Published : 16 Jul 2025 06:41 AM
Last Updated : 16 Jul 2025 06:41 AM
மருத்துவக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்கள் - குழந்தைகள் நலப் பராமரிப்பு, தொற்றுநோய் - தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு சிறப்பாகவே தொடர்கிறது.
திட்டமிடப்பட்ட சுகாதாரக் கட்டமைப்புகள், ஆக்கபூர்வமான திட்டங்கள், உயர்தரச் சிகிச்சைகள் போன்றவை இதற்கு அடித்தளமாக உள்ளன. சுகாதாரத் துறையின் இத்தகைய நிறைகளுக்கு மத்தியில், சில குறைகளும் நீடிக்கின்றன. பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது, மருத்துவத் துறையினரின் வேலைப் பளு போன்றவை தமிழக சுகாதாரத் துறைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.
சாதனைத் திட்டங்கள்: தாய் - சேய் நலம், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு முதன்மையான திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் மூலம், பொருளாதாரம் - சமூகரீதியாகப் பின்தங்கிய கர்ப்பிணிகளுக்கு நிதி - ஊட்டச்சத்து ஆதரவை இத்திட்டம் வழங்குகிறது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், எட்டு தொடர் சிகிச்சைகள், 52 பரிசோதனை முறைகள் அடங்கியுள்ளன; இதன் மூலம் வருமானத்தில் பின்தங்கிய மக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பை அரசு வழங்கிவருகிறது.
2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம், நீரிழிவு - உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் மக்களின் வீடுகளுக்கே கொண்டுசெல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. காசநோய் இறப்பை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகச் செயல்படுகிறது. 2022இல் தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் மூலம் 10-20% காசநோய் இறப்புகள் குறைந்துள்ளன.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகமானது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கொள்முதல் - விநியோகத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து, அதைத் தடுக்கும் வகையில் சமுதாய அடிப்படையிலான புற்றுநோய்ப் பரிசோதனைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பயன்கள்: தாய் - சேய் நலத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் குழந்தைகள் - தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தாய் இறப்பு விகிதம் 2023-2024இல் 45.5 ஆக இருந்த நிலையில், 2024-2025இல் இது 39.4 ஆகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 2023-2024 இல், 8.2 ஆக இருந்தது; 2024-2025இல் 7.7 ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தின் சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு (HMIS) வெளியிட்ட அறிக்கை இதை உறுதிசெய்கிறது.
மேலும், ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம், 2023-2024இல் 8.9 ஆக இருந்த நிலையில், 2024-2025இல் 8.2 ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் உயர் ரத்த அழுத்தம் - நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களுக்கு, ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டில் உள்ள விகிதம் 17% ஆக (முந்தைய அளவு 7.3%) உயர்ந்துள்ளது. அதேபோல், நீரிழிவு நோயாளிகளில், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ள விகிதம் 16.7% ஆக (முந்தைய அளவு 10.8%) உயர்ந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் 2025, மார்ச் வரை 2.24 கோடி பேர் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிரப்பப்படாத பணியிடங்கள்: தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவடைந்துவரும் அதேநேரத்தில், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தொடரும் தாமதம் - புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாதது ஆகியவை தமிழக சுகாதாரத் துறையில் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றன.
தமிழகத்தில் உள்ள 8,488 துணை சுகாதார நிலையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதாரச் செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 50% பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணியில் உள்ள கிராமப்புறச் சுகாதார செவிலியர்களுக்குப் பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்தியப் பொது சுகாதாரத் தரநிலையின்படி (IPHS), நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்பப் பணியாளர்களின் எண்ணிக்கை உயரவில்லை என மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், முதன்மை சுகாதார நிலையங்களுக்கு ஏறக்குறைய 3,500 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், இரண்டாம் - மூன்றாம் நிலைகளில் உள்ள பராமரிப்பு நிலையங்களில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாவே தொடர்கிறது.
குறிப்பாக, இதய அறுவைசிகிச்சை - ரத்த நாள அறுவைசிகிச்சை போன்ற மிக உயர்நிலை நிபுணத்துவப் பிரிவுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது; உளவியல் மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களே நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். இத்தகைய சூழலில், மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்கிற கேள்விகள் எழுகின்றன.
மதுரை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் - செவிலியர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகச் செயல்பாட்டாளர்களும் விமர்சிக்கின்றனர். குறைந்த ஊதியம் - அதிக பணிச் சுமை காரணமாக அரசு மருத்துவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.
துரித நடவடிக்கை தேவை: தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்; மருத்துவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து காலி மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
கர்ப்பிணிகள் இறப்பைக் குறைக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனினும், மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே தாய் - சேய் இறப்பைக் குறைப்பதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியும்.
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் கட்டுப்பாட்டு வரம்புகள் நீக்கப்பட வேண்டும்; இத்திட்டத்தில் பங்கேற்கும் சில தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பயன்படுத்தி, அதற்கு மேலும் கூடுதல் கட்டணம் பெறுவதாக எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு மேம்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், அதிகப் பணிச்சுமை கொண்ட சுகாதாரப் பணியாளர்களால் அதன் செயல்திறன் பாதிக்கப்படக்கூடும். இதைச் சரிசெய்ய, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு துரிதமாக இறங்க வேண்டும். இதில் அலட்சியம் தொடர்ந்தால், மருத்துவ சேவை பாதிக்கப்படுவதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையும் சீர்குலைந்துவிடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT