Published : 29 Aug 2025 08:10 AM
Last Updated : 29 Aug 2025 08:10 AM
அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கூலி’ திரைப்படம், வசூல் சாதனைகளுக்காக மட்டுமன்றி, அதிர்ச்சியூட்டும் வன்முறைக் காட்சிகளுக்காகவும் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் திகில் திரைப்படங்களில் இடம்பெற்ற கொடூரக் கொலைகள், இன்றைய திரைப்படங்களின் தெருச்சண்டைக் காட்சிகளில்கூட மிக இயல்பான அம்சங்களைப் போல முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய அத்துமீறல்களின் உச்சமாக ‘கூலி’ திரைப்படம் அமைந்திருக்கிறது. படைப்புத்திறன் வெளிப்பாடு என்று இதைச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. சமூகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் போக்கு இது.
பொறுப்புணர்வின்மை: திரைப்படம் என்பது இயல்பு வாழ்க்கையை அப்படியே பதிவுசெய்யக்கூடிய ஊடகம் அல்ல என்பதும், சுவாரசியத்துக்காக இயல்பை மீறிய சித்தரிப்புகள் சேர்க்கப்படுவது கலையம்சத்தின்-பொழுதுபோக்கின் ஒரு பகுதி என்பதும் நாம் நன்கு அறிந்தவைதான். படைப்பாக்கத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் ஏற்க முடியாதது. ஆனால், தனது படைப்பின் மூலம் சமூகத்துடன் ஊடாடும் ஒரு கலைஞருக்குக் குறைந்தபட்சப் பொறுப்புணர்வு அவசியம். இதை இன்றைய திரைக் கலைஞர்களில் பலர் மிகவும் அலட்சியத்துடன் புறந்தள்ளுகிறார்கள்.
நாயக பிம்பத்துக்கு வலுச்சேர்க்கவும், திரைக்கதையின் தர்க்கப் பிழைகள் குறித்துப் பார்வையாளரின் மனதில் எழும் கேள்விகளை மழுங்கடிக்கும் வகையிலும் மிகக் கோரமான வன்முறைக் காட்சிகளைத் தங்கள் படங்களில் இவர்கள் சேர்க்கிறார்கள். குற்றப் பின்னணி கொண்டவர்களையே தனது படங்களில் முதன்மைப் பாத்திரங்களாக முன்வைக்கும் லோகேஷ் கனகராஜ், அண்மைக் காலமாக இதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தின் கதையையும், காட்சிகளையும் ஒருவரிடம் விவரிக்கும்போது, அந்த நபரால் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு எள்ளி நகையாடும் வகையிலான மோசமான எழுத்தாக்கத்தைக் கொண்டது. ஆனால், அந்தப் பலவீனத்தை மறைக்க லோகேஷ் கையாண்டிருக்கும் ஆயுதம்... ஆயுதங்கள்தான். கொலைக்கு அஞ்சாத கூலிப்படையினரே பயன்படுத்தத் தயங்கும் கொக்கி, சுத்தியல் போன்ற பயன்பாட்டுக் கருவிகள் இந்தப் படத்தில் கொலைக் கருவிகளாகப் பிரயோகிக்கப்படுகின்றன.
ஒரு காட்சியில், அமைதியாக இருக்கும் நாயகன் தேவா (ரஜினி), தன்னை மிரட்டும் அடியாள் ஒருவரைக் கதிகலங்க வைக்க ஆடும் ருத்ரதாண்டவம், கொடூரக் கொலைக் காட்சிகளுக்காக இன்றுவரை பேசப்படும் ‘ஃப்ரைடே தி தேர்ட்டீன்த்’, ‘டெக்சாஸ் செயின்ஸா மசக்கர்’, ‘ஸா’, ‘தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ்’ போன்ற ஹாலிவுட் ஹாரர் படங்களின் காட்சிகளையே பின்னுக்குத் தள்ளக்கூடியது. சாமானியரைப் போலத் தோற்றமளித்து, எதிர்பாராத தருணத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்திரங்கள் இன்றைய திரைப்படங்களில் அதிகம் காணக் கிடைக்கின்றன. தேய்வழக்காகிப்போன (Cliche) இத்தகைய காட்சிகளைக் கூச்சமே இல்லாமல் பெரும் பொருட்செலவில் காட்சிகளாகப் படைக்கின்றனர் இன்றைய இயக்குநர்கள் பலர்.
சமூகத்தின் கடமை: தங்கள் பிரத்யேக முத்திரைகள் எனச் சில அம்சங்களை வலிந்து திணிப்பதை இந்த இயக்குநர்கள் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். தர்க்கரீதியில் மிகவும் பலவீனமான காட்சிஅமைப்புகளை வைத்துவிட்டு, அது தொடர்பாகத் திரைப்படச் சட்டகத்துக்கு வெளியில், ஊடகப் பேட்டிகளில் அந்தக் காட்சிகளின் பின்னணியில் கருதுகோள்கள் இருப்பதுபோல் ஊதிப்பெருக்குகிறார்கள். ஆனால், அந்தப் படைப்பில் செய்நேர்த்தியும் திரைக்கதை நம்பகத்தன்மையும் இல்லாமல் வெறும் வன்முறையே பிரதானமாக முன்வைக்கப்படும்போது, அதைக் கடுமையாகக் கண்டிப்பதும் புறக்கணிப்பதும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கடமை.
ஒரு பெருங்கூட்டம், எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒற்றைக் கதாபாத்திரத்தின் வார்த்தைகளைக் கேட்டு வன்முறையில் ஈடுபடுவதைப் போலவும், முதன்மைக் கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் வன்முறைக்கு இலக்காவது போலவும் தொடர்ந்து முன்வைக்கப்படும் காட்சியமைப்புகள் அபத்தம் என்பதைத் தாண்டி, மிகவும் ஆபத்தானவையும்கூட. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்களை எதிர்மறையாகச் சித்தரிக்காமல் அவர்களின் பராக்கிரமத்தின் புகழ்பாடும் வகையிலான காட்சிகளைத் தொடர்ந்து முன்வைப்பது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவரும் இன்றைய காலக்கட்டத்தில், கலைஞர்கள் பொறுப்பற்று நடந்துகொள்வதையே உணர்த்துகிறது. ‘லியோ’ படத்தில் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை வைத்தற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில், தொழில்முறை (!) எதிரிகளை ஒன்றாக நிற்கவைத்து அடித்து நொறுக்குவது, வரிசையில் அமரவைத்துச் சுட்டுத்தள்ளுவது என்று சித்தரிக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, தர்க்கம் என்பதையெல்லாம் தாண்டி, இத்தகைய படைப்பாளிகள் பார்வையாளர்களை எந்த அளவுக்கு மலினமாகக் கருதுகின்றனர் என்னும் கேள்வி எழுகிறது. வணிக வெற்றியின் பொருட்டுத் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுவரும் நெல்சன் திலீப்குமாரும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர்.
தன்னையும் தனது குடும்பத்தினரையும் தற்காத்துக்கொள்ள யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கின்ற - அதற்காக எந்த வகையிலும் குற்றவுணர்வே கொள்ளாத நாயகியை ‘கோலமாவு கோகிலா’ படத்தில் முன்வைத்த நெல்சன், அடுத்தடுத்த படங்களில் ரத்தக் களரியின் சதவீதத்தை அதிகரித்தார். நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில், வெட்டப்பட்ட தலை, கட்டிடத்துக்கு வெளியே தெறித்து விழும் காட்சியை மக்கள் குடும்பத்துடன் ‘கண்டுகளித்தனர்’!
சந்தை மதிப்புக்காகச் சமரசம்... - உச்ச நட்சத்திரமாகக் குழந்தைகள் மத்தியிலும் இன்றுவரை புகழுடன் திகழும் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் ஒருவரின் தலையை வெட்டும் காட்சி சந்தை மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு மூத்த நடிகர் எந்த மோசமான எல்லைக்கும் செல்வார் என்பதற்கு உதாரணம். அப்போதே இப்படியான காட்சியமைப்புகளுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தாலும், அவற்றுக்கு இத்தகைய இயக்குநர்கள் முகங்கொடுக்க முன்வரவில்லை.
வன்முறைக் காட்சிகள் தங்கள் பிரத்யேக பாணி என்று வாதிடும் இயக்குநர்கள், தங்கள் படைப்புகளுக்கு வணிக வெற்றியைத் தாண்டி, சமூகத்தில் அங்கீகாரத்தையும் கோரி நிற்பது வேடிக்கை. ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் வன்முறைக் காட்சிகள், அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஹாலிவுட் படங்களின் வன்முறை அம்சங்களை நகலெடுக்கும் நமது கலைஞர்கள் அத்தகைய படங்கள் குறித்து அங்குள்ள முன்னணி ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களையும் கவனிப்பது நல்லது.
நடைமுறையில் சாதாரணமாகத் தாக்கினால், ஒருவரை அறைந்தால் ஒரு வருடச் சிறைத் தண்டனை வரை கிடைக்கச் சாத்தியம் உண்டு. திரையில் சித்தரிக்கப்படுவது எல்லாமே கற்பனைதான் என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா என்ன?
குழந்தைகளிடம் சென்றுசேரும் வன்முறை: இன்றைய ஓடிடி யுகத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்களை, தொடர்களைப் பார்க்கும் திரை ரசிகர்கள், ரசனை மேம்பாட்டில் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டனர். இந்தியாவில் தயாராகும் பல வலைத் தொடர்களில் திரைக்கதை நேர்த்தியும், காட்சி உருவாக்கத்தில் நம்பகத்தன்மையும் காணக் கிடைக்கின்றன. ஆனால், தொழில்நுட்ப மேம்பாட்டைக் கைக்கொண்டுவிட்ட நமது திரைக் கலைஞர்கள், ஓரளவுக்காவது நம்பகத்தன்மை கொண்டதாகத் திரைக்கதையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை.
மாறாக, ‘ரத்தம் தெறிக்கத் தெறிக்க’ படம் எடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ‘கூலி’ திரைப்படத்துக்கு வயது வந்தோர் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது ஒருவகையில் ஆறுதல் அளிக்கிறது. ஆனால், ஓடிடி மூலம் வெளியாகும்போது, இத்தகைய படங்கள் குழந்தைகளிடம் சென்று சேராமல் தவிர்க்கப்படுமா என்பது கேள்விக்குறி.
தொலைக்காட்சிகளில் இந்தப் படங்கள் ஒளிபரப்பாகும்போது இத்தகைய காட்சிகள் (ஒருவேளை) நீக்கப்பட்டாலும், கதையின் தொடர்ச்சியே அடிபட்டுப் போய்விடும். அந்த அளவுக்குக் கதைக்குப் பதிலாக அடிப்படைக் கச்சாப் பொருளாக வன்முறையே இன்றைய பல திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது. இதனால், வன்முறை என்பது இயல்பாக்கம் (Normalization) செய்யப்படுகிறது. மனித மனங்கள் செயற்கையாக மரத்துப்போக வைக்கப்படுகின்றன.
அதீத வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டுவதைத் தாண்டி, ஊடக விமர்சனங்களும் இத்தகைய இயக்குநர்களிடம் காத்திரமான கேள்விகளை முன்வைப்பதில்லை. ஆபத்தான இத்தகைய போக்குக்கு முடிவுகட்ட, திரையுலகில் சமூகப் பொறுப்புடன் இயங்கும் கலைஞர்கள் முன்வர வேண்டும். தங்கள் ரசனையை மலினப்படுத்தும் கலைஞர்களைப் பார்வையாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் மாற்றம் நிகழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT