Published : 20 Jan 2016 08:28 AM
Last Updated : 20 Jan 2016 08:28 AM

புதிய தொழில்களின் பொற்காலமா?

ஆண்டுக்கு ரூ. 25 கோடி விற்றுமுதலைக் கொண்ட புதிய தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப் இந்தியா) ஊக்குவிப்பதற்காக டெல்லி விஞ்ஞான பவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த கருத்தரங்குக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெறும் 1,350 இருக்கைகளே கொண்ட விஞ்ஞான பவன அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அனுமதி கோரியிருந்ததே இதை உறுதிசெய்கிறது.

இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.25 கோடி விற்றுமுதல் உள்ள நிறுவனங்களாக இருக்க வேண்டும்; கடந்த 5 ஆண்டுகளுக்குள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்; புதிய பொருட்கள், சேவைகள் அல்லது உற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றுக்கு ஆதாரமாகப் புதிய தொழில்நுட்பங்கள் அல்லது அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இத்தகைய நிறுவனங்களே அரசின் உதவிகள், சலுகைகள், வரி விலக்குகள் பெறத் தகுதியான புது நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பொருளை மேம்படுத்தித் தயாரித்தாலும், சேவையை மேம்படுத்தினாலும் அதைச் சந்தைப்படுத்த முடியாவிட்டாலும், நுகர்வோருக்கு அது கூடுதல் பலனைத் தராவிட்டாலும் அதைப் புதுமையான தொழில்நிறுவனமாகக் கருத முடியாது. மத்திய அரசின் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு சான்றளித்த பிறகுதான் அத்தகைய தொழில் நிறுவனங்கள் புதுமைத் தொழில் நிறுவனங்களாகக் கருதப்படும்.

இத்தகைய தொழில் முனைவோர்களுக்கு உதவ அடுத்த நான்கு ஆண்டுகளுக்குச் சேர்த்து மொத்தம் ரூ.10,000 கோடியை அரசு ஒதுக்கியிருக்கிறது. தொழில் தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரி ஏதும் விதிக்கப்பட மாட்டாது. அத்துடன் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் அத்தொழில் பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு என்ற பெயரில் தொல்லை தர மாட்டார்கள். காப்புரிமம் கோரி விண்ணப்பித்தால் அந்த மனுக்கள் விரைந்து பரிசீலிக்கப்படும். அதற்கு உண்டாகும் செலவில் பெரும்பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளும். புதுத் தொழில் நிறுவனங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கிகள் மூலம் முதலீடு செய்ய வழிகள் ஏற்படுத்தப்படும். புது நிறுவனங்களுக்கு வரிவிதிப்பிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு தருவதுடன் வேறு சில சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. எல்லா புது நிறுவனங்களும் தோன்றிய காலத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அதிக லாபத்தைச் சம்பாதித்துவிடாது. எனவே, வரி விதிக்க முற்பட்டாலும் அங்கு ஏதும் இருக்காது. எனவே, இதைச் சலுகை என்பதைவிட யதார்த்தமான வழிமுறை என்றே சொல்லலாம்.

தொழில் நிறுவனங்கள் மீதான (கார்ப்பரேட்) வரியைக் குறைக்க வேண்டும். அதே நேரத்தில் அவற்றின் மீதான கூடுதல் தீர்வைகளையும் வரி விலக்குச் சலுகைகளையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவு எடுக்கப்படாத நிலையில், புது நிறுவனங்களுக்கு இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டும். துறை வாரியாக, விற்றுமுதல் வாரியாக என்று தொழில் நிறுவனங்களைத் தனித்தனியாக அடையாளம் கண்டு ஊக்குவிப்பதைவிட, நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில்துறை நிலையை மனதில் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பது சிறப்பான பலன்களைத் தரும். இல்லையென்றால், எவ்வளவு சலுகைகளைத் தந்தாலும் புது நிறுவனங்கள் சலுகைகளைச் சில காலம் அனுபவித்துவிட்டு, பிறகு இந்தியாவைவிட்டு வெளியேறி வெளி நாடுகளில் தொழில் தொடங்கிவிடும். ஸ்டார்ட்அப் திட்டம் உண்மையிலேயே பயனுள்ள திட்டமா அல்லது வெறும் கானல் நீரா என்று போகப்போகத்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x