Published : 21 Aug 2025 06:54 AM
Last Updated : 21 Aug 2025 06:54 AM
சென்னப் பட்டணத்தில் காசிச் செட்டி, மைலப்ப கிராமணி போன்ற தனிநபர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதியின் பெயரில் உள்ள வீதிகளும், நேரடியாகச் சாதியின் பெயரிலான தெருக்களும் இருந்துவருகின்றன.
சமீபக் காலத்தில் தனிநபர்களின் பெயர்களின் பின்னுள்ள சாதிப் பின்னொட்டு நீக்கப்பட்டாலும், சாதிப் பெயரிலான தெருக்கள் இன்னமும் நீடிக்கின்றன. ஆனால், பட்டணத்துடன் வெவ்வேறு காலக்கட்டங்களில் இணைந்திட்ட பல்வேறு கிராமங்கள் சாதிக் குறியீடுகளைப் பொதுவாகக் கொண்டிருக்கவில்லை.
இதில் விதிவிலக்காகத் தேனாம்பேட்டை இருந்துவந்திருக்கலாம். இன்றும் வெள்ளாள தேனாம்பேட்டை அல்லது வன்னிய தேனாம்பேட்டை என்று அழைக்கப்படுவதைக் காண முடியும். அப்படியெனில், மற்றொரு தேனாம்பேட்டை இருந்திருக்க வேண்டும் என்கிற கருத்துக்கு இடமுண்டு. ஆம்! அது உண்மையும்கூட.
செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலுக்குத் தென் பகுதி தொடங்கி எல்டாம்ஸ் சாலையின் கிழக்குக் கோடியில் ஜான் புரூஸ் நார்டனுக்குச் சொந்தமாக இருந்த பவோபாப் தோப்பு வரையிலான பகுதியும், கிட்டத்தட்ட செனடாப் சாலை வரையிலும் வன்னிய தேனாம்பேட்டை என்றும், அதன் தென் பகுதி மௌபரீஸ் கபோலா வரையிலானது பள்ளி தேனாம்பேட்டை என்றும், எல்டாம்ஸ் சாலையின் மேற்குப் பகுதி, மாம்பலம் ஏரியின் கிழக்குக் கரைப் பகுதி நியூ தேனாம்பேட்டையாகவும் அன்றைய நிலப்படங்களில் காணப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்கள்: 1865இல் டூலாக் மதராஸில் சாக்கடைப் பாதைகளை வரையறை செய்து வெளியிட்ட நிலப்படம் சென்னப் பட்டணம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஒன்றை விவரணம் செய்கிறது. பட்டணத்தில் உள்ள பறச்சேரிகளை விரிவான அளவில் குறிப்பிட்டுக் காட்டும் நிலப்படமாக இது இருக்கிறது.
காசிமேடு அருகில் வர்தன்சேரி, ராயபுரம் அருகில் பொர்கிசேரிபட்டி, வியாசர்பாடி ஏரியின் கிழக்கில் ஒரு பறச்சேரி, வடக்கில் உப்பிலிபாளையம், தெற்கில் சக்கிலிபாளையம், மேற்கில் செம்பியம் அருகில் இரண்டு தனித்தனி பறச்சேரிகள், தாண்டவராய சத்திரம் அருகில் பள்ளிக்குப்பம் எனக் கிட்டத்தட்ட 19 பகுதிகளைத் தீர்க்கமாக அறிய முடிகிறது.
இவை தவிர, 1924இல் வெளியான ஆண்டுப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தெருக்கள் பட்டியலில் பறையர்கள் வாழ்விடத்தைப் பெயரின் பின்னொட்டாகக் கொண்டிருக்கும் தெருக்களும் இருந்திருப்பதைக் காண முடிகிறது. ஜகநாதபுரம் பறச்சேரி (நுங்கம்பாக்கம், டிவிஷன் 22) சின்னதம்பி போகிப்பாளையம் தெரு (பெரம்பூர், டிவிஷன் 16) கொண்டித்தோப்பு பறச்சேரி தெரு (பெத்து நாயக்கன் பேட்டை, டிவிஷன் 12) உள்ளிட்ட தெருக்களில் அன்றைய தினம் பறையர்கள் அல்லாதோர் வாழ்ந்து வந்திருக்கும் வாய்ப்பு குறைவே.
இதுபோன்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சென்னப் பட்டணத்தில் பொதுவாகச் சேரிகள் என்றில்லாது பறச்சேரிகள் அல்லது பறச்சேரித் தெருக்கள் என்று திட்டவட்டமாக வரையறை செய்யப்பட்ட இப்பகுதிகளில் ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்கள் 1800க்கு முன்னரே தங்களின் வாழ்நிலையைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
வடக்கில் சென்னை சின்னம்மாபேட்டை ரயில் பாதையையும், தெற்கில் நுங்கம்பாக்கத்தில் ஆர்க்காடு சாலையையும், மேற்கில் கீழ்ப்பாக்கத்தையும், கிழக்கில் கோட்டையும் அடக்கிய இப்பகுதிக்குள் பறச்சேரிகள் என்று எதுவுமே டூலாக்கின் நிலப்படத்தில் குறிப்பிட்டுக் காட்டப்படாதது விநோதமாக இருக்கிறது.
கிளைவ் பாட்டரி, புரசைவாக்கத்தில் மனநோய் மருத்துவமனையை ஒட்டிய பிரிக்கிளின் சாலை, பாடிகார்டு சாலை, பெரியமேடு, பேசின் பாலத்தை ஒட்டிய மூலக்கொத்தளம், மாடிப் பூங்காவை ஒட்டிய நகர எல்லைச் சுவரின் மேற்குப் பகுதி, சேத்துப்பட்டில் ஸ்பர்டாங்குக்கும் கூவத்துக்கும் இடைப்பட்ட பகுதி, ஆயிரம்விளக்கில் மக்கீஸ் தோட்டம், வியாசர்பாடியை ஒட்டிய எருக்கஞ்சேரி போன்ற பகுதிகளில் காலங்காலமாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்திருப்பதை இன்றும் அறியலாம்.
ஆயினும் டூலாக் நிலப்படத்தில் மேற்கண்ட இடங்களிலும் கோட்டைக்கு அருகாமையிலும் பறச்சேரிகள் என்று பிரத்யேகமாகக் குறிப்பிடப்படவில்லை. அதே தருணத்தில், கோட்டைக்கு அருகில் படகுத் துறையும் மீனவர்களின் குடிசைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நகர உருவாக்கத்தில் பங்களிப்பு: துறைமுகம், ரயில் பாதை போன்ற கட்டமைப்பைப் பட்டணத்தில் உருவாக்கியதில் பெரும் பங்களிப்பினைத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினர் கொண்டிருக்கின்றனர். கால நேர வரையறையின்றித் துறைமுகத்தில் சுமைகளை ஏற்றி இறக்கும் பணிகளை மேற்கொண்டோர், மணியடித்தவுடன் வர வேண்டி இருந்தமையால், அருகில் வெட்டவெளிகளில் தங்கியிருந்தனர். அவர்கள் வாழ்விடங்களை ஒட்டிய பகுதிகள் மேம்பட்டுப் பாதைகள் உருவான பின்னர், அவர்கள் நடைபாதைவாசிகளாகப் பெயர் மாற்றமடைந்தனர்.
இதுதான் பட்டணத்து நடைபாதைவாசிகளின் ஆதியாகமம். இவ்வாறுதான் ரயில்பாதை அமைப்பதில், அதையொட்டிய பகுதிகளில் மேற்கொண்டுவரும் பணிகளின் பொருட்டு, அவர்கள் தங்கியிருந்தது பின்னாளில் சேரிகளாகின. இத்துடன், பணியிடத்துக்கும் வாழ்விடத்துக்கும் இடையில் போக்குவரத்துச் சாதனங்கள் என்பது பெயரளவுக்குக்கூட இல்லாமையும் இதன் காரணியாக அமைந்து இருக்கலாம்.
இன்றும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை ஒட்டிய பகுதிகளில் முறைப்படுத்தப்படாத பல்வேறு தொழில்கள் நடை பெற்றுவருவதையும், அப்பணிகளில் ஈடுபடுவோர் அந்தந்தக் கால்வாய்களின் ஓரத்தில் குடிசைப் பகுதிகளை அமைத்துக்கொண்டு, பாதுகாப்புக்காகப் புகழ்பெற்ற அல்லது செல்வாக்கினைச் செலுத்தக்கூடிய மனிதர்களின் பெயர்களைத் தெருப்பெயர்களாகச் சூட்டிக்கொண்டு வாழ்ந்துவருவதைக் காண முடியும்.
இவற்றைக் கணக்கில்கொண்டுதான் கர்னல் ஆல்காட் பஞ்சமருக்கான இலவசப் பள்ளிகளை அவர்கள் இருப்பிடங்களுக்குள்ளேயே தொடங்கி இருக்கிறார். தேனாம்பேட்டை தாமோதர் பள்ளி, அடையாறில் ஆல்காட் பள்ளி போன்றவையும் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணாம்பேட்டையில் உள்ள பள்ளியில் மாலை நேரத்தில் பெரியவர்களுக்குத் தமிழ், தெலுங்கு மொழிப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல்களை மதராஸ் டைம்ஸின் ஆல்மனாக் அளிக்கிறது.
இணைந்து வாழ்ந்தனர்: கிராமங்களில் இருந்துவந்த சேரியமைப்புகள் பல்வேறு கிராமங்களின் ஒருங்கிணைப்பில் உருவான பட்டணத்திலும் தொடர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி, பட்டணத்தில் வர்த்தகம் செய்துவரக்கூடிய அல்லது அலுவலக வேலையில் இருந்துவரும் ஆங்கிலேயர்களின் முகவரியாகவும் 1857லேயே இவை இருந்திருக்கின்றன.
காலணி தயாரிப்பாளர் ரிச்சர்ட் ரேமாண்ட், இசைக் கருவிகளை ட்யூன் செய்வதோடு பழுது பார்க்கக்கூடிய ஏ.ஆர்.ட்டி.மார்ட்டின், நகை விற்பனையாளர் ஜே.ஜே.ஸ்டேரேஸி என்பவரும் பறச்சேரிகளைத்தான் தங்கள் இருப்பிடங்களாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.
நிறுவனங்களிலும் கம்பெனி நிர்வாகத்திலும் பணியாற்றக்கூடிய உத்யோகஸ்தர்களின் முகவரியாகவும் இச்சேரிகள் இருந்துவந்திருக்கின்றன. சமூகத்தின் இதர பிரிவினர் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து வாழ்ந்திடத் தயங்கும் கட்டத்தில், போர்த்துக்கீசியர்களும் ஆங்கிலேயர்களும் இதர வெளிநாட்டவர்களும் பறச்சேரிகளை வாழ்விடங்களாகக் கொண்டு அவர்களுடன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பறச்சேரிகளில் குடியிருக்கக்கூடிய மக்களை வெளியேற்றாது, அங்கேயே ஒழுங்கமைக்கப்பட்ட குடிசை வீடுகளை உருவாக்கி, கழிப்பறை, குடிநீர், சாலைகள் போன்றவற்றை ஒழுங்கமைப்பது தொடங்கியது. அத்துடன், அப்பகுதிகள் ‘மாடல் லைன்’ என்கிற பெயரினையும் பெற்றன.
அந்நாளில் வீரன் பறச்சேரி பட்டணத்தின் பெரிய குடியிருப்புப் பகுதி என்று சொல்லப்பட்டாலும், சுபாரிகுண்டா பறச்சேரியில் 200 வீடுகள் முறைப்படுத்தப்பட்டிருந்த 1915ஆம் ஆண்டு மாநகராட்சி அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.
இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலோ இந்தியர்களுக்கான மாதிரிக் குடியிருப்புகளைக்கூட அன்றைய 12 மற்றும் 13ஆவது டிவிஷனுக்கு உட்பட்ட நரியங்காட்டில் மாநகராட்சி உருவாக்கி இருக்கிறது. இது பின்னாளில், புதுப்பேட்டைக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. நூற்றாண்டின் இறுதிக்கட்டம்வரை இத்தகைய முயற்சிகள் தொடர்ந்துவந்தன. பின்னரே, மதராசப் பட்டணத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பினைக் கொண்ட இவர்களை நகரத்துக்கு அப்பால் குடியமர்த்தும் புதிய முயற்சிகள் தோன்றின.
பூர்வகுடிகளின் முக்கியத்துவம்: பறச்சேரிகள் என்றோ ‘மாடல் லைன்’ அல்லது குடிசைப் பகுதிகள் என்றோ பெயரிடப்பட்ட பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டு இருந்தவர்கள், அவர்களைச் சுற்றியுள்ள பெருமக்கள் சமூகத்தைச் சார்ந்த வாழ்முறையைக் கொண்டிருந்தனர்.
நகரின் கட்டமைப்பை மேம்படுத்துவது அல்லது ஆற்றுப் படுகைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுவது என்கிற பெயரில் இவர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு, நகரத்துக்கு வெளியே பல கி.மீ.களுக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பல்வேறு நகர்களில் குடியமர்த்தப்படுகின்றனர்.
அவை கான்கிரீட் சேரிகளே அன்றி, வேறில்லை. ஆயிரக்கணக்கில் இங்கே இடம்பெயர்ந்த அனைவருமே நகர மக்களைச் சார்ந்த பணிகளை மேற்கொண்டவர்களாக, அண்டிப் பிழைப்போராக இருந்தவர்கள். இத்தகைய இடப்பெயர்வு அவர்களின் வருவாய் ஆதாரத்தை, குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை, பண்பாட்டைத் தலைகீழாக மாற்றியது மட்டுமல்லாமல், நகர மக்களோடு இணைந்து நின்ற அவர்களின் கௌரவமான வாழ்நிலையை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது.
கடந்த காலங்களில் பல்வேறு கட்டுமானங்கள், ஏற்றுமதிக்கான உற்பத்தி நடவடிக்கைகள், உள்ளூர்த் தேவைக்கான உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் போன்றவையே பல்வேறு கிராமங்களின் ஒருங்கிணைப்பில் உருவான மதராஸைப் பட்டண மாக்கியிருக்கிறது.
இந்த மாற்றத்தில் ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர், ஆர்மீனியர், யூதர்கள் போன்ற வெளிநாட்டவர் மட்டுமன்றி, இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருமே சாதி, மத, மொழி பேதமின்றி பங்காற்றலைக் கொண்டிருந்திருக்கின்றனர். தங்களது மகத்தான உழைப்பினை அளித்த தோடன்றி இன்றும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தக்கூடியவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள். அனைவருக்குமே உரியதான இந்தப் பட்டணத்தில் பூர்வகுடிகளுக்கு இடமில்லை எனில், இது எப்படி மாநகராக இருக்க முடியும்?
- தொடர்புக்கு: veeorr52@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT