Last Updated : 23 Sep, 2025 06:33 AM

 

Published : 23 Sep 2025 06:33 AM
Last Updated : 23 Sep 2025 06:33 AM

ஆப்ரிக்க நத்தை படையெடுப்பு: பேராபத்தின் தொடக்கப் புள்ளி!

21ஆம் நூற்றாண்டில் வேளாண்மை, உயிர்ப் பன்மை, காட்டுவளம், மனித உடல்நலம், வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஆக்கிரமிப்பு உயிரினங்கள்தான் (Invasive species) என்கிறது, பல்லுயிர்-சுற்றுச்சூழல் சேவைகளுக்கான அரசுகளுக்கு இடையேயான அறிவியல்-கொள்கைத் தளம் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services).

உலகம் முழுவதும் நுண்ணுயி​ரிகள் தொடங்கிச் சிறு செடிகள், மரங்கள், உயிரினங்கள் ஆக்கிரமிப்பு இனங்களாக அடையாளம் காணப்​பட்​டுள்ளன. கடந்த 500 ஆண்டு கால வரலாற்றில், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3,500 உயிரினங்கள் ஆக்கிரமிப்பு இனங்களாகப் பட்டியலிடப்​பட்​டுள்ளன.

இயற்கைப் பாதுகாப்​புக்கான சர்வதேசக் கூட்டமைப்பு (International Union for Conservation of Nature) அறிக்கை, 100 ஆக்கிரமிப்பு இனங்கள் மிகவும் மோசமான சூழலியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளை உருவாக்கும் என்கிறது. இவற்றுள் 14 வகை உயிரினங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதி​களில் பரவிக் காணப்​படு​கின்றன.

அவற்றுள் ஒன்று​தான், சமீப நாட்களாகத் தமிழக ஊடகங்​களில் பேசுபொருளாகி​யிருக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை (Giant African Snail-Achatina fulica/ Lissachatina fulica). மிக மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இந்த நத்தை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டு​களில் சென்னையின் பல்வேறு நீர்நிலைகள், ஈரப்பதம் நிறைந்த நிலப்​பரப்பு​களில் இந்த நத்தைகள் அதிக அளவில் காணப்​படு​கின்றன.

இதன் பூர்விகம் எத்தி​யோப்​பியா, கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்ரிக்க நாடுகள். பல்வேறு காலக்​கட்​டங்​களில் இவை செல்லப்​பி​ராணி​களாக​வும், உணவு / வர்த்தகப் போக்கு​வரத்தின் வழியாகவும் உலகின் பல பகுதி​களுக்குப் பரவின. குறிப்பாக, ஆப்ரிக்கா முதல் அமெரிக்​கா வரை உள்ள இந்தோ-பசிபிக் பகுதிகள், பல்வேறு ஆசிய நாடுகள், பல்லுயிர் முக்கி​யத்துவம் வாய்ந்த தீவு நாடுகளான நியூஸிலாந்து, ஃபிஜி, பபுவா நியூ கினி என 52 நாடுகளில் பல்வேறு சூழலியல் / வேளாண் முக்கி​யத்துவம் வாய்ந்த பகுதி​களில் பரவிக் கடுமையான பொருளாதார / உணவு நெருக்​கடிகளை உருவாக்​கிவரு​கின்றன.

உயிரியல் பண்புகள்: சிவப்பு, பழுப்பு, பாலாடை நிறத்தில் நீண்ட கோடுகள் உடைய இந்த நத்தைகள் 20 முதல் 30 செ.மீ.வரை வளரக்​கூடியவை. வேளாண் நிலங்கள், இயற்கை வனப்பகு​திகள், ஈர நிலங்கள், நகர்ப்பு​றங்​களில் அதிக அளவில் காணப்​படும். இரவில் அதிகம் உலவும். ஆறு மாதங்​களிலேயே இனப்பெருக்கம் செய்கின்ற முதிர்ச்சியை அடைந்து​விடும் இந்த நத்தை, ஓர் இருபாலின உயிரினம் (இருபால் உடலி - hermaphrodite).

அதாவது, ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஒரே உயிரினத்தில் இருக்​கும். இந்தக் காரணத்தால் இவற்றால் ஒவ்வொரு வருடமும் 100% இனப்பெருக்கம் செய்ய முடியும். சராசரியாக ஒரு வளர்ந்த நத்தை ஓர் ஆண்டுக்கு 500 முதல் 900 முட்டைகளை உற்பத்​தி​செய்​யும். முட்டைகளை நிலத்தின் அடியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கும். நிலத்தின் கரிமத்​தன்மை, ஊட்டச்​சத்துகள், கார-அமிலத்​தன்மை, தட்பவெப்ப நிலை போன்றவை இந்த நத்தைகள் விரைவாக வளர முக்கியக் காரணிகள்.

தீங்கிழைக்கும் தன்மைகள்: கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தாவரங்​களின் இலை, பூ, பழம், பட்டை, வேர்களை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை இந்த நத்தைகள். இந்தியாவைப் பொறுத்தவரை வாழை, பீன்ஸ், முட்டைக்​கோஸ், மரவள்​ளிக்​கிழங்கு, பருத்தி, சோயாபீன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேளாண் தாவரங்​களுக்கு இவை பெரும் தீங்கை விளைவிப்​ப​தாகக் கண்டறியப்​பட்​டுள்ளது. மேலும், தொற்று​நோய்கள் பரவுவதற்கும் இந்த நத்தைகள் காரணமாக உள்ளன.

குறிப்பாக, சால்மொனெல்லா பாக்டீரியா, எலி நுரையீரல் புழு (Angiostrongylus cantonensis) போன்ற​வற்றுக்கு இவை பரப்பு​யி​ரி​களாகச் (vectors) செயல்​படு​கின்றன. குறிப்பாக, மெனன்​ஜைட்டிஸ் (Meningitis) மூளைக்​காய்ச்சல் நோய் பரவுவதற்கு இந்த நத்தைகள் காரணமாக இருக்​கின்றன. கேரள வன ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சிக் குழுவின் குறிப்பு​களின்படி, இந்த நத்தையை அப்பு​றப்​படுத்தும் பணியின்போது - குழந்தைகள் உள்பட ஏழு பேருக்கு மூளைக்​காய்ச்சல் நோய் தொற்றியது உறுதி​செய்​யப்​பட்​டுள்ளது.

இந்திய வரவு: 1847இல் பிரிட்டிஷ் நத்தை ஆராய்ச்சி​யாளர் வில்லியம் ஹென்றி பென்சன் மொரீஷஸ் தீவிலிருந்து ஒரு ஜோடி ஆப்ரிக்க நத்தைகளை கொல்கத்​தாவுக்குக் கொண்டு​வந்​தார். சிறிது காலத்​துக்குப் பிறகு, தன்னுடைய நண்பர் வசம் அவற்றை ஒப்படைத்து​விட்டுத் தாய்நாடு திரும்​பி​னார்.

அவருடைய நண்பர் தோட்டத்தில் அவற்றை விடுவித்​தார். பின்பு, 1858இல் கொல்கத்​தாவின் பல பகுதி​களில் இது பரவியதைத் தரவுகள் உறுதி​செய்​கின்றன. அசாம், மணிப்​பூர், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா, ராஜஸ்​தான், கர்நாடகம், கேரளம், தமிழ்​நாடு, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம்,, அந்தமான் - நிகோபார் தீவுகள் எனப் பல பகுதி​களில் இந்நத்தைகள் பரவலாகக் காணப்​படு​கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நத்தைகள் ஏற்படுத்திய பொருளாதார - பல்லு​யிர்ச் சீரழி​வு​களைப் பற்றிய தரவுகள் நம்மிடையே இல்லை. இந்தியாவில் இதனுடைய தீங்கிழைக்கும் தன்மை இருபதாம் நூற்றாண்​டில்தான் உணரப்​பட்டது. இதற்கு முக்கியக் காரணம், தற்போது நிகழும் காலநிலை மாற்றம்தான் என்கின்றன அறிவியல் தரவுகள்.

மணிபால் பல்கலைக்​கழகம், அசோகா சுற்றுச்​சூழல்​-பசுமை அறக்கட்​டளையின் ஆராய்ச்சிக் குறிப்பு​களின்படி, தற்போதைய காலநிலை மாற்றம் ஏற்படுத்திய உந்துதல் காரணமாக, இந்த ஆப்ரிக்க நத்தைகள் இனிவரும் காலத்தில் கேரளம், கர்நாடகம், தமிழ்​நாடு, ஆந்திரக் கடலோர மாவட்​டங்​களில் அதிக அளவு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிய​வந்​திருக்​கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம் - அவற்றைச் சுற்றி​யுள்ள டெல்டா மாவட்​டங்​களில் இது அதிக அளவு பரவக்​கூடும் என்று கணிக்​கப்​பட்​டுள்ளது. வேளாண் பயிர்​களுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பவை என்பதால், சிறு குறு விவசா​யிகளுக்கு இழப்பு நேரிடலாம்.

பலனளிக்கும் தீர்வுகள்: உலக அளவில் ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்​படுத்த ஒருங்​கிணைந்த ஒரே தீர்வு இதுவரை இல்லை. நில அமைப்பு, மக்கள்தொகை நெருக்கம், காலநிலை போன்ற பல்வேறு காரணி​களைக் கருத்தில் கொண்டுதான் இவற்றைக் கட்டுப்​படுத்த முடியும். உதாரணமாக, கர்நாடகத்தின் குடகு காபித் தோட்டங்​களில் இந்த நத்தைகளைக் கட்டுப்​படுத்தத் தொடர்ந்து விழிப்பு​ணர்வுப் பிரச்​சா​ரங்கள் மேற்கொள்​ளப்​பட்டன.

தோட்டத் தொழிலா​ளர்கள், அழிப்புப் பணியில் ஈடுபடு​பவர்​களுக்கு இந்திய காபி வாரியம் சார்பாக ஒரு ஜோடி கையுறைகள், 25 கிலோ அரிசித் தவிடு, 100 கிராம் லார்வின் பிராண்டு தியோடி​கார்ப் (பூச்சிக்​கொல்லி), 3 கிலோ வெல்லம், 100 மில்லி ஆமணக்கு எண்ணெய் அடங்கிய பைகள் சலுகை விலையில் வழங்கப்​பட்டன.

இவற்றைக் கொண்டு தயாரிக்​கப்​படும் கலவையினைக் காபிச் செடிகளுக்கு நடுவே சிறு சிறு உருண்​டைகளாக வைக்கும்படி அறிவுறுத்​தப்​பட்டது. அவற்றை உண்ணும் நத்தைகள் மரணித்தன. மேலும், இந்த நத்தைகளை கிலோ 4 முதல் 8 ரூபாய்க்கு இந்திய காப்பி வாரியம் வாங்கி அவற்றை கவனமாக அப்பு​றப்​படுத்​தியது. இதன் தொடர்ச்சியாக 90% வெற்றியை பெற முடிந்தது.

அதேநேரம், கேரளத்தில் மக்கள் அதிகம் உள்ள 200க்கும் மேற்பட்ட பகுதி​களில் பரவலாகக் காணப்பட்ட இந்த நத்தைகளைப் பூச்சிக்​கொல்லி கலந்து அழிக்க முடிய​வில்லை. மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதி​களில் இந்தப் பூச்சிக்​கொல்​லியால் தீய விளைவுகள் ஏற்படலாம் என்பதால் அந்த முயற்சி தவிர்க்​கப்​பட்டது. அதேவேளை​யில், புகையிலைச்​சாறு, காப்பர் சல்பேட் தெளிக்​கப்​பட்டு இந்த நத்தைகள் கேரளத்தின் பல பகுதி​களில் கணிசமாகக் கட்டுப்​படுத்​தப்​பட்டன.

சென்னையைப் பொறுத்​தவரை, தற்போது இந்த நத்தைகள் மாதவரம், வடக்கு சூளைமேடு, மத்திய சென்னை, தரமணி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்​பகு​தி​களில் குறிப்​பிடத்தக்க அளவு உள்ளன. இவை மேலும் பரவுவதைத் தடுக்கத் தொலைநோக்கு அறிவியல் கண்ணோட்​டத்​துடன், நிலச்​சார்புத் திட்ட வரையறைகளை வகுக்க வேண்டும். இதற்கான திட்டத்தைத் துறைசார் வல்லுநர்​களுடன் தமிழக அரசு கலந்தாலோ​சித்துச் செயல்​படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நத்தைகளால் ஏற்படக்​கூடிய பேராபத்​துகளைத் தவிர்க்க முடியும்​!

- தொடர்புக்கு: ssandilyan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x