Published : 11 Sep 2025 06:43 AM
Last Updated : 11 Sep 2025 06:43 AM
“சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்க மாட்டேன். யாரும் அப்படிச் செய்ய அனுமதிக்கவும் மாட்டேன்” - நேபாளத்தில் வெடித்த இளைஞர் புரட்சிக்குப் பயந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி அடிக்கடி கூறிவந்த வார்த்தைகள் இவை. ஊழல் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை, கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம், நேபாள அரசியல் மேட்டிமைத்தனத்துக்கு ஒருவழியாக முடிவுகட்டியிருக்கிறது.
இளைஞர்களின் எழுச்சி: பல நூற்றாண்டுகளாக மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம், 2006இல், மன்னர் ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சியினரும் மாவோயிஸ்ட் அமைப்பினரும் திரண்டு நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 2008இல் ஜனநாயக நாடாக மாறியது. சீனா, இந்தியா என இரு பெரும் சக்திகளின் அரசியல் தாக்கத்துக்கு உள்ளாகிவரும் நேபாளத்தில், இந்தக் குறுகிய காலத்தில் இதுவரை 14 முறை ஆட்சி மாறியிருக்கிறது. எனினும், ஓர் அரசுகூடத் தனது ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவில்லை.
அந்த அளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை கொண்ட நாடு இது. நேபாள இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 17.2% என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தியா, தென்கொரியா, மலேசியா, மத்தியக் கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளுக்குப் பெரும்பாலும் கட்டுமானப் பணிகளுக்காகத்தான் நேபாளிகளில் பலர் செல்கின்றனர்.
அரசியல் தலைவர்களின் ஊழல் முறைகேடுகள், அவர்களது வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை போன்ற காரணிகள் அங்கும் இளைய சமுதாயத்தினரை வெகுண்டு எழ வைத்திருக்கின்றன. பல ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையே நடைபெறுவதில்லை. நேபாள காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பாவுக்கும், ஒலிக்கும் இடையில் இருந்த ‘புரிந்துணர்’வால் ஊழல் வழக்குகள் மெளனமாக்கப்படுவதாக விமர்சனங்கள் உண்டு.
இந்தச் சூழலில், அரசியல் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து நெபோகிட்ஸ், நெபோபேபீஸ் என்கிற ஹாஷ்டேகுகளில் இளம் தலைமுறையினர் விமர்சித்துவந்தனர். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் அதிகரித்துவந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஒலி அரசு, சமூக வலைத்தளங்கள், நேபாளத்தில் பதிவுசெய்வதற்கான நிபந்தனைகளை ஏழே நாட்களுக்குள் பூர்த்திசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களைத் தடைசெய்தது.
இளைஞர்கள் எழுப்பும் எதிர்க்குரலை நசுக்க சமூக வலைத்தளங்களை முடக்கினால் போதும் என்று ஒலி அரசு நினைத்ததுதான் மிகப் பெரிய நகைச்சுவை. சமூக வலைத்தளங்களை முறைப்படுத்துவதற்காகவே இந்தத் தடை என அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க இளைஞர்கள் தயாராக இல்லை. டிக்டாக், விபிஎன் இணைப்பு போன்றவற்றின் துணையுடன் செப்டம்பர் 8இல் இளைஞர்கள் திரண்டு, அமைதியான முறையில் போராடினர். இவர்களில் பலர் போராட்டம் என்றால் என்னவென்றே அறிந்திராதவர்கள்.
அரசின் அடக்குமுறை: கைகளை உயர்த்தியபடி அமைதியான முறையில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் மீது - திடீரென ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல் துறை. கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டது. இந்தக் களேபரத்தில், பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் உட்பட 19 இளைஞர்கள் கொல்லப்பட்டது போராட்டக்காரர்களைக் கொந்தளிக்க வைத்தது; போராட்டம் வன்முறை வடிவமெடுத்த பின்னர், அரசு அமைப்புகளால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் குறிவைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றமும் இதில் தப்பவில்லை. அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகினாலும் இளைஞர்களின் கோபம் தணியவில்லை. குறிப்பாக, நிதியமைச்சர் மீது விழுந்த உதை, இளைஞர்களின் மனதில் கனன்றுகொண்டிருந்த கோபத்தின் வெளிப்பாடு.
போக்கரா, பிராத்நகர், சித்வான், புத்வால் எனப் பல நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பின்னரும் இளைஞர்களின் கோபம் தணியவில்லை. ஊரடங்கு உத்தரவுகளை மீறித் திரண்டு சென்று வன்முறையில் ஈடுபட்டனர். இளைஞர்களின் எழுச்சிக்கு ஒட்டுமொத்த நேபாளமும் துணைநின்றது. 2022இல் இலங்கை ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராகவும், 2024இல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களுடன் இந்தப் போராட்டம் ஒப்பிடப்படுகிறது.
ஆனால், நேரடியாகத் தலைவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது நேபாளப் போராட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது, ‘ஹமி நேபாள்’ என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான 26 வயதான சுதான் குருங். இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையால் வெகுண்டு எழுந்த சுதான் குருங், ‘உடனடியாக ஒலி அரசு பதவி விலக வேண்டும்’, ‘துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் / நடத்தியவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’, ‘இளைஞர்களின் இடைக்கால அரசு அமைய வேண்டும்’ என நிபந்தனைகளை விதித்தார்.
அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்காத நிலையில், பதவிவிலகினார் சர்மா ஒலி. எனினும், மற்ற நிபந்தனைகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டா என்பது இனிமேல்தான் தெரியும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் வந்துவிட்ட நிலையில், பதற்றம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “மாணவர்கள் மீது தவறு இல்லை. போராட்டக்காரர்களிடையே கலவரக்காரர்கள் ஊடுருவிவிட்டார்கள்” என்றெல்லாம் பேசிய ஒலி, இளைஞர்கள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் பொறுப்பு: இந்த விவகாரத்தில் இந்தியா என்ன செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சிக்கிம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார் என ஐந்து மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நேபாள நிலப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கம் அதிகம் என்றாலும், அவ்வப்போது சீன ஆதரவு நிலைப்பாட்டை நேபாளம் எடுக்கும்.
குறிப்பாக, சீனாவின் பக்கம்தான் ஒலி நிற்பார். நேபாளத்தில் கரோனா பரவலுக்குக் காரணம் இந்தியாதான் என அவர் குற்றம்சாட்டியிருந்தார். 2015இல் நேபாளத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைச் சங்கடப்படுத்தியது. இந்திய எல்லையில் இருக்கும் ‘தராய்’ என்ற சமவெளிப் பகுதியில் வாழும் மாதேசிகளின் நலனையும் உள்ளடக்கியதாக அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்தியது.
மாதேசிகளில் பெரும்பாலானோரின் பூர்விகம் இந்தியாதான். பல தருணங்களில் உதவிசெய்த நாடு என்றாலும், இந்தியாவின் இந்தத் தலையீட்டை நேபாளம் விரும்பவில்லை. இப்படிப் பல முறை பிணக்குகள் ஏற்பட்டன. அண்மையில்தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்காக சீனா சென்றுவந்தார் ஒலி. கட்சியிலும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டிருந்த ஒலிக்கு, இளைஞர் புரட்சி ஏறத்தாழ முடிவுரை எழுதிவிட்டது.
காட்மாண்டு மேயரும் முன்னாள் ராப் இசைக் கலைஞருமான பாலேந்திர ஷா, ராஷ்ட்ரிய சுதந்திரா கட்சித் தலைவர் ராபி லாமிச்சானே ஆகியோர் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு அவர்கள் வருவார்களா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இருவரும் போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்.
எல்லாவற்றையும் தாண்டி, நேபாள மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவரும் இந்தியா, இந்த முறை எடுக்கப்
போகும் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப் படுகின்றன. ஆரம்பத்தில் மெளனமாக இருந்துவிட்டுச் சம்பிரதாயமாகச் சில வார்த்தைகளை சீனா உதிர்த்திருக்கிறது.
‘நாங்கள் வென்றுவிட்டோம்’ என நாடாளுமன்றக் கட்டிடத்தில் போராட்டக்காரர் ஒருவர் முழக்கமிட்டார். இளைஞர்களின் கோபம் எந்த சாம்ராஜ்யத்தையும் வீழ்த்திவிடும் என்பதற்கான உதாரணம் இது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என அரசியல் தலைவர்கள் நினைப்பது இனியும் செல்லுபடி ஆகுமா என்னும் கேள்வியை இந்தப் போராட்டங்கள் வலுவாக எழுப்புகின்றன!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT