் கருத்தைப் பெற்ற பிறகு, அந்த அடிப்படையில்தான் வழக்கு விசாரணை நடைபெறும்.

வயது வந்தவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டைச் சிறுவர்கள் மீது சுமத்தித் தண்டித்தால், பிறகு அவர்கள் திருந்தி மறுவாழ்வு பெறுவது சந்தேகம்தான். இப்போதுள்ள சிறார் நீதிச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதவில்லை. பாலியல் ரீதியிலான குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்கள் புரிவோரைத் தண்டிப்பதற்குமான நீதித் துறைக் கட்டமைப்புகளைப் பரிசீலித்துப் பரிந்துரைக்க அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழுவும் இச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. அப்புறம் ஏன் இந்த முயற்சி என்று தெரியவில்லை.

கால வளர்ச்சியில், நாகரிகச் சுழற்சியில், தொழில்நுட்பப் பாய்ச்சலில் இன்றைய குழந்தைகள் பல மடங்கு வேகமாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அறிவு வளர்ச்சியையும் மன முதிர்ச்சியையும் ஒன்றாகப் பொருத்திப் பார்க்க முடியுமா? மிகப் பெரிய கேள்வி இது. உளவியல் நிபுணர்கள் ஒருபோதும் இதில் எதிர்ப் பக்கம் நிற்பதில்லை. குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், மூர்க்கர்களாக இருந்தாலும் குழந்தைகளே என்கிறார்கள் அவர்கள். குற்றங்களின் குரூரம் அதிகரிப்பதற்கான அக, புறச் சூழல்களை நாம் கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். அவை பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டும். வில்களை விட்டுவிட்டு, அம்புகளை அடித்து நொறுக்குவதால் பிரச்சினைகள் ஓய்ந்துவிடாது. முதிர்ச்சி அடைந்த ஒரு சமூகம் எப்போதும் தொலைநோக்கோடும் பெருந்தன்மையோடும் சிந்திக்கப் பழக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x