Published : 20 Sep 2025 07:32 AM
Last Updated : 20 Sep 2025 07:32 AM

மனித வாழ்வின் மாறாத அடையாளங்கள்: வள்ளுவர் உணர்த்தும் உண்மை

சமூக ஊடகங்​கள் ஆதிக்​கம் செலுத்​தும் இந்த நவீன உலகம், பிறரின் ஒப்​புதல்​களுக்​கான வேட்​டை​யில் நம்மை முடி​வில்​லாமல் ஈடுபட செய்​கிறது. பிறர் நம்மை எப்​படிப் பார்க்​கிறார்​கள் என்ற கவலை, நமது பதி​விற்கு வந்து விழும் (likes) ‘லைக்​ஸ்’ன் மூலம் உறு​திப்​படுத்​திக்​ கொள்​ளும் முடி​வில்​லாத விழை​வால் நம் மனம் அமை​தி​யற்று அலை​பாய்​கிறது.

அங்​கீ​காரத்​தின் மீதான இந்​த அளவில்லா தாகம், நம் ஆன்​மாவை எளி​தில் காயப்​படுத்​தக்​கூடிய​தாக​வும், அமை​தி​யற்​ற​தாக​வும் மாற்​றி​விட்​டதை நாம் கவனிப்​ப​தில்​லை. ஆயினும், பல நூற்​றாண்​டு​களுக்கு முன்பே ஒரு தெய்​வப் புல​வர் மனிதகுலத்​திற்கு ஒரு புதிய வழியைக் காட்​டி​னார். அவர் தன் பெயரையோ, வாழ்க்​கைக் குறிப்​பு​களையோ வெளிப்​படுத்​தாமல், தன் ஞானத்தை மட்​டுமே உலகிற்கு ஈந்​தார். அவரே திரு​வள்​ளுவர். அவர் தனது தனிப்​பட்ட அடை​யாளங்​களை முன் நிறுத்​தாமல், சாதி, மதம், போன்ற புற அடை​யாள குறிகளால் பாதிக்​கப்​ப​டாத ஒரு அழி​யாத பொக்​கிஷத்தை உலகிற்​குக் கொடுத்​துள்​ளார். அவரது எழுத்​துக்​கள் மாறாத உண்​மையை தாங்கி உலகளா​விய சுட​ராகப் பிர​காசிக்​கின்​றன.

இது தொடர்​பான சிந்​தனை​யில், நான் சமீபத்​தில் கேட்க நேர்ந்த, பேச்​சாளர்/ சிந்​தனை​யாளர் பாரதி பாஸ்​கரின் பேச்சு என்​னுள் ஆழமான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது. திருக்​குறள் என்​பது தொலை​விலிருந்து வியந்து பார்க்க வேண்​டிய பண்​டைய செய்​யுள் தொகுப்பு மட்​டுமல்ல, அது நவீன வாழ்​விற்​கான ஓர் உயிர்த்​துடிப்​புள்ள வழி​காட்டி என்​பதை அவர் நினை​வூட்​டி​னார். அவரது சொற்​கள், திரு​வள்​ளுவரைப் பக்​தி​யுடன் மட்​டும் பார்க்​காமல், அவரது காலத்​தால் அழி​யாத போதனை​கள், நம் அன்​றாடங்​களின் சிக்​கல்​களுக்கு தீர்​வு​கள் காண நடை​முறைப்​படுத்த வேண்​டியவை என்ற உணர்வை என்​னுள் மீண்​டும் எழுப்​பியது. ஆம், திரு​வள்​ளுவரே அதை உறு​திப்​படுத்​தும் வண்​ணம் இவ்​வாறு மொழிகிறார்​

புகழ்பட வாழா​தார் தந்​நோ​வார் தம்மை
இகழ்​வாரை நோவது எவன். (குறள் : 237)

வாழ்வு முழு​வதும் போராட்​டங்​கள் நிறைந்​தது என்​றறிந்​துள்​ளார் வள்​ளுவர். அந்த சோதனை​கள் நம்​மைச் சோதிக்​கும், தோல்வி​கள் நம்​மைச் சரணடை​யத் தூண்​டும். ஆனால், நம்​பிக்கை இழப்​பது அதற்​கான தீர்​வா​காது என்று சொன்ன வள்​ளுவ ஆசான்; முயற்​சி​யால் விதி​யைக் கூட மாற்றி வடிவ​மைக்க முடி​யும் என்ற நம்​பிக்கையை விதைக்​கிறார்.

தெய்​வத்​தான் ஆகா தெனினும் முயற்​சிதன்
மெய்​வருத்​தக் கூலி தரும்.(குறள் : 619)

வள்​ளுவரின் இந்​தக் கருத்து எல்​லா​வற்​றிற்​கும் உடனடி​யாக அங்​கீ​காரத்தை எதிர்​பார்க்​கும் நம் எண்ண ஓட்​டத்​திற்கு ஒரு விடையை பகர்​கிறது. நாம் எவ்​வளவு விரை​வாகப் பாராட்டை நாடு​கிறோமோ, அவ்​வளவு விரை​வாக அந்த அங்​கீ​காரம் தாமத​மாகும் போது முயற்​சிகளைக் கைவிட்​டு​விடு​கிறோம். ஒரு விதை முளைப்​ப​தற்கு யாரும் பார்க்க வேண்​டிய​தில்​லை. கைத்​தட்ட வேண்​டிய​தில்​லை. மனிதன் மட்​டுமே இயற்​கைக்கு மாறாய் அடை​யாளங்​களுக்​காக​வும் அங்​கீ​காரத்​திற்​காக​வும் அலை​பாய்​கிறான். அது​போல​வே, முயற்சி என்​பது யாரும் காணாத போதும், புகழாத போதும் விடாது தொடர வேண்​டிய ஒன்​று.
அதுவே வள்​ளுவர் நமக்கு உணர்த்​தும் பாடம். இந்​தக் கருத்தை வலி​யுறுத்​தும் வள்​ளுவரின் குறள் இதோ:

அருமை உடைத்​தென்று அசா​வாமை வேண்​டும்
பெருமை முயற்சி தரும்(குறள்: 613)

புகழைத் தேடும் ஆசை​யில் அறத்தை பின்​னுக்​குத் தள்​ளுகிறோம் நாம். ஆனால் வள்​ளுவர் நன்​மை​யை​யும் நம்​பகத்​ தன்​மை​யையும் எப்​போதும் கைவிடலா​காது என்​கிறார். இதோ அந்த குறள்,

பொய்​மை​யும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்​கும் எனின். (குறள் : 292)

தன்​நலமற்ற சேவைக் குறித்து பேசும்​போது, உயர்ந்த பெருமை என்​பது தனிப்​பட்ட புகழில் இல்​லை, மாறாக இரக்​கத்​தி​லும் பிறருக்​குச் செய்​யும் சேவை​யிலும்​தான் உள்​ளது என்​கிறார் வள்​ளுவர்.

அன்​பிலார் எல்​லாம் தமக்​குரியர் அன்​புடை​யார்
என்​பும் உரியர் பிறர்க்​கு. (குறள் : 72)

இதனை மேலும் ஆழமாக,

கண்​ணோட்​டம் என்​னும் கழிபெருங் காரிகை
உண்​மை​யான் உண்​டிவ் வுல​கு. (குறள்: 571)

என்ற குறள் மூலம், இந்த உலகம், அன்​பும் இரக்​க​மும் இணைந்த கண்​ணோட்​டம் எனப்​படு​கிற பெரும் அழகைக் கொண்​ட​வர்​கள் இருப்​ப​தால்​தான் பெருமை அடைகிறது என்​கிறார்.

நிலை​யில்லா அங்​கீ​காரத்​தில் மூழ்​கி​யிருக்​கும் நம் உலகிற்கு இதை​விட ஒரு சிறந்த உண்மை இருக்க முடி​யு​மா? திரு​வள்​ளுவர் தன்​னைக் குறித்து எங்​கும் கூற​வில்​லை. ஆனால், அவரது வார்த்​தைகள் அவரை என்​றென்​றும் நிலை பெறச்​செய்​கின்​றன. அவர் ஓர் அரச​னாகவோ, அரசி​யல்​வா​தி​யாகவோ, மதகுரு​வாகவோ அறியப்​பட​வில்​லை. ஆனால், அவரது ஞானம் மன்​னர்​களை​யும், பேரரசுகளை​யும் கடந்து இன்​றும் நிலைத்து நிற்​கிறது. அவரது குறள்​கள் நமக்​கு, அகந்​தைக்​குப் பதிலாகத் தன்​னலமின்​மை, சோர்​வுக்​குப் பதிலாக விடா​முயற்​சி, பொய்க்​குப் பதிலாக உண்​மை. உதாசீனத்திற்​குப் பதிலாக அன்​பு, சுயநலத்​திற்​குப் பதிலாக சேவை ஆகிய​வற்​றுக்கு வழி​காட்​டு​கின்​றன.

ஒரு​வர் தனது பெரு​மையை புறம்​தள்​ளி​ விட்​டு, சமூகத்​திற்​குச் சேவை செய்​யும்​போது, அவரது பணி அழி​வற்​ற​தாகிறது. மிகச் சிறிய அன்​பான செயலுக்​குக்​கூட கற்​பனைக்கு எட்​டாத சக்தி உண்​டு. வாருங்​கள்! அங்​கீ​காரத்​திற்​காக அல்​லாமல் அன்​பிற்​காக, அன்​பாக உண்​மை​யாக செயல்​கள் செய்​வோம்!

- ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x