Published : 11 Apr 2015 10:33 AM
Last Updated : 11 Apr 2015 10:33 AM

இருக்கும் பிரிவினைகள் போதாதா?

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பண்டிட்டுகள் சொந்த மாநிலத்துக்கு முழுமையாகத் திரும்புவதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கான ஒருங்கிணைந்த தீர்வாக இருக்கும் என்பது உண்மையே. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவர்களுக்கு மட்டும் தனிக் குடியிருப்புகளைக் கட்டி, அதில் அவர்களைக் குடியமர்த்துவது நன்மையைச் செய்வதற்குப் பதில், பெரும் தீங்கையே விளைவிக்கும். பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்புகள் என்ற யோசனையின் மூலம் மத்தியில் ஆளும் பாஜக, தான் அங்கம் வகிக்கும் காஷ்மீர் ஆட்சியில் தனது பொறுப்புகளைக் கைவிடப் பார்க்கிறது.

முஸ்லிம்களும் பண்டிட்டுகளும் சேர்ந்து வாழும் சூழலை ஏற்படுத்த முடியாமல் அல்லது விரும்பாமல் தனித்தனி வசிப்பிடங்களை ஏற்படுத்துவதால் மதரீதியிலான பிளவு மேலும் ஆழப்படும். அது நிரந்தரப் பூசல்களுக்கே வழிவகுக்கும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதும் வளர்ச்சியை ஏற்படுத்துவதும்தான் தங்களுடைய பொதுநோக்கம் என்று அறிவித்த பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி.டி.பி.) அதில் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த விபரீத யோசனையைக் கைவிட வேண்டும்.

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கென்று தனித் தாயகம் எதையும் ஏற்படுத்தும் உத்தேசம் காஷ்மீர் அரசுக்குக் கிடையாது என்று முதலமைச்சர் முஃப்தி முகம்மது சய்யீத் உரிய நேரத்தில் அறிவித்திருக்கிறார். காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் வெற்றியே இரு சமூகத்தவர் இடையில் ஏற்படும் ஒற்றுமை, நல்லிணக்கத்தில்தான் இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வுக்குத் தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேச வைக்க வேண்டும்.

இந்துக்களுக்கென்று தனிப் பகுதி, முஸ்லிம்களுக்கென்று தனிப் பகுதி இருப்பது அரசியல்ரீதியாக பி.டி.பி., பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே பலன் தரக்கூடும். ஆனால், முக்கியமான லட்சியத்தை அடைவதற்குச் சிறிதும் பயன்படாது. இப்போதே பாஜக இந்துக்களையும், பி.டி.பி. முஸ்லிம்களையும் மட்டுமே பிரதிபலிக்கும் கட்சிகளாகத்தான் திகழ்கின்றன. இந்துக்களை பாஜக தன் பக்கம் திரட்டினால், முஸ்லிம்கள் அதற்கு எதிர்வினையாகத் தங்கள் பக்கம்தான் திரள்வார்கள் என்ற எண்ணம்கூட பி.டி.பி-க்கு இருக்கலாம்.

அதே வேளையில், முஸ்லிம்களில் பலரும் பண்டிட்டுகளில் ஒரு பிரிவினரும் இந்த யோசனையைக் கண்டித்துக் கருத்துத் தெரிவிப்பதால், இந்தப் பூர்வாங்க யோசனை செயல்வடிவம் பெறாமல் இப்போதைக்குத் தப்பித்திருக்கிறது. இந்தச் சூழலை காஷ்மீர் பிரிவினைவாதிகள் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பக் குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டனர். பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு என்று இஸ்ரேலிய பாணியில் பாஜக செயல்பட்டு புதிய பாலஸ்தீனத்தை காஷ்மீரில் ஏற்படுத்த முயல்கிறது என்று குற்றம்சாட்ட ஆரம்பித்துவிட்டனர்.

பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்புவதும் அங்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதும் கல்வி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றில் அவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதும்தான் முக்கியம். காஷ்மீரைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் அனைவருமே மண்ணின் மைந்தர்கள். அனைவருக்கும் அங்கே சம உரிமை உண்டு.

இதை உறுதி செய்வதும் அவர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதும்தான் மத்திய, காஷ்மீர் அரசுகளின் கடமை. அதை விடுத்து, அரசியல் லாபங்களுக்காக ஆளுக்கொரு பக்கம் காஷ்மீரை இழுத்துக்கொண்டிருந்தால், பிரிவினை சக்திகளின் பலம்தான் அதிகரிக்குமே தவிர, அமைதியான வாழ்க்கை என்பது காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரை வெறும் கனவாகவே எஞ்சிவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x