Published : 19 Jun 2025 08:32 AM
Last Updated : 19 Jun 2025 08:32 AM
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே வலுவடைந்துவரும் போர், உலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அணுசக்தியை மையமாகக் கொண்ட மோதல் என்பதால், மேற்கு ஆசியாவைத் தாண்டி - இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம், ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2015இல் கையெழுத்தானது. ஆனால், 2018இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஜோ பைடன் ஆட்சிக் காலத்திலும் இவ்விஷயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், 2025இல் மீண்டும் அதிபரான டிரம்ப், ஈரானுடனான ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டினார். ஆனால், ஈரான் மீது அண்மையில் இஸ்ரேல் திடீரென நடத்திய தாக்குதல் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட வாய்ப்பே இல்லாத சூழலுக்கு வழிவகுத்துவிட்டது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டியுள்ளதாகக் கூறப்படும் வாதத்தை முன்வைத்து, தங்கள் சுய பாதுகாப்புக்காக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாகக் காரணம் சொல்கிறது இஸ்ரேல். பதிலடியாக, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேல் விரும்பவில்லை என்றும், இதை எப்படியாவது குலைக்கவே இஸ்ரேல் முயன்றது என்றும் ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது; அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறவும் முடிவெடுத்துவிட்டது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடான இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாகவே பரவலாகக் கருதப்படுகிறது. மறுபுறம், மேற்கு ஆசியாவில் அணுசக்தி கொண்ட நாடாக ஈரான் வலிமை அடைவதைத் தடுக்க முயலும் மேற்கத்திய நாடுகள், காஸா மீது தாக்குதல் நடத்திக் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோரைக் கொன்றழிக்கும் இஸ்ரேலைத் தொடர்ந்து ஆதரித்துப் பாதுகாக்கின்றன. சௌதி அரேபியா, கத்தார் போன்ற முஸ்லிம் நாடுகளும், ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்கவோ தடுக்கவோ முயற்சிக்கவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த ஜி7 மாநாட்டைவிடவும் இஸ்ரேல் - ஈரான் போரில் அதிகக் கவனம் செலுத்துகிறார் டிரம்ப். அமெரிக்கப் போர்க் கப்பல்கள், விமானங்கள் ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது இந்தப் போர் இன்னும் விரிவடையக்கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் யார் பக்கம் நிற்பது என்பது இந்தியாவுக்கு மிகவும் சவாலான விஷயமாக மாறியிருக்கிறது.
இத்தகைய சூழலில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை இந்தியா புறக்கணித்தது பேசுபொருளாகியிருக்கிறது. ஈரான், இஸ்ரேல் என இரண்டு நாடுகளிலும் வசித்துவரும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், டெஹ்ரான், டெல் அவிவ் நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியாவுக்குக் கிடைத்துவரும் கச்சா எண்ணெயில், 80% ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் கொண்டுவரப்படுகிறது. எனவே, போர் தீவிரமடைந்தால் இந்தியாவுக்கும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும். இந்த நீரிணையை மூடப்போவதாக ஈரான் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் வர்த்தகத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படும் சபஹர் துறைமுகம் ஈரானில் அமைந்திருக்கும் நிலையில், இந்தப் போர் இந்தியாவின் கவலையை அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையே, ஈரானின் நடான்ஸ் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை கூறியிருக்கிறது. இதனால், கதிர்வீச்சு அபாயம் குறித்துப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
தென் மேற்குப் பருவமழைக்கான காற்று, மேற்கு ஆசியா வழியாகவே இந்தியாவை வந்தடையும் என்பதால், கதிர்வீச்சு அபாயம் பரவக்கூடும் என்று எச்சரிக்கைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் போர் விவகாரம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்துக்குச் சென்றிருக்கும் நிலையில், இந்தப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தன்னளவில் எடுப்பது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT