Published : 23 May 2025 11:10 AM
Last Updated : 23 May 2025 11:10 AM
பிரிட்டன் அரசு வெளியிட்டிருக்கும் குடியேற்ற வெள்ளை அறிக்கை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கடும் கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்திருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. புதிய குடியேற்ற விதிகள், இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் அச்சம் எழுந்திருக்கிறது.
முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, கட்டுப்பாடற்ற குடியேற்றங்கள் அதிகரித்ததாகவும், உயர் திறன் பெற்ற தொழிலாளர்களைவிடவும், கீழ்மட்ட வேலைத் திறன் கொண்ட தொழிலாளர்களே அதிகம் குடியேறியிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் பிரிட்டன் அரசு, குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
2020இல் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக, மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழ் இருந்தால் போதும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் பிரிட்டனில் பணியில் சேர்ந்தனர்.
2019இல் இருந்ததைவிட இரண்டு மடங்கு வேலை விசாக்கள் 2024இல் வழங்கப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களையே குறிப்பிட்ட தொழில் துறைகள் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கும் பிரிட்டன் அரசு, திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளநிலை பட்டப் படிப்பு இருக்கும் எனப் பரிந்துரைத்திருக்கிறது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், சமூக சேவை / வீடுகளில் முதியோர் - நோயாளிகளைப் பராமரிக்கும் பணி செய்பவர்கள் ஆகியோர் சுகாதாரம், பராமரிப்புப் பணிக்கான விசா பெறும் தகுதி பெற்றவர்கள் என பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, கானா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த விசாவுடன் பிரிட்டனுக்குள் அதிக அளவில் நுழைந்தனர். இனி அத்தகைய விசாக்கள் வழங்கப்படாது.
மாணவர்கள் தங்கள் பட்டப் படிப்பை முடித்த பின்னர் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்க முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் தற்போது 18 மாதங்களாகச் சுருக்கப்பட்டிருக்கிறது. குடியுரிமைக்கான முன்நிபந்தனை பெறுவதற்கான குறைந்தபட்சக் கால அவகாசம் ஐந்து ஆண்டுகளாக இருந்த நிலையில், அது தற்போது 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது.
முதன்மை விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கில மொழிப் புலமை அவசியம் என்று விதிமுறை இருந்துவந்த நிலையில், தற்போது அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பத்தினரும் பிரிட்டனுக்கு வர ஆங்கில மொழிப் புலமை அவசியம் என விதிமுறைகள் மாற்றப்படவிருக்கின்றன. மொத்தத்தில், பிரிட்டனில் புலம்பெயர்ந்து வாழும் பலர் ஆவணமற்றவர்களாக ஆகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கடுமையான விசா விதிமுறைகள் இல்லாவிட்டால், அந்நியர்களின் தீவாக பிரிட்டன் மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியிருக்கிறார். கல்வி, வேலை, குடும்பம் எனக் குடியேற்றம் தொடர்பான எல்லா அம்சங்களிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால்தான் அரசின் கையில் இதுதொடர்பான கூடுதல் அதிகாரம் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. எனினும், குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தப் பரிந்துரைகள் வழிவகுக்கும் என்றே அஞ்சப்படுகிறது. உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், ஏராளமான இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் வந்தது. அவர்களில் பலரின் கல்விக் கனவு சிதைந்துவிட்டது. அப்படியான சூழல் பிரிட்டனில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. இவ்விஷயத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT