Last Updated : 01 Oct, 2025 06:45 AM

3  

Published : 01 Oct 2025 06:45 AM
Last Updated : 01 Oct 2025 06:45 AM

கூட்ட நெரிசல் விபத்துகள் | சொல்... பொருள்... தெளிவு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.

இந்தியாவில்... இந்தியா​வில் கூட்ட நெரிசல் விபத்துகள் புதிதல்ல. மத நிகழ்வு​கள், திரு​விழாக்​கள், ரயில் நிலை​யங்​கள், மக்கள் திரள் கூடும் பொது நிகழ்ச்சிகள் உள்படப் பல்வேறு நிகழ்வு​களின்​போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்​பாக, இந்தியா​வில் ஏற்படும் கூட்ட நெரிசல் விபத்து​களில் 70% மத நிகழ்வுகளில் ஏற்படுபவை என்கின்றன தரவுகள்.

அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக் கூட்​டங்​கள், பிரச்​சாரக் கூட்ட நிகழ்வு​களில் கூட்ட நெரிசல் விபத்து ஏற்படுவது அரிது. அந்த வகையில், 2022 டிசம்பர் 28 அன்று ஆந்திர மாநிலம் நெல்​லூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர​பாபு நாயுடு பங்கேற்ற பொதுக்​கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி, கால்​வா​யில் விழுந்த 8 பேர் உயிரிழந்​தனர். அரசியல் கட்சிக் கூட்​டத்​தில் நிகழ்ந்த முக்​கியமான விபத்து என இந்தச் சம்பவம் பதிவாகி​யிருக்​கிறது.

தமிழகத்தில்... தமிழக வரலாற்றில் முக்​கியமான சில கூட்ட நெரிசல் விபத்துகள் பதிவாகியிருக்​கின்றன. 1992இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கும்​பகோணம் மகாமக நிகழ்​வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்​தனர். 2005 நவம்​பர், டிசம்​பரில் முறையே சென்னை வியாசர்​பாடி, எம்ஜிஆர் நகரில் அரசின் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்வு​களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்​தனர்.

இவை அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் இல்லை என்பது கவனிக்​கத்​தக்​கது. ஆனால், தமிழகத்​தில் இதுவரை அறிந்​திடாத அளவுக்கு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்​சாரக் கூட்​டத்​தில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த மரணங்​கள், வரலாற்றின் கறுப்புப் பக்கங்​களாக இருக்​கும் என்பதை மறுப்​ப​தற்​கில்லை.

கட்டுப்பாடான கூட்டங்கள்: தமிழகத்​தில் அரசியல் கட்சிகளின் நிகழ்வு​களில் லட்சக்​கணக்​கிலோ பல்லா​யிரக்​கணக்​கிலோ தொண்​டர்கள் கூடுவது புதிது கிடை​யாது. தமிழகத்​தில் இன்று​போல் பெரிய பாது​காப்பு வழிமுறைகளோ நடைமுறைகளோ இல்லாத காலக்​கட்​டத்​தில்கூட எந்த அசம்​பா​வித​மும் இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் நடந்​தேறி​யுள்ளன.

1969இல் அன்றைய முதல்வர் அண்ணா மறைந்த பிறகு இறுதி அஞ்சலி நிகழ்​வில் சுமார் 1.5 கோடி பேர் பங்கேற்​ற​தாகக் கூறப்​படு​வது, 1977இல் அதிமுக ஆட்சி​யைப் பிடித்த பிறகு சென்னை அண்ணா சாலை​யில் எம்.ஜி.ஆர். மிகப் பெரிய மக்கள் திரள் கூட்​டத்​தில் பங்கேற்றது போன்றவை சில உதாரணங்​கள். இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் மிகப் பெரிய மாநாடு​கள், கூட்​டங்களை முன்னெடுத்​துள்ளன.

இன்றைய சூழல்: இந்தியா​வில் கூட்ட நெரிசல் விபத்துகள் அண்மைக் காலமாக அதிகரித்​துள்ளன. 2003 – 2025 காலக்​கட்​டத்​தில் மட்டும் 23 கூட்ட நெரிசல் விபத்துகள் இந்தியா​வில் ஏற்பட்​டுள்ளன. இதில் கடந்த 3 ஆண்டு​களில் 11 கூட்ட நெரிசல் விபத்துகள் ஏற்பட்​டுள்ளன. குறிப்​பாக, 2025இல் மட்டும் 6 கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்​தேறி​யுள்ளன. 2025இல் அதிக உயிரிழப்பை ஏற்படுத்​தி​யிருப்​பது, கரூரில் விஜய் பிரச்​சாரக் கூட்​டத்​தில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்​து​தான்​.

நெரிசல்கள் ஏன்? - அரசியல் கட்சி மாநாடு​கள், பொதுக் கூட்​டங்​கள், பிரச்​சாரக் கூட்​டங்கள் ஆகிய​வற்றில் மட்டுமல்ல, பொது​வாகக் கூட்ட நெரிசல் அசம்​பா​விதங்​களைத் தடுப்​ப​தற்​குத் திட்​ட​வட்​டமான கூட்ட மேலாண்மை விதி​முறை​களைக் கடைப்​பிடிப்பது அவசி​யம். அரசியல் கட்சி நிகழ்வு​களில் திட்​ட​மிட்ட எண்ணிக்கையை விட அதிகக் கூட்டம் குவி​கிற​போது, திறமையான கூட்ட மேலாண்மை என்பது கூட்ட அமைப்​பாளர்​கள், அக்கூட்​டத்​தில் பங்கேற்​பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்​பை​யும் திட்​ட​மிடலை​யும் பொறுத்​தது.

கரூர் வேலுச்​சாமிபுரத்​தில் 10 ஆயிரம் பேர் எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில், 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்றது திட்​ட​மிடலில் ஏற்பட்ட தவறான முன்​கணிப்பு. இதுபோன்று எதிர்​பார்க்​கப்​பட்ட எண்ணிக்கை​யை​விடக் கூட்டம் அதிகரிக்​கும்​போது, திமிறும் மக்கள் கூட்​டத்​தில் குழப்​பங்கள் ஏற்படு​வதும், தங்களைக் காப்​பாற்றிக்​கொள்ள முண்​டியடிக்​கும் போக்​கும் விபத்து​களுக்கு வித்​திடு​கின்றன.

அதேநேரத்​தில், குறைத்து மதிப்​பிடப்​படும் எண்ணிக்கை, பாது​காப்பு விதி​முறை​களைப் பலவீனமாக நடைமுறைப்​படுத்​துதல், போதுமான உள்கட்​டமைப்பு வசதிகள் இல்லாதது, அசம்​பா​விதங்களை எதிர்​கொள்ளத் தயார் நிலை​யில் இல்லா​திருப்​பது, நிகழ்ச்சி ஏற்பாட்​டாளர்கள் - காவல் துறை - உள்ளூர் நிர்​வாகத்​தின் மோசமான ஒருங்கிணைப்பு போன்ற​வை​யும் கூட்ட நெரிசல் விபத்து​களுக்​குக் காரணங்​களாகின்றன. இந்தியா​வில் இந்த மரணங்கள் மீண்​டும் ​மீண்​டும் ஏற்படு​வது, கூட்ட மேலாண்​மை​யில் ஒரு நாடாகவே நாம் பின்​தங்கி​யிருப்பதை அம்பலப்​படுத்து​கிறது.

தொடர்கதையாவது ஏன்? - இந்தியா​வில் கூட்ட நெரிசல் விபத்துகள் துல்​லியமான கூட்ட மேலாண்மை விதி​கள், வழிகாட்டு நெறி​முறைகள் ஆகிய​வற்றை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி வருகின்றன. பெரிய கூட்​டங்​களுக்​குக் கவனமாகத் திட்​ட​மிடு​வதும், பாது​காப்பு நெறி​முறைகளைத் தீவிரமாக நடைமுறைப்​படுத்து​வதும் அவசி​யம்.

ஆனால், பிரபலமான நபர்​களுக்கு ரசிகர்​களின் மத்தி​யில் இருக்​கும் புகழை மூலதனமாக மாற்ற முயன்றால், உயிர்ப் பாது​காப்பு அங்கு கேள்விக்​குறி​யாகி​விடும். பெங்​களூரு ஐபிஎல் கிரிக்​கெட் வெற்றிப் பேரணி, கரூர் விஜய் பிரச்​சாரக் கூட்​டத்​தில் நிகழ்ந்த விபத்துகள் அதை உணர்த்து​கின்றன. இதுபோன்ற சந்தர்ப்​பங்​களில் முன்னெச்​சரிக்கைகள் அலட்​சி​யப்​படுத்​தப்​படு​வ​தால் கூட்ட நெரிசல் விபத்து​களைத் தவிர்க்க முடிவ​தில்​லை.

என்ன தேவை? - நெரிசலான இடங்​களில் அதீதக் கூட்​ட​மானது பீதியை விரை​வாகப் பரப்​பி​விடும். இந்தச் சூழலில் மக்களை அமைதியாக வழிநடத்​துதல், நீர்ச்​சத்​துக் குறை​பாடு, மூச்​சுத் திணறல் ஏற்படு​வதைத் தடுப்​பது, பாதிக்​கப்​பட்​ட​வர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவி பெற வழிகளை ஏற்படுத்தி, பாதையைத் திறந்து​வைப்பது போன்றவை தேவை. கூட்​டத்தைக் கட்டுப்​படுத்​தும் பணிகளில் ஈடுபடும் காவல் துறை, தன்னார்​வலர்​கள், நிகழ்ச்சி ஏற்பாட்​டாளர்கள் ஆகியோ​ருக்கு முறையான பயிற்​சி​யும் அவசி​யம்.

கரூர் சம்பவத்​துக்​குப் பிறகு அதற்கான காரணங்களை ஆராய ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்​கப்​பட்​டுள்ளது. என்றா லும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்​டும் ஏற்ப​டாமல் இருக்க அரசியல் கட்சிக் கூட்​டங்​கள், பேரணி​கள், ஆன்மிக நிகழ்வு​கள், விளை​யாட்டுப் போட்டிகள், கலாச்​சாரக் கூட்​டங்கள் அனைத்​துக்​கும் பொருந்தும் வகையில் நிகழ்ச்சிப் பாது​காப்​புக்கான விதி​முறைகள் உருவாக்​கப்பட வேண்​டும்.

1989இல் பிரிட்டனில் ஹில்​ஸ்பரோ விளை​யாட்டு நிகழ்​வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து, அங்கு பாது​காப்பு நெறி​முறைகளை மறுவடிவ​மைக்​கும் பாடத்தைக் கற்றுக்​கொடுத்தது. இந்தியா​வில் மத்திய அரசும் மாநில அரசுகளும் முறையான வழிகாட்டு​தல்களை உருவாக்கு​வதற்கு, மேற்​கண்ட நிகழ்வு​களில் இருந்து பாடங்​களைக் கற்க வேண்​டும்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x