Published : 19 Sep 2025 12:04 PM
Last Updated : 19 Sep 2025 12:04 PM
தமிழில் துறைசார்ந்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் முதன்மையாக இடம்பெறுபவர் மருத்துவர் கு.கணேசன். மருத்துவராகச் செயல்படுவதைவிடவும் மருத்துவ எழுத்தாளராகத் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். மருத்துவத் துறையின் நிகழ்வுகள், நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், புதிய நோய்கள், நோய்த் தடுப்பு வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதிவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்...
எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? - நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் அழ.கிருஷ்ணமூர்த்தி எனக்கு வரலாற்று ஆசிரியராக இருந்தார். அவர் நடத்தும் நீதிபோதனை வகுப்புகள் வாசிப்பு, எழுத்து மேல் ஆர்வத்தை உண்டாக்கும் விதத்தில் இருக்கும். எழுத வேண்டும் என்றால், நிறைய வாசிக்க வேண்டும் என்பார். என் கிராமத்தில் உள்ள நூலகத்தில் என் வாசிப்புத் தாகம் தீராது. அதனால் 15 கி.மீ. தூரத்தில் இருக்கிற திருவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு நடந்தே செல்வேன்.
வகுப்புகளில் கதை, கவிதை எழுதுவது எப்படி என்று அவர் பயிற்சி அளிப்பார். நல்ல படைப்புகளுக்குப் பரிசும் கொடுப்பார். அவரிடம் நான்தான் அதிக பரிசு வாங்கியிருப்பேன். பரிசு பெற்ற படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்ப வழிகாட்டுவார். அப்படி நான் எழுதிய ‘யாருக்கு முத்துமாலை?’ என்கிற கதை ‘முயல்’ சிறார் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’, ‘ரத்னபாலா’, ‘பாப்பா மஞ்சரி’ போன்ற இதழ்களில் கதைகளை எழுதினேன்.
குழந்தைகளை வைத்து அழ.வள்ளியப்பா வாசகர் வட்டம், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்... அழ.வள்ளியப்பா வாசகர் வட்டத்தை 1980களில் ராஜபாளையத்தில் கொ.மா.கோதண்டம் - ராஜேஸ்வரி தம்பதியர்தான் நடத்தினர். அதில் நான் கலந்துகொள்வேன். அங்கு சிறாருக்குக் கவிதை, கதை, கட்டுரை எழுதும் பயிற்சிகளையும், நடிப்புப் பயிற்சியையும் வழங்குவோம்.
அப்படி என் சிறார் நாடகங்களுக்குப் பயிற்சி அளித்து திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்களுக்குச் சிறாரை அழைத்துச் சென்று நடிக்க வைத்துள்ளேன். அவ்வாறு நடித்த அன்றைய சிறாரில், வள்ளிதாசன் இன்றைக்குப் பத்திரிகையாளராகவும், பதிப்பாளராகவும் பரிணமிக்கிறார். கொ.மா.கோ. இளங்கோ சிறார் எழுத்தாளராக இருக்கிறார்.
நீங்கள் எழுதவந்த காலக்கட்டத்தில் மருத்துவ அறிவியல் எழுதுவதற்கான சூழல் எப்படி இருந்தது? - 1975களில் அச்சு ஊடகங்களில்தான் மருத்துவ அறிவியல் பகுதிகள் வெளிவந்தன. பெரும்பாலும் குறிப்பிட்ட சில மருத்துவர்களின் நேர்காணல்களாகத்தான் அவை இருக்கும். கோவையிலிருந்து வெளிவந்த ‘கலைக்கதி’ரும், ‘கலைமகள்’ நிறுவனம் வெளியிட்ட ‘மஞ்சரி’யும், ‘தினமணி’யில் என்.ராமதுரையைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தினமணி சுட’ரும் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் மலர்கள். நான் பெரியவர்களுக்கு எழுதிய மருத்துவக் கட்டுரை முதன்முதலில் ‘தினமணி சுட’ரில்தான் வெளிவந்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கேட்கட்டுமா டாக்டர்?’ என்கிற பகுதியை ‘கோகுலம்’ இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறீர்கள். அது இளம் வாசகர்களிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது? - சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமாக இருந்த என்னை மருத்துவ எழுத்தாளராக மாற்றியவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாதான். அவர் ஆசிரியராக இருந்த ‘கோகுல’த்தில் ‘கேட்கட்டுமா டாக்டர்?’ பகுதியை எனக்காக ஆரம்பித்தார்.
‘கோகுல’த்தில் மூன்று தலைமுறையினருக்கு எழுதியிருக்கிறேன். சிறு வயதில் என் வாசகர்களாக இருந்தவர்கள், இன்றைக்கும் என் வாசகர்களாகத் தொடர்கிறார்கள். நிதித் துறைச் செயலர் உதயச்சந்திரன், அகில இந்தியக் குடிமைப் பணிப் பயிற்சி மையத்தின் முதல்வர் தே.சங்கர சரவணன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.
மருத்துவப் பணியையும் எழுத்துப் பணியையும் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? - தகுந்த திட்டமிடல்தான் காரணம். மருத்துவப் பணி செய்கிற நேரத்தில் எழுத்துப் பணியைச் செய்வதில்லை. தினமும் அதிகாலையில் என் எழுத்துப் பணியை வைத்துக்கொள்வதால் மருத்துவப் பணி பாதிக்கப்படுவதில்லை. எதை எழுத வேண்டும், யாருக்கு எழுத வேண்டும், எத்தனை வார்த்தைகள் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டுக்கொள்வேன்.
மருத்துவர், எழுத்தாளர் மட்டுமன்றி, ஒரு தேர்ந்த வாசகராகவும் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், என்னென்ன வாசிக்கிறீர்கள்? - என் வீட்டில் நூலகம் வைத்திருக்கிறேன். 7 நாளிதழ்கள், 4 வார இதழ்கள், 3 இலக்கிய இதழ்கள், 3 மருத்துவ மாத இதழ்களை வாங்குகிறேன். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை வாசிக்கிறேன் அல்லது எழுதுகிறேன். 6 – 7 மணிக்கு நடைப்பயிற்சி முடிந்ததும், 7 - 8 மணி வரை நாளிதழ்களை வாசிக்கிறேன். இணையத்தில் சில வெளிநாட்டு நாளிதழ்களையும் முக்கியமான மருத்துவ இதழ்களையும் வாசிப்பேன்.
இவை தவிர, ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சியிலும் (குறைந்தது 10,000 ரூபாய்க்கு) பலதரப்பட்ட புத்தகங்களை வாங்குவேன். வாசித்துப் புதுப்பித்துக்கொண்டே இருந்தால்தான் வாசகர்களுக்குப் புதிய புதிய செய்திகளைத் தர முடியும். பயணங்களின்போது எனக்குத் துணை புத்தகங்களே. அரிதாகவே தொலைக்காட்சி பார்ப்பேன். சமூக ஊடகங்களுக்குத் தினமும் அரை மணி நேரம் மட்டுமே செலவிடுவேன்.
மருத்துவத்தில் மக்களின் விழிப்புணர்வு எந்த நிலையில் இருக்கிறது? இயற்கை மருத்துவம் என்கிற பெயரில் இன்றும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற செயல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? - மருத்துவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு இன்னும் மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படவில்லை. நவீன மருத்துவத்தில் 80% நாள்பட்ட நோய்களையும் அகால மரணங்களையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும்.
ஆனால், பெரும்பாலான மக்கள் அதற்குத் தயாரில்லை. முன்பெல்லாம் பத்திரிகைகள், தொலைக்காட்சி வழியாக மருத்துவச் செய்திகளை மக்கள் தெரிந்துகொண்டார்கள். இவை நம்பகத்தன்மை கொண்டிருந்ததால் பிரச்சினை இல்லை. இப்போது சமூக ஊடகங்களில் கட்டுப்பாடில்லாமலும் தணிக்கை இல்லாமலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில், தகுதியானவர்கள் சொல்வதைவிடத் தகுதி இல்லாதவர்கள் தருகிற மருத்துவ ஆலோசனைகள்தான் அதிகம். இவற்றால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். தவறான மருத்துவ சிகிச்சைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்கள்கூட நோயின் ஆரம்பத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை.
முதலில் கூகுள் அல்லது ‘ஏஐ’ மருத்துவரிடம்தான் ஆலோசனை கேட்கிறார்கள். இவற்றில் மருத்துவம் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறவர்களும், நோயைத் தீவிரப்படுத்திக்கொண்டு மருத்துவ ஆலோசனைக்கு வருகிறவர்களும்தான் அதிகம்.
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மனநிலைக்குச் சமூக ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்தான் காரணம். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலமைப்பு, உடல்செயல்பாடு, உடல்தகுதி ஆகியவை வேறுபடும். அதைப் பொறுத்துத்தான் சுகப்பிரசவம் ஆவதும், சிசேரியன் ஆவதும் கணிக்கப்படும்.
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றாநோய்கள் அதிகரித்து வருகிற இன்றைய காலக்கட்டத்தில், சிலருக்குப் பிரசவ நேரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்படச் சாத்தியம் உண்டு. தகுந்த மருத்துவரிடம் பிரசவம் பார்த்தால் இந்தச் சிக்கல்களைத் தடுக்க முடியும். இயற்கை வழியில் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும்போது, இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க முடியாது. அப்போது தாய்க்கும் சேய்க்கும் உயிராபத்து நேரக்கூடும்.
இன்றைய மருத்துவர்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்களா? - இன்றைய மருத்துவர்களுக்கு மருத்துவத்தைத் தமிழில் எழுதும் ஆர்வம் குறைந்துவருகிறது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பேசுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதைவிட, மருத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவதற்குத் தமிழ்ப் புலமையும் வேண்டும்; மருத்துவப் புலமையும் வேண்டும்; கலைச்சொல்லாக்கம் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் புலமைகள் ஒருசேர இருக்கிற மருத்துவர்கள் தமிழ்நாட்டில் குறைவு.
- தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT