Published : 27 Aug 2025 06:30 AM
Last Updated : 27 Aug 2025 06:30 AM
இந்தியாவின் நகர்ப்பகுதிகள் போக்குவரத்து சார்ந்த கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நடந்துசெல்பவர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்களைப் புறக்கணிக்கும் வகையில் சாலைப் போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்படுவதால், நகரங்களில் சமத்துவமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள், காற்று மாசு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற சூழலை நகரங்கள் எதிர்கொண்டுள்ளன.
திட்டமிடலின்மை: இந்தியாவில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால், வளர்ந்துவரும் நகரமயமாக்கலுக்கு இணையாக நமது சாலை வசதிகள் திட்டமிடப்படவில்லை. அதன் விளைவாகவே, தேசிய அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின்றன. பெங்களூரு, லக்னோ, டெல்லி, புணே போன்ற நகரங்களில் சாலைத் திட்டமிடல் பிரச்சினை தீவிரமாகக் காணப்படுகிறது.
உதாரணத்துக்கு, பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதி. இந்நகரின் முக்கிய சவாலாகப் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இது பயணிகளுக்குப் பயண நேரத்தை அதிகரித்துச் சோர்வை உண்டாக்குகிறது. பெங்களூருவில் ஒரு நபர் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க, 30 நிமிடங்கள் தேவைப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
லக்னோவில் தனிநபர் வாகன உரிமையானது ஆண்டுக்கு 10-12% வளர்ச்சி அடைந்துவருகிறது. ஆனால், இந்நகரில் பொதுப் போக்குவரத்து வசதி விரிவாக்கம் மெதுவாகவே நடைபெறுகிறது. மேலும், முறைசாரா மின் ஆட்டோரிக் ஷாக்கள் இயக்கம் - ஒழுங்கற்ற திட்டமிடல்களால் சாலைப் போக்குவரத்தில் குழப்பம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 90க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. இதில் 88% தனிநபர் கார் - இருசக்கர வாகனங்கள்.
டெல்லி - கொல்கத்தா போன்ற நகரங்களில், போக்குவரத்து அதிகரிப்பினால் மாசு அதிகரித்து, முதன்மைச் சாலைகளின் அருகே வசிப்பவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் உண்டாகி, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் வாகனங்களின் ஆதிக்கமானது நகரங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து - மாசுபாடு போன்றவற்றை அதிகரித்து வருகிறது. இந்திய நகரங்களில், சாலை மேம்பாட்டுக்கான திட்டங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், மேற்சொன்ன பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்கப்பட்டுவிடவில்லை.
நமது சாலைகளும், மேம்பாலங்களும் நடந்துசெல்பவர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துபவர்களுக்குச் சாதகமாக வடிவமைக்கப்படாததால் அவர்களின் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்திய நகரங்கள் மக்களின் இயக்கத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், தனிநபர் வாகனங்களின் இயக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதே இப்பிரச்சினைகளுக்குக் காரணம் எனத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
வேக வரம்புகள்: நகர்ப்புற இயக்கத் திட்டமிடலில் வேகக் கட்டுப்பாடுகள் முக்கியமானவை. ஐரோப்பிய நகரங்களில் நடந்துசெல்பவர்களுக்கும் மிதிவண்டியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பிரத்யேகமாகச் சாலை வசதிகள் உள்ளன. ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வேக வரம்பு 30 கி.மீ. அல்லது 50 கி.மீ. ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது நடந்துசெல்பவர்களையும், மிதிவண்டியைப் பயன்படுத்துபவர்களையும் பாதுகாக்கிறது. ஆனால், இந்திய நகரங்களில், உதாரணமாக சென்னையில், பல இடங்களில் வேக வரம்பு 60 கி.மீ.ஆக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் அல்லது நெரிசலான சந்தைகள் போன்ற இடங்களுக்கு எனத் தனி வேக வரம்புகள் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.
கொல்கத்தா, சமீபத்தில் அறிவியல் அடிப்படையில் வேக வரம்புகளை அறிமுகப்படுத்தியது. நகர்ப்புறங்களில் 50 கி.மீ. என நிர்ணயித்ததுடன், சாலையில் ஆபத்து அதிகமுள்ள இடங்களில் வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் இம்முயற்சியைப் பிற இந்திய நகரங்களும் பின்பற்றினால், சாலை விபத்துகள் குறையக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்வுகள்: இந்திய நகரங்களின் சாலை இயக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மக்களின் இயக்கத்தை மையப்படுத்திய திட்டங்கள், அறிவியல் அடிப்படையிலான கொள்கைகள், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க வேண்டும். நகரின் இயக்கத் திட்டங்களை வடிவமைக்கத் தரவு சார்ந்த ஆராய்ச்சி - பயணிகளின் இயக்கம் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்.
பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துபவர்களை உள்ளடக்கி, நமது சாலைகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே நகர்ப்புற இயக்கச் சவால்களைத் தீர்த்துவிடாது. நமது சாலைகளின் உண்மை நிலையை உணர்ந்து அதற்கேற்ற திட்டமிடல்களை வகுக்க வேண்டும் என்பதை மத்திய / மாநில அரசுகள் உணர வேண்டும்.
பெங்களூரு, புணே, சண்டிகர் போன்ற நகரங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் சாலை விதிமீறல்களைக் கண்டறிதல், பொருத்தமான போக்குவரத்து சமிக்ஞைகள், நிகழ்நேரத் தரவு அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை உடனடியாகக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை நெரிசலைப் பொறுத்து சமிக்ஞைகள் தானாக மாற்றியமைக்கப்படுகின்றன.
நகரங்களில் பாதுகாப்பான, தனியாகப் பிரிக்கப்பட்ட பாதைகளை மிதிவண்டிகளுக்கு உருவாக்கிய இந்தியாவின் முதல் மிதிவண்டி நட்பு நகரமாக சண்டிகர் உள்ளது; சண்டிகரில் 200 கி.மீ.க்கும் மேல் தனி மிதிவண்டிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்களில் இவற்றைப் பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்கள், நகர்ப்புற இந்தியாவுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் அறிவியல்ரீதியாகக் கூடுதல் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நகரங்களில் அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்து காரணமாகத் தீவிரமாகியுள்ள காற்று மாசைக் குறைக்கப் பரந்த சாலைகள், மேம்பாலங்களைக் கூடுதலாக அமைப்பதும், மக்களிடம் மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அவசியம். பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், தனிநபர் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, நிலையான - சமமான நகர இயக்கத்தை உருவாக்கிட முடியும். இதற்கு அரசு - மக்களின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT